Posts

Showing posts from December, 2017

மாயா கண்ணன்

Image
மாயா கண்ணனின் அழகில் மயங்கிய மாது ராதையே... கண்ணனே... உன் மனதைப்  பறித்து போன மன்மதேனே... கருமைதான் உன் நிறமென்றாலும் மங்குவதில்லை காதலுமென்றும் அளவில் குறைவதில்லை இதயத்தில் அமர்வாய்... இடையினை தொடுவாய்... இணைவாய் தருவாய் உன் போன்ற உருவிலொரு சிசுவாய் உந்தன் அணைப்பொன்றை பெற துடித்திடவே உந்தன் ராதையை ஏங்கச் செய்கின்றாய்.... நாவில் ருசியில்லை... நலிந்தும் போனேனே... நாமெனும் பந்தத்தில் மீண்டும் துளிர்ப்போமே... கோபியர்  கொஞ்சும் கண்ணனே - நீ கோகுலத்தில் சீதைக்கு உரியவனாகவே வந்திடு! கொஞ்சும் தமிழில் கதை அளாவி வஞ்சமின்றியே காதல் மழை பொழிந்துவிடு ! கண்ணன் ராதை காதலை போல் காவியத்தில் என்றும் பெயரை நிலைநாட்டுவோம் .                                            --பிரவீணா தங்கராஜ் .

உன்னை ஒன்று கேட்பேன்

Image
நிலவுப் போல தேய்கின்றேன் நித்திரை யின்றி வாடுகின்றேன் சூரியன் போல வதைத்தாலும் உன் வெட்பத்தையே நாடுகின்றேன் உன்னை ஒன்று கேட்பேன் உண்மைச் சொல்லிச் சென்றிடு ஞாயிறு திங்கள் போலில்லாமல் வானமாக என்னுடன் வாழ்வினில் பங்குக் கொள். வசந்தத்தை கையினில் ஏந்தியே ... வளமாக மாற்றிடலாம் வாழ்வையே ...                                 -- பிரவீணா தங்கராஜ்.                   

புன்னகை விதை

வெண்மை , கருமை வேறுபாடு யில்லா புன்னகை ஏழ்மை , செழுமை பார்க்காத புன்னகை முகத்தில் கரையும் நகைப்புக்கு நாட்கள் கூடுதலே  ! பல முகமூடி அணிந்து செல்லாதே ! சிறு புன்னகை மட்டுமே அணிந்து சிறக்க வாழ்ந்திடு !                           --பிரவீணா தங்கராஜ் .

*வானக்கடலில் ஓடி விளையாடுவோம்!!*

வானவில்லை ஏணியாக்கி மேகத்திரை விலக்கிச் சென்று வானக்கடலில் ஆடி மகிழ்வோம் குட்டிப் பெண்ணோ வானகடலில் நட்சத்திர மீன் பிடித்து சிரிக்கையிலே... சுட்டி பையன் நிலவுதனை எட்டி உதைத்து  மகிழ்ந்திடவே... வானக்கடலில் மேக அலையில் சிப்பி பொருக்கி களித்திடுவோம் கற்பனை யில்லா கனவில்லாது சிறகை விரித்தே பறந்திடுவோம் வானவில்லின் ஏணியினை வாசமிக்க மலரினைக் கொண்டு அலங்கரிப்போம் நிஜ உலகுக்கு செல்லாது இங்கேயே நிஜமாய் வானக் கடலில் ஆடிமகிழ்வோம் .                              -- பிரவீணா தங்கராஜ் . 

காதல் பிதற்றல் - 19

உன் பெயரை எழுதும் போது மட்டும் பேனா மை அதிகம் கசிகின்றது  உன் பெயருக்கு முத்தமிடுகின்றதோ ...?!                  -- பிரவீணா தங்கராஜ் .

👉எனது கிறுக்கல்கள்👈

வறுமைகள் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum                   *** மணல் திருட்டு – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum         *** தோற்பது தந்தை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum                   -- பிரவீணா தங்கராஜ் .

கோலங்கள்

Image
வாசலடைத்து கோலமிட்டு வரப்பாக செம்மனிட்டு கோமாதா சாணம் உருட்டி பூசணிப் பூ சூடி கண்டுமகிழ்ந்த காலமெல்லாம் கனவாகப் போனது அடுக்குமாடி கட்டிட வாழ்க்கையில் ஸ்டிக்கர் கோலங்கள் .                                  -- பிரவீணா தங்கராஜ் .

ஆட்கொள்கின்றாய் காதல் பிதற்றல் - 18

நான் ஒன்றும் அழகியில்லை என்றுதானே ஐம்புலன்களின் ஒன்றான உதடு சொல்லியது. இருந்தும் அதை உன் கூர்மையான மீசைமுடி கொண்டு ஆட்கொள்(ல்ல)ள   வருகின்றாய் நியாமா ...?!      --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -17 அறிவியல் கூற்று

சூரியனின் அருகே செல்லமுடியதாம் அறிவியல் கூற்று பொய்யானது உன்னருகே நான் வந்துவிட்டேனே ...!                 --பிரவீணா தங்கராஜ் .

பைத்தியக்காரன்

பணத்திற்கும் பகட்டிற்கும் பரவசமில்லா பரதேசியவன் இருக்குமிடம் தெருச் சாலை உடுத்துமாடை கிழிசல் என்றெல்லாம் கவலைப்படாத ஜென்மம் அவன் சொர்க்கம் , நரகம், இன்பம், துன்பம் உணவு, உறக்கம், உறவு இத்யாதிகளை துச்சமென எண்ணுபவன் பணத்தை கூட காகிதமென்பவன் ஞானியின் சிந்தனையுடைய இவனை ஞானியென்று கூறுவர் சிலரே பலருக்கோ இவனொரு பைத்தியக்காரன் அப்படியெனில் ஞானிக்கும் பைத்தியக்காரனுக்கும் வித்தியாசமில்லையோ..?!                             -- பிரவீணா தங்கராஜ் .

தமிழ் மகளே ...!

தமிழ் மகளே ... உனக்கு மரபு கவிதையெனும் சேலைக் கட்டவே துடிக்கின்றேன் முடியவில்லை 'சல்வார்' , 'சோளி' போல புதுக்கவிதை , வசனக்கவிதையே அணிவிக்கின்றேன் . ஹைக்கூ-யெனும் அணிகலன்களையும் மாட்டிவிடுகின்றேன் இதுவும் உனக்கு அழகு சேர்க்கத் தான் செய்கின்றது . எதுகை, மோனை, இயைபுவென  சில நேரத்தில் அணிகலன்களாக மெருகேற்ற  அணிவித்தாலும் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீரென அணிகலன் புகட்டவே ஆசையெனக்கு என்றாவது ஒருநாள் உனக்கு மரபு கவிதை அணிவித்து வெண்பா அணிகலன் பூட்டி அழகுப் பார்ப்பேன் என் தமிழ் மகளே... என்னுள் ஞானவொளி ஏற்று .                  -- பிரவீணா தங்கராஜ் .

* தன்னம்பிக்கை*

தன்நம்பிக்கை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

சகிப்பினை கையாளு

மூக்கினை பொத்தி செல்லாதே ... பாதணி படாது நடக்காதே ... உன்னை போல் ஒருவன் தான் ஆற்றில் குதிப்பதுப் போல் கழிவில் இறங்கி துப்பரவு செய்கின்றான் அந்த கணத்தில் மட்டுமாவது அவனையும் மதித்து சகிப்பினை கையாளு...!              -- பிரவீணா தங்கராஜ் .

என்ன சொல்லி விட்டேன்...

வெண்மேகத்தின் சாரல் நீ.... வானவில்லின் குடையாக நான் சோலையில் பூத்திடும் மலர் வாசம் நீ ... மாலையில் பருகிடும் பனித்துளி நான் என்று தானே இருந்தோம் எதனால் இந்த சினமே ...?! கமலினி முகம் கவலை கொண்டதேனோ .... என்ன சொல்லி விட்டேன் . நம் காதலில் பெரும் சதவீதம் என் அன்பு என்றேன் வேறொன்றுமில்லையே...                           -- பிரவீணா தங்கராஜ் .

நடைபாதை கடைகள்

கூவி கூவி விற்றாலும் கூறுக் கட்டி வைத்தாலும் இன்று பறித்த காய்கனியை வாங்க  மறுப்பதேனோ ...? நாட்கள் வாரங்களாகின குளிரூட்டப்பட்ட அறையில் வளமாக அமர்ந்துக் கொண்டு தோள்பைக்கும் சேர்த்தே காசை வசூலிக்கும் இடத்தில் தான் வாங்கத் தோன்றுமோ ? ஏன் விற்பவனின் கசங்கிய ஆடையும் அழுக்குப்  படிந்த முகமும் , குளிர்அறையில் இருப்பவனுக்கு இல்லையென்றா...?! இரண்டில் நமக்கு ஆரோக்கியம் எதுவோ ? யாமறிவேன் யாருமறிவனரோ பரம்பொருளே !           --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல்-16 இரசிக்க செல்கின்றது

ஆயிரம் சண்டைகள் நமக்குள் வந்து செல்லும் போதும் கூட சண்டையின் இடைவெளியில் உன் விழியை சந்திக்கும் போது சில நொடிகள் கண்களை  இரசிக்க தான் செல்கின்றது என் மனம்     -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல்-15 ஹைக்கூ நீயடா

ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் இடத்தில் ஒரு வார்த்தையில் பேசி செல்கின்றாய் ... அப்பொழுதுதான் உணர்ந்தேன் ஹைக்கூ-வும் சிறந்ததென்று .        - பிரவீணா தங்கராஜ் .

ரொட்டித்துண்டு

அடுமனை அருகே நிச்சயம் உணவிருக்கும் ஈன்ற குழந்தைக்கு உணவைத் தேடி ஓடித்  தான் புறப்பட்டேன்  கண்டேன்  கவலையுற்றேன் ஒரு சிப்பம் அடங்கிய ரொட்டித்துண்டுகள் இருக்கவே  செய்தன ... கூடவே , பிறந்த சில மணித்துளிகளான குழந்தையும் தான் . யாரோ யாருடனோ கூடலில் பெற்ற குழந்தை தான் அவ்வழி சென்றவர்கள் எல்லோரும் 'எந்த நாய் ஜென்மங்கள் இப்படி பெற்றெடுத்து குப்பையில் போட்டனர்களோ ' வென சொல்லாமல் இல்லை சிறிது நாழிகையில் இறந்த சிசுவை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர் கண்ணில் கண்ணீரோடு சிப்பத்தை கவ்வியபடி நான் ஈன்ற என் ஐந்து செல்வத்தின் முன் போட்டேன் சண்டை போட்டாலும் பகிர்ந்தே உண்டு முடித்தனர் எனக்கும் உணவு இருக்கத்தான் செய்தன ஏதோவொன்று சாப்பிட தடுத்தது மனித குழந்தை தான் - அது ஒன்றும் நான் பெற்று எடுத்த நாய்குட்டிகள் அல்ல .. இருப்பினும் ஏனோ ... ஏதோ... ரொட்டித்துண்டினை சாப்பிட தடுத்தது .                     -- பிரவீணா தங்கராஜ் .

நான் பெண்

மென்சாரால் மேகத்தினுள் இறங்கி மென்பாதத்தில் தேடி ஓடி வந்திட , அதற்கு கண்ணாமூச்சி காட்டியப்படி அரசுப் பயணியர் நிழற்குடையில் ஒதுங்கிட, என்னை போலவே சிலர் மென்சாரலுக்கு கண்டு உவகையோடு உள்வந்தனர். சொட்டு சொட்டாய் சொட்டுகையிலே - என் சொர்க்கமாக கண்டுலயித்தேன்- எங்கிருந்தோ துர்நாற்றம் புகை வந்துவீச திரும்பினேன் துருவனோருவன் புகைத்துக் கொண்டுயிருந்தான் மழையென்றால் என்போன்றோர் இரசிக்க மண்போன்றோர் புகைப்பார் போல நமக்கேன் வம்பென பேருந்தினை எதிர்நோக்கினேன் நங்கையொருத்தி வயிற்றில் சிசுவோடு இரும்பிட இம்முறை அமைதிகாக்க மனமொப்பவில்லை... இதே ஆணாக பிறந்திருந்தால் தவறை எடுத்துரைபேனோ ? நான் பெண்ணாக பிறந்துவிட்டேனே ...😔 நானெனும் உள்மனம் சினத்தைமட்டும் தகிக்க கனல்களை கண்களில் கொண்டு வந்தேன் -என் கண்களில் அவன் தவறை கண்டு உணர்ந்தானோ ?! அவனே ' சாரி சிஸ்டர் ' என்று ஆங்கிலத்தில் நயமாக சொல்லி நகர்ந்தே போய்த்தொலைந்தான் நானும் உணர்ந்தேன் அப்பொழுதுதான் ஆணின் பேச்சில் புரியவைக்கும் ஒன்றை பெண்ணின் பார்வை கூட உணர்ந்திட இயலுமென்று இம்முறை நிமிர்ந்த நடையுடன் கூறிக்கொன்டேன் என் மனதிடம்-ந

கவிதையே

நான் கவிதைகளை அள்ளி பருகிக்கொண்டு இருக்கின்றேன் குறையவேயில்லை தமிழென்ற அட்சயபாத்திரம் -- பிரவீணா தங்கராஜ்.

இழுவை

கோவில் கோபுரத்தினை விழி அகற்றாது பார்த்துக்கொன்டே சென்ற என்னை , கோவிலின் இருபுறம் பூக்கடை மட்டுமில்லை பொம்மை கடையும் உண்டென குழந்தையின் கை இழுவை உணர்த்தின .          -- பிரவீணா தங்கராஜ் .

நேரம்

மனிதனின் நேரங்களை விழுங்கிக் கொண்டிருந்தன தொலைக்காட்சியும் அலைபேசியும் தற்போது அந்த வரிசையில் முகநூலும் ...               -- பிரவீணா தங்கராஜ் .

வெற்றி

Image
வெற்றியே... நீ என்னை தேடி வருவதென்றல் அதிஷ்டத்தை துணைக்கு கூட்டிக்கொண்டோ சிபாரிசினை அழைத்துக்கொண்டோ வந்துவிடாதே  அதை ஏற்கவும் தயாராகயில்லாத திமிர்பிடித்தவள் நான் . நீ என் திறமையெனும் தோழிக்காக மட்டுமே என்னை வந்து சேர் .         *** தோல்வியே... நீ என்னை முத்தமிட்டுக்கொன்டே இரு. எனக்கு வெற்றி வரும்வரை ...              -- பிரவீணா தங்கராஜ் .

🐕 நாய்கள் ஜாக்கிரதை 🐕

Image
நீயோ வெண்மையாகவும் மிருதுவாகவும்  அழகாக இருக்கிறாய் ... கண்கள் கூட  பிரகாசமாக தான் ஜொலிக்கின்றன... அருகே வந்து அரவணைக்க தான் தடுக்கிறது உன் கூரிய பற்கள் கண்டு .🐕                 -- பிரவீணா தங்கராஜ் .

காட்சியகம்

நாளை எங்கள் வீட்டில் காட்சியகம் நீங்கள் நினைப்பது போல் புத்தக காட்சியகமோ அறிவியல் காட்சியகமோ இல்லை காபி பலகாரம் வழங்கி காட்சிபொருளே தலை தாழ்த்திநிற்கும் கண்டு பிடித்தால் திருமண வைபோகம் கண்டும் பிடிக்காவிட்டால் காட்சிப்பொருளாக மீண்டும் தொடரும் ...😔                 -- பிரவீணா தங்கராஜ் .

யாசகம்

அவன் யாசகம் கேட்டு கொண்டியிருந்தான் அருகில் இருக்கும் பேருந்தில் தான் பலரும் சில்லறை கொடுக்க தயங்கினர் பள்ளிமாணவன் தோற்றமாதலால் சிலரின் கருத்தோ படிக்கும் வயதில் பிச்சையா ? சிலரின் எண்ணமோ உடலின் நலமிருக்க எதனால் ? அவனிடமே கேட்டுவிட்டேன்  . யாருமில்லாத அவனுக்கு திருடி பிழைக்க மனமில்லையாம் அதற்கு பிச்சைக்காரனாக இருப்பதே மேலானதென சொல்லி இடம் பெயர்ந்தான் வேறேங்கே பிச்சை கேட்டுத்தான் .... நீங்கள் கேட்பது புரிகிறது நீ என்ன செய்தாய் .... கேள்வி எழுப்பாதீர்கள்  என்னால் இயன்றது ஒரு நாணயத்தை வழங்கினேன் வேறு என்ன செய்ய வேலை தேடும் இளைஞன் நான் .                       -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 14

நீண்ட பயணமும் குறுகிவிட்டது உன் நினைவை சுமப்பதால் ...          - பிரவீணா தங்கராஜ் .

வாடகை தாயாக....

Image
அவள் பெண்னென்று இன்று தான் அறிந்தேன் உணவினை நேரந்தவறாது கொடுப்பது மட்டுமே என் கடமையென நினைத்தேன் உணவு கொடுப்பதற்கும் காரணமுண்டு அவளும் ஒருவிதத்தில் மாற்றுத்திறனாளி தான் ஏதோ ஒரு விபத்தாகக்கூடும் அதில் தான் அப்படி உடலை ஊனம் செய்திருக்கும் இப்பொழுது அந்தக்கதை சொல்லவரவில்லை தனித்திருக்கும் அவளிடம் தாய்மையின் வெளிப்பாடை கண்டேனின்று அவள் கூட்டில் கண்ட முட்டைகளே அதற்கு சாட்சி ஒரு பக்கம் இறக்கையிழந்து நீண்டதூரம் பறக்கயியலாதவளின் கூட்டில் முட்டைகள் . அவளுக்கு தெரியும் அது தன் முட்டைகள் இல்லையென்று இருப்பினும் அடைகாக்கிறாள் ஒருவேளை குயில் குழந்தைக்கு வாடகை தாயாகயிருக்க முடிவு செய்திருப்பாளோ ....?!                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒன்னும் ஒன்னும் ரெண்டு

ஒன்றும் ஒன்றும் ரெண்டென கலந்தோம். செம்புலப்பெயனீராக  வாழ்வின் தாய ஆட்டத்தில் ஒன்றை பெறவே ஏங்கிட , பெற்றோம் . இரண்டென கலந்த வாழ்வில் ஒன்றை கழித்தாலும் கிட்டுவது பூஜ்ஜியமாகுமே . ஆகாது வாழ்ந்திருமன(ண)மே !                  -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -13

கவிதைகளை வரிசையாய் எழுதிவடித்து காட்டுகின்றேன் உன்னிடம் . நீயோ படித்து கூட பார்க்காமல் அந்த புத்தகத்தை மூடி மேஜைமீது வைத்துவிட்டு சுவாதீனமாக கூறுகிறாய் ... நான் இந்த மொத்த கவிதையும் படித்துவிட்டேனென சுட்டுவிரலால் என்னை சுட்டி காட்டியபடி ...         -- பிரவீணா தங்கராஜ் .

எனது இறைவன்

Image
வாக்குவாதங்கள் நீண்டன கடவுளில் சிறந்தவர் யாரென்று வீடே போர்களமாய்... அதிர பொருட்கள் சேதாரம் கூடுதலானது இறைவன் ஒருவனே என்றேன் நான் . செவிமடுக்க செய்யாது வாய்த்தகராறு கைதகராறாக மாறியது . இனியும் காவல் உத்தரவுயிடாவிட்டால் நிலைமை கட்டுக்கு அடங்காதென அப்பா வரும் நாழியிது இருவரும் சொல்பேச்சை கேட்டால் சிறந்தது என்றதும் அடக்கினர் . உணவு விழுங்கி உறக்கம் தழுவினர் உறக்கத்தில் இறைவன் ஒருவனே என்பதை எடுத்துரைத்தனர் அக்கா தங்கை இருவரின் கைகோர்த்தபடி ...                                  -- பிரவீணா தங்கராஜ் .