தாரகையின் வேதனை
செங்கதிரோனின் ஆட்சியிலே
பூமியதன் அணலை குளிர்விக்கும் தண்மதியோடு
புலம்பெயர்ந்தேன் நானும்
காலங்கள் மாறியதனால்
காட்சியும் மாறியது.
சிறார் கூட என்னை
ஓவியத்தில் தீட்டவில்லை.
தாரகையான என்னை மறந்தீரோ.
ஆங்கில பாடலில் அணிவகுப்பில் மட்டும் தானோ?
காரியிருளில் எனை காணாது
தேடியவரும் யாருமுண்டோ
பேரண்டத்தில்
வெறுமையை களையவே
பெதும்பையிவள் போராடுகிறாள்.
வான்தேவதை கூடையேந்தி
வர்ணம் கூட்ட விண்மீனை பொருத்துகிறாள்
ஆலி வரும் பொழுது மட்டும்
ஒளிந்து நில்லென்ற கட்டளையோடு.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment