சிரமமில்லாமல் சில கொலைகள்-11

 


🩸-11

     அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள். 

  எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள்.

    மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள்.

      "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள்.

     "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள்.


   அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள்.


   மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு தானே. அந்த அன்பு அப்பா, அம்மா, கூடப் பிறந்தாவா தவிர்த்து நம்ம கட்டிக்கப் போற கணவரிடமும் வரலாம். என்ன அந்தக் கணவரை நாமளா தேடிட கூடாது. அப்படித் தேடி காதலிச்சா தப்பு" என்றாள்.


     "ஒருவேளை அவரா வந்து காதலிப்பதா சொன்னா என்ன செய்ய? இல்லை அவர் அந்தப் பெண்ணிடம் சொல்லாம  காதலிக்கறார்னா என்ன செய்யறது."


      "யார் அந்த அவரு" என்று மல்லி தோளை சுரண்ட, "இல்லை சும்மா அப்படியொருத்தார் இருந்தா என்ன செய்யனு அபிப்ராயம் கேட்டேன்."


     "இந்த மழுப்பல் வேண்டாம் யாருனு சொல்லு."- மல்லி.


    "சொன்னா வேற யாரிடமும் சொல்லிட மாட்டியே?" என்றதும்


     "சாமி சத்தியம் சொல்ல மாட்டேன். யாரை விரும்பற?" என்றாள் மல்லி ஆர்வமாக இருந்தாள்.


     "நான் யாரையும் விரும்பலை. என்னைத் தான் அத்தான் விரும்புது." என்றாள்.


      "யா.. யாரு ஆடலரசன் அவங்களா?" என்றதும் அபரஞ்சியோ


    "சீ இல்லைப்பா... எங்க பெரிய அத்தான் சர்வேஷ்வரன்." என்றவளின் பேச்சில் மகிழ்ச்சியெல்லாம் இல்லை.


    "நீ கூடக் காதல் என்றதும் எப்பவும் உங்க வீட்டை நோட்டமிடுவது ஆடுலரசு தானே. அவரோனு நினைத்தேன்."


     "பச் சர்வேஷ் அத்தான் தான் எனக்குக் காலேஜ் சீட் வாங்கிருக்கு தெரியுமா? எனக்கு இப்ப வரை எத்தனை பரிசு தரும் தெரியுமா. என் சித்தி பொண்ணு மனிஷாவுக்குக் கூட இப்படிப் பரிசு தரலை.


   நான் ஏதோ பக்கத்தில இருப்பதால் தந்துக்கிட்டு இருக்குதோனு நினைச்சேன். ஆனா அத்தான் என்னை விரும்புது." என்றவள் திருதிரு விழித்தாள்.


     "இதுல தப்பென்ன பா. உனக்கும் பிடிச்சா காதலி. உங்க மாமா பையன் தானே." என்று மல்லி சாதரணமாகச் சொன்னாள்.


     அபரஞ்சியோ, "இல்லைபா உனக்கு எங்க அத்தை பற்றித் தெரியாது. அதுவுமில்லாம எனக்கு அத்தான் மேல எந்தவித ஆசையோ, காதலோ வைக்கவும் பயமா இருக்கு. ஆசைப்பட்டுக் கிடைக்கலனா என்னால ஏற்றுக்க முடியாது மல்லி." என்று அழுதாள்.


     "இதுக்கு எதுக்கு அழுவுற விடு... அதான் காதலிக்கலையே. பிறகென்ன" என்று மல்லி சர்வசாதாரணமாகச் சொல்லி திரும்பினாள்.


     சர்வேஷ்வரன் அத்தான் விரும்புதே. அது மனசு கஷ்டப்படுமே என்றவள் மனதிற்குப் புரியவில்லை அவன் கஷ்டப்பட்டால் தன் இதயம் வலிப்பது எதற்கென்று புரியாத வயதல்லவா?!


        சுடிதாரில் தேவதையொருத்தி தினமும் தன்னைத் தாக்கிவிட்டு கல்லூரிக்கு  கிளம்புகின்றாள். அதனை நின்று இரசித்து வேலைக்குச் செல்கின்றான் சர்வேஷ்.


    அன்றும் தங்கள் தெரு முனையில் நின்று அவள் வரும் வருகைக்காகக் காத்திருந்தான்.


     சுடிதாரில் புத்தகப்பை ஒருபக்கம் மாட்டி கையில் சில புத்தகம் ஏந்தி அன்னநடையிட்டுத் தன்னைக் கடந்து செல்லும் அபரஞ்சியை எதிரில் நண்பன் பேச பேச காதில் ஒரு வார்த்தையும் பதிவாகமல் இரசித்து நின்றான்.


     அவள் சென்றபின், "உன்கிட்ட நான் என்னென்ன பேசினேன்னு இப்ப சொல்லு டா" என்று நண்பன் கேட்கவும்,


      "வேலை எப்படிப் போகுது கேட்ட, பைக் எத்தனை கிலோ மீட்டர் வேகம்.." என்று கூறவும் சர்வேஷ் எதிரில் இருந்தவனோ, "இராசா... நைட் ஷோ வர்றியானு கேட்டேன் டா. நீ என்ன போனவாரம் பேசியதுக்கு இப்ப பதில் சொல்லற... அடேய்... காதலிங்க டா. ஆனா சொல்லிட்டு பண்ணுங்க. ப்ரெண்ட் நான் சுதாரித்து இருப்பேன். இப்ப பாரு இங்க நிற்கறதே வேஸ்ட். " என்று சலிப்படைந்து சென்றான்.


      "டேய் டேய்... நான் யாரை காதலிக்கறேன். நீயா கதை கட்டாதே." என்று சர்வேஷ் மறைக்க முயன்றான்.


     "ஏலேய்... என் தங்கை மல்லி சொல்லிட்டா... நீ உன் அத்தை மகளை விரும்பறதை." என்று சர்வேஷ் நண்பன் சிரிக்கவும் சர்வேஷ் அக்கம் பக்கம் பார்த்து,


    "மோகன்... மல்லிக்கு எப்படித் தெரியும்?" என்று ஆர்வம் கொஞ்சம் பயம் கொஞ்சமாகக் கேட்டான். மல்லிக்கு தன் காதல் தெரிகிறதென்றால் அபரஞ்சியிடம் உரைத்திருப்பாளே... என்ற நோக்கத்தில் கேட்டு முடித்தான்.


     "எப்படித் தெரியுமா. என் காதலி  அபரஞ்சி சொன்னா." என்று இடக்காகக் கூற, சர்வேஷ் அவனின் காலரை பிடித்துச் சினத்தோடு நின்றான்.


    அவனோ, என்னடா நீ சட்டுனு சட்டையைப் பிடிக்கிற. பின்ன என்ன நீ விரும்பறது உன் மாமா மகளுக்குத் தெரியாதா. அவ தான் மல்லிக்கு சொன்னா. நேற்று என்னிடம் கேட்டா.


    சர்வேஷ் அண்ணா ரஞ்சியை விரும்புதே என்னிடம் சொன்னியானு கேட்டு உலுக்கி எடுத்துட்டா." என்று கூறினான்.


    "மோகன் நான் இன்னும் ரஞ்சிக்கு சொல்லலை டா. நல்லா கேட்டியா உன் தங்கை மல்லிக்கு ரஞ்சி தான் நான் அவளை  விரும்புவதைச் சொன்னாளா?" என்று கேட்டதும்,


      "ஏன்டா.. இது தெரியாம தான் காதலிக்கறியா. போன வாரம் ஞாயிறு பேசினாங்களாம். நான் வாரத்துக்குச் சனி ஞாயிறு தானே வர்றேன். அதான் நேர்ல கேட்டுப்போம்னு வந்தேன். நீ என்ன அபரஞ்சிக்கு நீ விரும்புவதே தெரியாதது மாதிரி பேசற" என்றான் மோகன்.


     "அவளுக்குத் தெரியாது.... ஆனா ரீசன்டா என் காதல் தெரிஞ்சுயிருக்கு. எப்படித் தெரிந்துயிருக்கும்?" என்றவனின் யோசனை அத்தையாரிடம் வந்து நின்றது.


    "கண்டுபிடிச்சிட்டேன் என் அத்தையிடம் பேசியதை  அபரஞ்சி கேட்டுயிருப்பா. இல்லை அத்தை மாமா என் காதஷை பற்றி விவாதித்து இருப்பாங்க அப்போ கேட்டிருக்கணும்" என்றவன் மனம் தன் காதல் அறிந்தபின் அபரஞ்சியைக் காண துடித்தது.


     "என்ன நேரிடையா கேட்க போறியா...? ஓகே சொல்வாங்களா?" என்றான் மோகன்.


       "அவளுக்குப் பதினெட்டே பிறக்கலை. எங்கிருந்து காதலை சொல்ல... காத்திருக்கணும்." என்றான் சோர்வாகச் சர்வேஷ்.


       "காதலிக்கறியானு கேட்க வேண்டாம். ஜஸ்ட் நேர்ல போ... என்ன ரியாக்ஷன் தர்றானு பார்ப்போம். பிறகு முடிவெடுக்கலாம்." என்று மோகன் கூறியதும் சர்வேஷிற்குச் சரியாகத் தோன்ற மாலை சந்தித்திட துடித்தது.


      இன்று பிரதோஷம் கோவிலுக்கு வருவா... அங்க வைத்து பார்க்கணும் என்று கிளம்பிவிட்டான்.


     இவனை மட்டும் அவள் விரும்பிட்டா கையில் பிடிக்க முடியாது. பதினெட்டு முடியலையா...? மல்லிக்கு நாலு மாதம் முன்னவே பிறந்த நாள் வந்துட்டு போயிடுச்சு. மல்லியை விடச் சின்னப் பொண்ணா...? என்றவன் சிந்தனை அவன் பணியில் சென்றுவிட்டது.


        கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்தவள் உடையை மாற்றிக் கோலிலுக்கென்று தாவனி அணிந்து தலையைப் பிண்ணி அம்புஜம் தொடுத்த ஜாதிமல்லியை சூடி முடித்தாள்.


      பிறகு கூடையில் பூவை எடுத்துக் கொண்டு புறப்பட, ஏதோவொன்று குறைவதை உணர்ந்தாள்.


     "அம்மா... வில்வம் இலை இல்லையே... எங்க வைச்சிருக்க?" என்ற குரல் பக்கத்தில் இருக்கும் சர்வேஷ் ஆடலரசனுக்கும் கேட்டது. 


     "தோட்டத்தில் தானே இருக்கு பறிச்சுக்கோடி" என்று அம்புஜம் கூறவும் கொலுசொலி இசைக்க ஒடிவந்து பறித்தாள்.


      அபரஞ்சிக்கு எப்பொழுதும் தான் கோவில் என்றால் அங்கே தனக்கு முன் காண்பது சர்வேஷ் அத்தான். நான் இப்படிக் கத்தியதில் என்னை நோட்பண்ணறாரா? என்றவள் மனம் அந்தப்பக்கம் விழியுயர்த்திக் காண சொல்ல பார்த்தாள்.


     அவளையே இந்நேரம் வரை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்த சர்வேஷ் சட்டென அபரஞ்சி தன்னைப் பார்த்ததும் மாடியில் இருந்து, "மோகன்... கோவிலுக்குக் கூப்பிட்டியே... ரெடியா...?" என்று கேட்டான். 


    "ஆல்மோஸ்ட் டா" என்று நின்றதும் அபரஞ்சியோ, சே மல்லி அண்ணா ஏற்கனவே தயாராகி இருக்கார். எதச்சையமா சர்வேஷ் அத்தான் கிளம்பயிருக்கார். நான் தான் குழம்பிட்டு இருக்கேன் என்று இலை பறித்துப் பூஜை கூடையில் வைத்து புறப்பட்டாள். 


     மல்லிக்கு கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக இல்லை. தந்தை மட்டும் தான் அதனால் பெரிதாக எதுவும் சிரத்தை எடுக்க மாட்டாள்.


       சிவன் கோவிலும் விஷ்ணு கோவிலும் அருகருகே இருக்கும் அவ்விடத்திற்கு வந்தடைந்தாள்.


    முதலில் விநாயகரை துதித்து முடித்துச் சிவனுக்கு வில்வ இலைகளைச் சாற்றிச் சர்வேஷை பற்றி நீலகண்டனிடம் சந்தேகத்தைப் பகிர்ந்து கொண்டாள்.


    பின்னர் முருகனையும் அம்மனை வேண்டி தலத்தைச் சுற்றி முடித்துப் பக்கத்து கோவிலுக்கும் செல்ல, தாய் தொடுத்த துளசி மாலையை விஷ்ணுவுக்குப் போட்டு அழகு பார்க்க குருக்களிடம் தந்தாள்.


        எப்பொழுதும் தீபராதனை காட்டும் பொழுது வந்து வருகை பதிவு செய்வாரே இன்று எங்கே..? என்று கண்கள் அலைபாய்ந்தது.


      ஒர் மனமோ, 'என்னயிது அபரஞ்சி கோவிலுக்கு வந்துவிட்டு உன் அத்தானை தேடுகின்றாய்.' என இடித்துரைத்தது.

  

     தலையில் தன் இரு கைகளில் கொட்டிக்கொள்ளக் குருக்களோ, "யானைமுகத்தான் அங்கே இருக்கார். நீ என்னமா இங்க கொட்டிட்டு இருக்கே." என்றதும் அசட்டுப் புன்னகை அளித்து, தீபம் தொட்டுக் குங்குமம் பெற்று துளசி தீர்த்தம் பருகி வணங்கி எழுந்தாள்.


     தலம் சுற்றி வந்து நிற்க அங்கே சின்னதாகப் படிக்கட்டுட்டில் சர்வேஷ் நின்றிருந்தான்.


     சர்வேஷை கண்டதும் அத்தான் என்ற உவகை வர சின்னதாய் ஒர் சிரிப்பை உதிர்ப்பாள். இன்று அச்சிரிப்பை உதிர்க்கவும் தயங்கினாள்.


       அவள் சர்வேஷை கடந்து செல்லவும், சர்வேஷால் தாங்கி கொள்ளயியலாத வகையில் இதயம் கணக்க, கூடவே ஓடிவந்தான்.


    மோகனிடம் வண்டி எடுத்து வர சாவியையும் கொடுத்து விட்டான்.

  

      "அபரஞ்சி... நில்லு.." என்றதும் பெரியவன் என்ற ரீதியில் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றாள்.


      'என்ன நான் காதலிக்கறேன் என்றதும் ஒதுங்கி போற. என் காதலுக்குப் பதில் என்ன' என்று கேட்க துடித்த நாவை அடக்கி, "காலேஜ் எப்படிப் போகுது. ராகிங் ஏதாவது இருக்கா? உனக்கு இந்தக் குரூப் பிடிச்சிருக்கு தானே?" கேட்டான்.


     "எல்லாம் சரியா தான் போகுது அத்தான். எதுவும் குறுக்கே வராதவரை சரியா தான் நடக்கும்." என்று பதிலளித்தாள்.


     அவள் பேச்சிலே தன்னை எட்டிநிறுத்தி கேள்வி கேட்பதை நிராகரிப்பதை அறிந்து உள்ளுக்குள் மெச்சி கொண்டான்.


      "வேறதும் இல்லையே நான் போகவா. அம்மா தேடுவா.." என்று கேட்கவும் தலையைச் சரியென்று ஆட்டிவிட்டான்.


      அவள் சென்றதும் மோகன் அருகே வந்து "என்னடா... ரிசல்ட் என்ன?" என்றதும் "பச் எதுவும் கேட்கமுடியலை." என்றான் சர்வேஷ்.


     "வாவ் செம டா.. செம... இப்படியேயிரு. பிடி வண்டியை" என்று மோகன் கொடுத்துவிட்டு கேலிபுன்னகையோடு அகன்றான்.


      சர்வேஷிற்குச் சங்கடமாகவும் அதே சமயம் என்னவோ போல் ஆனது.


     இங்கே வீட்டிற்கு வந்து நிற்க, தந்தை கிருஷ்ணன் லட்டு இனிப்பு வாங்கி அம்புஜத்திற்கு ஊட்டி விட்டார்.


     "அப்பா..." என்று ஒடிவந்த மகளைக் கண்டு அம்புஜத்திடமிருந்து இரண்டடி எட்டி நின்றார்.


      "வாடா இந்தா..." என்று லட்டை வாயில் வைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


     "உன் காலேஜ் பக்கத்தில் வீடு பார்த்தாச்சு. இந்த மாதத்தில் அங்க போயிடுவோம். உனக்கும் காலேஜ் கிட்ட. எனக்கும் ஆபிஸ் போகச் சுலபம்." என்று கூறி முடித்தார்.


    "அப்பா இந்த வீடு தோட்டம் கோவில் எல்லாத்தையும் விட்டுட்டு போகணுமா?" என்றதும் "ஆமாம் மா. வேற வழியில்லை." என்று கடந்துவிட்டார்.


      அம்புஜம் மற்றொரு இனிப்பு பெட்டியை எடுத்துக் கொண்டு, "அபரஞ்சி கூட வாடி, எங்கண்ணா அண்ணியிடம் இனிப்பை கொடுத்துட்டு இந்த விஷயம் சொல்லிடுவோம். இல்லை பக்கத்தில இருந்துட்டு ஒரு வார்த்தை சொன்னாலா ஐங்க தங்கைனு அண்ணி அண்ணாவை இடிப்பா." என்றதும் அபரஞ்சி சரியென்று கூடத் துணைக்கு வந்தாள்.


       அம்புஜம் அபரஞ்சி தங்கள் வீட்டு வாசலில் நுழைவதை கண்டு வேகமாக வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வர அவசரம் கொண்டான். அதுவோ இன்று பார்த்து வழுக்க, அபரஞ்சி தன் சர்வேஷ் அத்தானை திரும்பத் திரும்பப் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தாள்.


      அங்கே ஆடலரசன் தன் புத்தகப் பையில் அபரஞ்சி ஆடலரசன் என்று எழுதி பிளேம்ஸ்(flames) போட்டு கிறுக்கியிருப்பானோ என்னவோ பெண் பெயர் மட்டும் எப்படியோ சாமர்த்தியமாகக் கிழித்து விட்டான். ஆனால் நிர்மலா சின்னப் பையனின் குட்டை கண்டுபிடித்துப் பொரிந்து கொண்டிருந்தார்.

   

    இதில் அம்புஜம் வரவும் அதே அனலோடு வரவேற்றார்.


-🩸🩸🩸🩸🩸


-பிரவீணா தங்கராஜ்.

     

     


  

சிரமமில்லாமல் சில கொலைகள்-10

 
 🩸-10

அபரஞ்சி-சர்வேஷ்வரன் காலம்.
    
        "ரஞ்சி... ஏய் ரஞ்சி...  இந்தா... நீ கேட்ட செம்பருத்தி பூ" என்று ஆடலரசன் அபரஞ்சியிடம் நீட்டினான்.

    "அச்சோ... இப்ப தான் (சர்வேஷ்வரன்)பெரியத்தான் கொடுத்துட்டுப் போனார். நீங்க இதை மல்லிகாவிடம் கொடுக்கறிங்களா...? அவளும் கேட்டுட்டு இருந்தா..." என்று பதில் தர ஆடலரசனுக்குக் கவலையாய்ப் போனது.

     "அப்படியா.... சரி நீயே கொடுத்துடு." என்று அவளிடமே நீட்ட, எதிர் வீட்டு மல்லிகா ஒடி வந்தாள்.

"செம்பருத்தி எனக்கா... தேங்க்ஸ் டி ரஞ்சி." என்று பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தை வரவேற்ற வண்ண கோலங்களை மேலும் அழகுப்படுத்த சாணத்தை உருட்டி நடுநயமாக வைத்து அதில் பூசணிப்பூவை வைத்துவிட்டு மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதன் மேலே செம்பருத்தி சொருகி முடித்தாள்.

     எல்லாம் முடித்து எட்டி நின்று அழகு பார்த்தாள் அபரஞ்சி. அவளின் மஞ்சள் முகமும், ஜிமிக்கி கம்பலும், சின்னதாய் கீறிட்டு வைத்த விபூதியும் அவளை மார்கழி மாதத்தில் ஆண்டாளாகவே தோற்றுவித்தது  சர்வேஷ்வரனுக்கு.

   பக்கத்து வீட்டு மாடியில் சூரியனை வணங்கியவன் தன் பெரிய மாமாவின் மகளை விழியகலாமல் கண்டு கொண்டிருந்தான்.

      "அபரஞ்சி.... அங்க என்ன பண்ற... கோவிலுக்கு நேரமாகுதோனோ." என்று (தபித்தாள்)அம்புஜம் குரல் கேட்க தேனீ போல ஓடினாள்.

      தளர பிண்ணி இடையில் சொருகிய தாவனியை சரிப்படுத்தி அபிராமி முன் வந்து பூக்கூடையோடு வந்தவளை அபிராமி மகளை எண்ணி பூரித்துப் போனார்.

     "என்னடி இது கோவிலுக்குப் போறோம்னு நேற்றே சொல்லிருந்தேன். தாமரை டிசைன் சங்கிலி கழுத்துல போட சொன்னேனா இல்லையா... வெறும் கழுத்தோட இருக்க?" என்று தன் கழுத்தில் இருந்த கோதுமை மாடல் செயினை மகளுக்கு அணிவித்து முடித்தாள் அம்புஜம்.

      பூக்கூடையை அபரஞ்சி எடுத்துக் கொண்டு அம்புஜத்துடன் முன்னே செல்ல, கிருஷ்ணன்(கிறிஸ்டோபர்) தன் இருசக்கர வாகனத்தில் புளியோதரை தூக்கோடு புறப்பட்டார்.

     இன்று தான் அபரஞ்சி கல்லூரிக்கு செல்ல போகின்றாள். முதல் நாள் என்று எதிர்பார்பபோடு கிளம்பினாள். அதிகாலை கோவிலுக்கு வந்து அர்ச்சனை முடித்துப் போக வேண்டும் எனத் தந்தை  கிருஷ்ணன் கூறவும் இங்கே நேரமானாலும் பரவாயில்லையென வந்திருக்கின்றாள்.

         தீபாராதனை காட்டி முடித்து விளக்கொளி பிரகாசத்தில் விபூதி பூசும் கணம் எதிரில் சர்வேஷ்வரன் நின்றிருந்தான்.

    "பெரியத்தான்.... நான் காலேஜ் சேர்ந்துட்டேன். இன்னிக்கு முதல் நாள் போயிட்டு வர்றேன்." என்றாள்.

     இதுவரை இமை மூடி இறைவனை நேசித்துக் கொண்டியிருந்தவளை கண் அகற்றாமல் பார்த்தவன் அவள் இவனைப் பார்த்ததும் இறைவனைப் பக்தியோடு வேண்டுவதாக நின்றான்.

     அபரஞ்சி குரல் கேட்டுத் திரும்புவதாகப் பார்த்து வைக்க, "ஆல் தி பெஸ்ட் மா." என்றவன் நேரத்தை பார்த்து "சீக்கிரம் போ... முதல் நாள் லேட்டா போகக்கூடாது" என்று கூறவும் தலையைத் தலையை அசைத்து கிளம்பினாள்.

      அவள் படிக்கட்டில் தாவி தாவி செல்ல அவளின் பாவாடை இளவரசியின் உடை போலத் தவழ்ந்து  சென்று கொண்டிருந்தது.

     சர்வேஷ்வரனுக்கு மணக்கண்ணில இளவரசியாகத் தோற்றுவித்து மறையவும், இப்படிக் காலேஜிக்கு தாவானியா... அத்தையிடம் சொல்லி சுடிதாரா மாற்றணும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

    தந்தையின் வண்டியில் ஏறியமர்ந்தவள், சர்வேஷ்வரனை கண்டு கையசைக்க, திகைத்து விழித்தவன் பக்கவாட்டில் அம்புஜம் "எனக்குக் காட்டறா சர்வேஷ்." என்றதும் இந்தக் கையசைப்பு தனக்கு இல்லையென அறிந்து அசடு வழிந்தான்.

     "என்ன சர்வேஷ... அவளுக்குக் காலேஜிக்குச் சீட் வாங்கிக் கொடுத்தது நீ தான். படிக்க வேண்டாம்னு நாங்க முடிவு பண்ணியிருக்க, அவளைப் படிக்க வைக்க ஆசைப்பட்டுக் காலேஜ் தேடி இங்க சேருங்கோனு சொன்னதும் நீ தான். இங்க அர்ச்சனை பண்ண வந்தா, அப்படியே ஒரு பிரசாதம் வழங்கிடுங்கோனு சொன்னதும் நீ தான்.

     இந்தக் காலேஜ் படிப்பு தேவையா ஈஸ்வரா..? மாமாவுக்கும் எனக்கும் உன் மனசுல அபரஞ்சி இருக்காயென்று நல்லவே தெரியும். பேசாம கல்யாணம் செய்துக்கிட்டு அவளை இதே மாதிரி உன் கண்ணக்குள்ள வைத்து பார்த்துக்க வேண்டியது தானே" என்று அம்புஜம் கூறவும் வெட்கம் கொண்டவன்,

    "அபரஞ்சியைப் பிடிக்கும் அத்தை. கல்யாணம்.... ம்ம்ம்... நேரம் வரும் அப்போ மாமாவிடம், அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து கேட்பேன் அத்தை. அத்தை அவள் பாவாடை தாவனி தான் போடணுமா... இப்ப தான் சுடிதார் வந்துருக்கே." என்றான்.
 
    "வாங்கியிருக்கா... இன்னிக்கு முதல் நாள்னு அவங்க அப்பாவுக்காகப் போட்டுயிருக்கா." என்று அம்புஜம் மலர்ந்த முகமாக விளக்கவும்,

     "சரி அத்தை நான் கிளம்பறேன்" என வணக்கம் வைத்துக் கிளம்பினான்.

     மனதினுள் ' அந்தக் காலம் இல்லையே... அப்படியிருந்தா இப்பவே கல்யாணம் பண்ண, தட்டை தூக்கிட்டு வந்துயிருப்பேன் அத்தை. ஆனா அவளுக்குப் பதினெட்டு வயதே ஆரம்பிக்கலை. அதனால காலம் கனியணும்.'தன் வண்டியில் ஏறியவன் எண்ணம் இப்படித் தான் இருந்தது.

     அவனுக்குள் அபரஞ்சியை இன்னமும் அதிகமாகக் கவனித்துக் கொள். ஆபத்து நெருங்கும் காலமிது என்ற குரல் மட்டுமே கனவில் தோன்றும்.

      அதனால் சர்வஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள முயன்றான்.

        மாலை கல்லூரி முடித்து வந்த அபரஞ்சியைக் காண, ஆடலரசன் முன்டியடித்து வந்து நின்றான்.

      முகம் அலம்பி வந்து தாயிடம் மாலை சிற்றுண்டி கேட்டு நின்றாள்.
    அம்புஜமும் அதிரசமும் முறுக்கையும் தட்டில் வைத்து மகளுக்கும் ஆடலரசனுக்கும் நீட்டினார்.

    ஆடலரசன் சர்வேஷ்வரனின் தம்பி என்ற காரணத்தில் என்றுமே பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் ஆடலரசனுக்கு என்னவோ தன்னைத் தான் கவனிப்பதாக எண்ணிக்கொள்வான்.

     ஈரத்தோடு அதிரசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அபரஞ்சி, டிவி பெட்டியை திருகி கொண்டிருந்தாள். அந்தப் பட்டனில் திருக, பாடல் இசைந்து கொண்டிருந்தது. சரியாக வராத காரணத்தால் கேபிளை சரிசெய்து கொண்டு இருந்தாள்.

      ஆடலரசனோ டிவியில் ஓசையெழுப்பிய பாடலுக்கு ஏற்றவாறு  அவன் கண்கள் அபரஞ்சியின் தேகத்தை மொய்த்திருந்தது.

     அபரஞ்சி டிவி வராததைக் கண்டு, "சின்னத்தான் கொஞ்சம் ஆன்டனாவை திருப்பி விடேன்." என்று கேட்டதும்தன் பராக்கரத்தை காட்ட முறுக்கு ஒன்றை எடுத்து மாடிக்கு விரைந்தான்.

    அங்கிருந்து "ரஞ்சி டிவி தெரியுதா... இப்ப ரஞ்சி... க்ளியரா தெரியுதா ரஞ்சி." என்று ஏலமிட்டு கத்தவும் சர்வேஷ்வரன் பக்கத்து வீட்டில் அபரஞ்சி பெயர் என்றதும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான்.

   தன் தம்பி அபரஞ்சியை அழைப்பதை அறிந்து தன் வேஷ்டியை மடித்துக் கட்டி ஹாலுக்கு வர, "இவன் எதுக்கு அங்க போனான். அவளுக்கு டிவி தெரியலைனா என் பையன் வேலைக்காரனா... பாருங்க உங்க பெரிய தங்கை பண்ற வேலையை..." என்று பொரிந்தார் நிர்மலா. ஆடலரசன், சர்வேல்வரனின் தாய்.

    ஏற்கனவே தன்னை விடத் தன் தங்கை கணவனுக்கு அதிக நற்பெயரும் மரியாதையும் ஊரில் இருக்க, இதில் தன் மனையாளும் எப்பொழுதும் தந்தையான தன்னிடத்தை விடப் பிள்ளைகள் மாமன் மீது பற்று இருப்பதை அறிந்து கோபப்பட்டார்.

   "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவங்க ஒன்றும் இங்க வந்து அரசனை கூட்டிட்டு போய் வேலை வாங்கலை. இவன் தான் அங்க போய் இருக்கான்" என்று அதட்டலிட்டு அபரஞ்சி வீட்டுக்கு அடியெடுத்து வைத்தான்.

     டிவியை ஆப் செய்து முடிக்க, அதனை  திருகிக்கொண்டிருந்த அபரஞ்சியோ யார் அணைத்ததெனத் திரும்பி பார்க்க சர்வேஷ்வரன் என்றதும் சத்தமின்றி "டிவி... பார்க்கணும்." என்று சத்தமின்றி மிதமான குரலில் சொன்னாள்.

    அரசன் கீழே வர்றியா..." என்று அதட்டிவிட்டு, முதல் நாள் காலேஜ் எப்படி இருக்கு. பாடம் நடத்தினாங்களா..." என்று கேட்க அதற்குள் ஆடலரசன் வீட்டுக்கு வந்து ஏன் டிவி ஆப் பண்ணிட்ட அண்ணா." என்று கேட்கவும்

     "அம்மா கூப்பிட்டா... போய் இடியாப்பம் செய்ய மாவு அரைக்கக் கொடுத்தியே வாங்கிட்டு வா." என்று கட்டளையிட ஆடலரசன் அவ்விடம் விட்டு அகன்றான்.
 
     "வந்ததும் டிவியா அபரஞ்சி..." என்று மீண்டும் கேட்டான். 

      "பாட்டு கேட்க தான் ஆன் செய்தேன்." என்றவள் பார்வை நிமிர தயங்கியது.

     "இந்தா..." என்று நீட்ட நிமிர்ந்து பார்த்தவள். சர்வேஷ்வரன் எதையோ நீட்ட, "என்ன அது...?" என்றாள் அபரஞ்சி.

     "வாங்கிதான் பார்றேன்." என்றதும் அதை வாங்க முயன்றவள் அதிரசத்தை எங்கே வைக்க என்று இடத்தைத் தேட, அதை இங்க கொடு என்று வாங்கியவன் மற்றொரு கையில் அதனை நீட்டினான்.

     வாங்கிப் பிரித்துப் பார்க்க அதில் சின்னதாகக் கைக்கு அடக்கமாய் ரேடியோ இருக்க விழிவிரித்துக் கண்டாள்.

    "எனக்கா?" என்று கேட்க ஆம் என்பதாய் தலையசைத்து அதிரசத்தை உண்டான். ஏற்கனவே அபரஞ்சி பாதிக் கடித்த ரிலையில் இருந்தவை.

    "தேங்க்ஸ் பெரியத்தான்." என்றவள் அவள் கடித்த இனிப்பை இவன் விழுங்க கண்டு அதனை அவனுக்குச் சொல்லவும் முடியாது தடுமாறினாள்.

      அவள் அறிந்து விட்டதை எண்ணி முழுதாய் அதனை வாயில் போட்டு விட்டு, இனி ரேடியோ கேளு. டிவி வேண்டாம்." என்று புறப்பட ஆரம்பிக்கத் தேனீரை நீட்டினாள் அம்புஜம்.

      முறுக்கை வாயில் போட்டு இனிப்பு சுவையை மாற்றிக் கொண்டு தேனீர் அருந்த துவங்க, அம்புஜம் மகளின் புதிய பரிசை பார்த்து, சர்வேஷிடம் "இப்ப  அவசியமா சர்வேஷ். அண்ணி பார்த்தா இவளுக்கு எதுக்குப் பரிசுனு கத்துவாங்க." என்றதும் "அம்மாவுக்கு மெதுவா சொல்லிக்கலாம் அத்தை. நான் வர்றேன்" என்று புறப்பட்டான்.

     "அம்மா... நான் அப்பாவிடம் கேக்கறது எல்லாம் பெரியத்தானுக்கு எப்படித் தான் தெரியுமோ எனக்கு  பரிசா தருது." என்று கூறவும் அம்புஜம் சிரித்துக் கொண்டே, "நீ கத்தறது தான் ஊருக்கே கேட்குமே, பக்கத்துல இருக்கற உங்க மாமா வீட்டுக்கு கேட்காது." என்றார் அம்புஜம்.

    "நான் ஒன்றும் கத்தலை. எப்பவும் இந்தச் சர்வேஷ் தான் காதை கூர்த்தீட்டி என்னை நோட் பண்ணுது." என்று சத்தமே இல்லாமல் முனுமுனுக்க, அங்கே அம்புஜம் சமையல் அறைக்குச் சென்றிருக்க, சர்வேஷ் கதவின் மேல் பகுதியை இடித்திடுபவன் போல வந்து நின்றான்.

     அவனைச் சர்வேஷ் என்றழைத்து பேசியது செவியில் எட்டியிருக்குமோ என்னவோ குறும்பு பார்வை பார்த்தான்.

      "அபரஞ்சி.... இது பாடல் கேசட். கேட்டு பாரு..." கொடுத்துவிட்டு முறுவலித்துச் சென்றான்.

     அச்சோ பெயரை சொன்னதைக் கேட்டுட்டாங்க... என்று திருதிருவென விழித்தவள் அவனின் பார்வையில் சினம் காணாதது உணர்ந்து மகிழ்ந்தாள்.

     இரவு தந்தை கிருஷ்ணன் வந்து நிற்கவும் அபரஞ்சி அவளறையில், பாடலில் முழ்கி இருக்க, "யாரு சர்வேஷ் கொடுத்த பரிசா..." என்று அம்புஜத்திடம் கேட்டார்.

     "ஆமாங்க..." என்றவர் அபரஞ்சி காதில் பாடாது "சர்வேஷ் அபரஞ்சி மேல ப்ரியப்படறான். இரண்டு மாதத்ததில அபரஞ்சிக்கு பதினெட்டு ஆரம்பம் ஆகுதோனோ... அதுக்குப் பிறகு அண்ணாவிடம் பேசி நல்ல நாள், நேரம் பார்த்து அவனுக்கே கட்டிக் கொடுத்தா என்ன?" என்று கேட்டு வைத்தாள்.

     "விளையாடறியா... அம்புஜம். நாமளா கேட்டா அது நல்லதுக்கு இல்லை. சர்வேஷ் உங்கண்ணாவிடம் சம்மதம் வாங்கட்டும். பிறகு இதைப் பற்றிப் பேசலாம். அதுவரை அவன் விருப்பம் எல்லாம் அபரஞ்சிக்கு தெரியாமலே இருக்கட்டும். உங்கண்ணாவுக்கு அபரஞ்சியை விட உன் தங்கை கௌசல்யா மகள் மனிஷா தான் பிடிக்கும்.

காரணம் உனக்கே தெரியும். நான் அசல்ல வந்த மாப்பிள்ளை. ஆனா உன் தங்கை கொனௌசல்யாவுக்கு உங்க அண்ணி நிர்மலா வழியில் சித்தப்பா பையனை முடித்து இருக்காங்க.
 
    மனிஷானா இரண்டு பக்கமும் உறவுமுறை. அதனால சர்வேஷ் கட்டிக்கொடுக்க வாய்ப்பு அதிகம். அதனால அபரஞ்சியிடம் எதையும் பேசி குழப்பி விடாதே. அவள் எப்பவும் போல முயல் மாதிரி துள்ளிக்கிட்டு சந்தோஷமா இருந்தா போதும்." என்றார் கிருஷ்ணர்.

      "ஏங்க... சர்வேஷ் அபரஞ்சி ஜோடி, ஆடலரசன் வனிஷா ஜோடி என்று சரியா இருக்குமே. நாம ஏன் இப்படி யோசிக்கக் கூடாது." என்று கேட்டார்.

    "புரியாம பேசாதே அம்புஜம். உங்கண்ணாவுக்கு என்னைப் பிடிக்கலை. அது லேசா நல்லாவே தெரியுது. அதுவும் இல்லாம ஆடலரசன் வயசு என்ன அபரஞ்சி விட இரண்டு வயசு பெரியவன். சர்வேஷ் அப்படியில்லை. இருபத்திநாலு வயசு. கல்யாணம் கட்டிக்கிற வயசு. ஒருவேளை சர்வேஷ் வேற மணப்பெண்ணோ இல்லை வனிஷாவோ கட்டிக்கிட்டா கூட ஆடலரசனுக்கு நாம கட்டிக் கொடுக்க மாட்டோம். பெரியவன் விரும்பினான் தெரிஞ்சே கொடுக்க முடியாது. 

   நான் அபரஞ்சி கல்லூரி பக்கமா வீடு பார்த்துட்டு இருக்கேன். அங்க கிடைச்சா வீடு மாறிடலாம். எனக்குச் சர்வேஷை பிடிக்கும் ஆனா உங்கண்ணா அண்ணியை...? நாம ஒதுங்கி நிற்போம். நமக்கு நம்ம பொண்ணு முக்கியம்." என்று கிருஷ்ணன் சாப்பிட்டு உறங்க சென்றார்.

     அம்புஜத்திற்கும் கணவன் கூற்றில் மறுக்க முடியாது அமைதிக்காத்தாள்.
  
    நீர் அருந்தவந்த அபரஞ்சிக்கு தந்தை பேச்சு வைத்துச் சர்வேஷ் செயல்கள் புரிந்து இருந்தது.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

    

   
     

   

   
   


   


      

    

    
    



    

     
  
    

தீவிகை அவள் வரையனல் அவன்-30

தீவிகை வரையனல் -30

     ஆரவை அணைத்து இருந்தவள் கண்கள் நீரை உகுத்தி முடிக்க அதன் ஈரம் நெஞ்சை துளைக்க அவளை நிமிர்த்தி, "போதும் யுக்தா... எனக்காக நீ பட்டது. இனி உன் ஆரு எப்பவும் இந்த கண்ணீரை பார்க்க கூடாதென்று" கூறி முடிக்க ஹாலில் சத்தம் கேட்கவும் சந்தோஷமாக எழுந்தான். 

    சுபாங்கினி அத்தை வைஷ்ணவி மருத்துவமனையில் இருக்க, இங்க யார் வந்திருப்பது? ஒரு வேளை சந்துரு அண்ணாவாக இருக்குமோ...? என வெளியே வந்து எட்டி பார்த்தாள். 

      "என்னாச்சு மாமா... வியர்வையா இருக்கு.. உட்காருங்க." என்று நீரை எடுத்து கொடுத்தான். ஆம் சுவாமிநாதன் தான். 

     "அதுவொன்னுமில்லை மாப்பிள்ளை வர்ற வழியில் சம்யுக்தா மாதிரி ஒரு பொண்ணை பார்ததேன் அதனால அவளை பின் தொடர்ந்தேன். ஆனா சம்யுக்தா இல்லை... அது வேற யாரோ..." என்று சோர்ந்து போய் பதில் தந்தார். 

    தந்தை கணவன் இருவரும் உரையாடுவதை கண்டு உவகை பெருக்க பேச்சற்று கதவில் சாய்ந்து நின்றாள். 

      "மாமா நமக்கு விடிவு பிறந்தாச்சு. இனி யாரையும் தேடி போக வேண்டாம் என் கள்ளிச்செடி என்னை தேடி வந்துட்டா..." என்றதும் 

     "என்ன மாப்பிள்ளை சொல்றிங்க என் மகள் எங்க?" என்று கேட்டதும் ஆரவ் பார்வை சென்ற திசையில் திரும்ப அதே நேரம் "அப்பா..." என்று ஓடி வர முயன்றாள்.

     "யுக்தா... பார்த்து" என்று ஆரவ் வேகநடையிட்டு வந்தவன் அவளின் தற்போதைய நிலைமையை சுட்டிக் காட்டினான். 

    மேடிட்ட நிலவாக தன் மகள் வர பூரித்து நின்றார்.

      தன் மகளிடம் மன்னிப்பையே முதலில் வேண்டினார். "எப்பவும் நீ கேட்டதை வாங்கி தருவேன். இந்த முறை ஆரவை விட உசத்தியா கொடுக்கணும்னு நினைத்து ஈகோ ஸ்டேடஸ் பார்த்து நல்ல மனதை பார்க்கலை மா. அது காலம் கடந்து என் மகளே என் அன்பை உதாசினம் செய்தப்ப, நான் செய்த தவறோட வீரியம் என் கண்ணுக்கு பெரிதாகப்பட்டது. என்னை மன்னிச்சுடு மா." என்று பாதம் தொட செல்ல அவர் அப்படி தான் செய்வாரென ஆரவ் அவரை பிடித்து அமர வைத்தான். 

    "மாமா நான் மறந்துட்டேன். அப்படின்னா என் யுக்தாவும் மன்னிச்சுடுவா. இனி முடிந்ததை பேசாதீங்க. அவ இருவுயிரா வந்திருக்கா." என்று சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க சென்றான். 

   கூடவே யுக்தாவை பார்த்து விழுமாறு பணித்தான். 

     மாற்றம் பெற்றவை பல இருக்குமென அறிந்திருந்தால் யுக்தா. ஆனாலும் இப்படி தந்தையும் கணவனும் உறவை பகிரும் அளவுக்கு எண்ணியிருக்கவில்லை. 

        தந்தையிடம் பழைய சம்யுவாகவும், கணவன் ஆருவிடம் பழைய யுக்தாவாகவும் பேசி கலைத்து போகும் அளவிற்கு தன் ஆறு மாத வாழ்வின் இன்னல்களையும், மறுபக்கத்தினையும் விவரித்து முடித்தாள். 

    சுவாமிநாதனோடு பேசிக் கொண்டிருந்த நேரம், ஆரவ் உணவை சமைத்து முடித்தபடி கேட்டிக்கொண்டே முடித்து விட்டான். 

    சில நேரம் வலியும், சில நேரம் கோபமும் வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு யுக்தாவுக்கு இன்னல் தருவித்தவர்களை எல்லாம்  மனதிலே குறித்துக் கொண்டான்.

     மணக்க மணக்க ஆரவ் சமைத்ததை அவனாக ஊட்டி விட தந்தை சுவாமிநாதன் மகளின் ஆனந்தம் எதிலென்று கண்கூடாக பார்த்து கொண்டார். 

      "அப்பா எப்படி நம்ம வீட்ல ஆரு. அத்தை வைஷ்ணவி எப்படி?" என்றதும், 

     "அதும்மா.. நான்" என்று சுவாமிநாதன் கூற ஆரம்பிக்க, 

     "மாமா லென்தி டயலாக் நானே சொல்லிக்கறேன் இருங்க." என்று அவரை தடுத்துவிட்டு யுக்தாவுக்கு ஊட்டி கொண்டே ஆரம்பித்தான். 

     "அதுவொன்னுமில்லை யுக்தா. அன்னிக்கு மாமாவுக்கு சீரியஸ்னு அம்மா போன் செய்தப்ப நாம இங்கே சண்டை போட்டோம். நீ மருத்துவமனை வந்துட்டதா நான் நினைச்சேன். ஆனா, நான் அதுக்கு பிறகு இங்க வந்தா நீ இல்லை. உங்கப்பா சிகிச்சை எடுக்க விடாம தடுத்தார். ஏற்கனவே கான்சியஸ் கொண்டு வரவே நேரம் எடுத்துக்கிட்டு நைட் எல்லாம் கண் விழிக்க கூட செய்யலை. 

     காலையில் கண் விழிக்க  பேச முடியாம அம்மாவிடம்  மன்னிப்பு கேட்டு உன்னை பார்க்க கெஞ்சியிருக்கார். இதுல அடுத்தக்கட்ட சிகிச்சை பார்க்கவும் விடலை. உன்னிடமும் என்னிடமும் மன்னிப்பு கேட்டா தான் சிகிச்சைனு  பிடிவாதம். நான் வந்ததும் பேசி உன்னை பார்க்க கேட்டார். 

     ரொம்ப கஷ்டமா போச்சு. என் அப்பா வயசு காலில் விழவும் மனசு சட்டுனு என்னையே திட்டிடுச்சு. ஏன் ஆரவ் அம்மா பேசியதை புரிந்து அன்றைக்கே மறந்த, இவரும் தன் மகள் பெரிய இடம் தானே ஆசைப்பட்டு உன்னை ஒதுக்கினார். அதுல என்ன தப்பு. சின்னதா ஸ்டேடஸ் பார்க்கிறவனே என்னவென்னவோ ஜாதகம் சரியில்லை தோஷம் அது இதுன்னு சொல்லி காதலுக்கு சின்ன சின்ன எதிரியா மாறி போறாங்க. உன் அப்பா அவர் ரேஞ்சுக்கு செய்தார். அம்மாவே அவருக்கு இரவு கூடயிருந்து பார்த்துக்கிட்டப்ப, நானும் உறவு முக்கியம் என்ற விதத்தில் யோசித்தேன். 
   
   அதுவும் உடல்நலமில்லாத ஒருவரிடம் ஜம்பம் பேச, என் வீரமும் மறுத்திடுச்சு. உடல்நலம் தேறி வந்தவரிடம் உன்னை காணோம்னு சொல்ல முடியலை. ஆனா வேற வழி... செய்த பாவம் தான் இப்படி ஆகிடுச்சுனு அழுதார். 

    தனியா உங்க வீட்ல இருக்க வேண்டாம்னு நான் தான் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். 

    உன் பெயரை போட்டு தேடினா எல்லாருக்கும் விஷயம் தெரியவரும். அதான் நான் அப்படி போடலை. கள்ளிச்செடினு போட்டேன். நீ அதை பார்க்கலை என்பதே இப்ப தான் புரியுது. 

     "மருத்துவமனையிலே ஒரு மாசம் மயக்கத்தில இருந்துட்டேன் ஆரவ். எழுந்து வந்தப்ப அப்பா வீடும் பூட்டி இருக்கு. நீயும் ஜனனி கூட சேர்ந்து போனியா... இதுல ஜனனி அம்மா உனக்கும் அவளுக்கும் மேரேஜ்னு சொல்லவும் திரும்ப உன் வாழ்க்கையில் வர வேண்டாம்னு ஒதுங்கிட்டேன். இப்ப தான் புரியுது . அது அவங்க என்னைய சும்மா அந்த நேரம் துரத்தியிருக்காங்க. நான் இருந்து அத்தையையோ இல்லை உங்களையோ பார்த்துட்டு முடிவு பண்ணியிருக்கணும்." என்றாள் சம்யுக்தா. 

     "அன்னிக்கு ஒரு நாள் முன்பு தான் சந்துரு அம்மா திட்டிகிட்டி புதர் மாதிரி இருந்த தாடியை மழித்தேன். எனிவே நீ இப்ப வந்தியே இதே போதும்." என்று கடைசி உருண்டையை அவளுக்கு திருஷ்டி சுழற்றி தூர ஏறிந்தான். 

    அடுத்த இரு தினத்தில் வைஷ்ணவி கைக்குழந்தையோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். கூடவே சந்துரு அப்பா அம்மாவும். இம்முறை சந்துரு அப்பா யுக்தாவோடு எதுவும் பேசவில்லை. ஒரு முறை பேசியதற்கே நாலு வருட பிரிவுக்கு வழிவகுத்தமையால் நாவை அடக்கிக் கொண்டார். 

       எத்தனை பேர் தங்கள் வாழ்வில் தங்களுக்கே தெரியாமல் காலத்தை எடுத்து கொண்டனர். 

      நான்கு வருட பிரிவு, தற்போது ஆறு மாதம் என்றே மலைத்து போனார்கள்.  

              இனி யாரும் குறுக்கே வரக்கூடாதென இருவரும் எண்ணி ஒருவரை ஒருவர் நெருங்க, 'ஹலோ பாஸ் நான் இருக்கேன்'  என்று அவர்கள் சிசு வயிற்றில் தொப்பை போல தள்ளி நிறுத்தியது. 

       ஒரு வாரம் போனதும், ஜனனி அவள் கணவர் தியாகுவோடு மற்றும் குடும்பத்தோடும் வந்து வைஷ்ணவி பார்க்க, யுக்தா ஜனனி தாயாரை நன்கு உபசரித்தாள். 

    ஜனனி தான் மன்னிப்பு வேண்டி நிற்க, அதற்கு யுக்தாவோ ஜனனிக்கு தான் நன்றி சொன்னாள். 

      பின்னே திருமணத்துக்கு செக் வாங்காமல் செல்லாமல் இருந்தால் தன்னவன் கிடைத்து இருக்க மாட்டானே. அதுவும் இல்லாமல் தன் தந்தை தானே காரணகர்த்தா... அவரையே மன்னிக்கும் பொழுது இவர்களை மட்டும் கோவம் கொள்வானானேன். 

   அவர்கள் சென்றதும் ஆரவ் யுக்தாவுக்கு ஒருவாறு நிம்மதி அடைந்தார்கள்.  

         இதில் கேசவ் மருத்துவமனைக்கு சென்று அனுரேகாவிற்கு கரும்புள்ளி கொடுத்து அனுப்பி வைத்தான். டாக்டர் ஏற்கனவே தன் பெரிய மகளை இழந்து தவிக்க, அவர்கள் வீட்டுக்கு சென்று மலர்வளையம் வைத்து யுக்தா பற்றி கூறி எச்சரிக்கை விடுத்தான். ஏற்கனவே மகள் இறந்த பிறகு மருத்துவம் பார்க்க போவதில்லை என்றே இருந்தவற்கு தான் செய்த செயலின் பாவம் கூட தன் மகளின் இறப்புக்கு காரணம் என்றே நம்பினார். 

      ஆரவ் தன் மனைவிக்கு சாதம் ஊட்டி கொண்டு தோளில் சாய்த்து ஊஞ்சலில் ஆடிக்  கொண்டு இருந்தான். 

      பொரியலை வாயில் வைத்தபடி, ''இந்த திவேஷ என்ன செய்த ஆரு?'' என்று விழுங்க, 

     ''நான் என்ன செய்தேன். அவனா மாட்டிக்கிட்டான்.'' என்று கூறியதும் புரியாமல் குழம்பி ஆருவை பார்க்க, சந்துரு தான் ''நான் சொல்றேன் மா. அந்த பக்கி அமெரிக்க போறேனு சொல்லிட்டு துபாய் போனான். நல்ல என்ஜாய் பண்ண... அவன் தலைவிதி அங்க போதை மருந்து வச்சிருந்தா போலீஸ் பிடிச்சுக்குமாம். அந்த நாய் அதுல மாட்டிக்கிட்டு இப்ப அங்கிருக்க ஜெயிலில் கம்மி எண்ணிட்டு இருக்கான்.'' என்றான் சந்துரு. 

     ''ஆரு இது உன் வேலை தானே?'' என்று யுக்தா கேட்க, ''சே சே அது தானா நடந்தது மா'' என்றே சந்துரு கூற யுக்தா ஆரவை காண ஆரவ் கள்ளன் சிரிப்பை கண்ணடித்து உதிர்த்தான். 

      ''அடப்பாவி அது உன் வேலையா? எப்படி டா?'' என்றே கேட்டான் சந்துரு. 

      ''யுக்தா காணோம் இவனும் அமெரிக்கா ஒடிட்டான். கொஞ்ச நாளில் திவேஷ அப்பாவை கேட்டேன். அவருக்கு யுக்தா எங்கே என்று எல்லாம் தெரியலை. பட் பையன் துபாய்ல இருக்கான் சொன்னார். கேசவை அனுப்பி அங்க ஒரு ஆட்களை பிடிச்சு போதை மருந்தை அவன் ரூமுல அவனுக்கே தெரியாம வைத்து போன் மட்டும் பண்ணி மாட்டி விட்டுட்டு கேசவ் அடுத்த பிளைட் ஏறிட்டான்.'' என்றதும் சுபாங்கினி முறைப்பதை கண்டார். 

       ''அம்மா அவன் என்னை ஜெயில் தள்ளினான். நானும் தள்ளினேன். கணக்கு சால்வ்.'' 

       ''அப்ப உன் மாமனார் டா? அவருக்கும் ஜெயில் ஏற்பாடு பண்ணிட்டியா?'' என்றான் சந்துரு. 

      ''ஹாஹா அவர் செய்ததுக்கு கொஞ்சம் பட்டுட்டார். அதுவும் இல்லாமல் திவேஷ ஒன்றும் லைப் லாங்க் இருக்க மாட்டான். அதுக்குள்ள அவர் அப்பா வெளியே எடுப்பார். அதுவரை இருக்கட்டும்.'' என்று கூறி முடித்தான். 

          யுக்தா வேகமாக வாந்தி எடுக்க ஹாலில் இருந்த வாஷ்பேஷினுக்கு சென்று இருந்தாள்.  

          சாப்பிட்டதில் பாதி எடுத்து முடித்து சோர்ந்து நின்றாள். அதற்குள் சுபாங்கினி ஜூஸ் போட கிச்சன் சென்றாள். 

         அதனை எடுத்து வந்து கொண்டு, ''அடுத்த வாரம் பிறந்தா யுக்தாவுக்கு ஏழாவது மாதம் ஆரம்பமாகும். ஆரவ் வெகு விமர்சையாக செய்யணும் டா. இந்த இடைபட்ட காலத்தில் விட்டதை எல்லாம் சேர்ந்து யுக்தாவுக்கு செய்துடணும்.'' என்றதும் ஆரவ் தலையை பலமாகவே அசைத்தான். 

 இதோ வளைக்காப்பிற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு காயில் கிளம்பினார்கள். 

    சந்துரு வைஷ்ணவி சுபாங்கினி, சந்துருவின் தாய் தந்தையர் என ஒரு காரில் புறப்பட்டு செல்ல, மற்றொரு காரில் ஆரவ் யுக்தா மற்றும் சுவாமிநாதன் புறப்பட்டனர். 

    பிடிவாதம் பிடித்து முன்னிருக்கையில் ஆரவோடு அமர்ந்து வர, மண்டபம் வரவும் கால் வலிக்க ஆரம்பித்தது. 

     இதுக்கு தான் பின்னாடி சவுகரியமா உட்கார்ந்து வர சொன்னேன். மாமியாரா எங்க என் பேச்சை கேட்கறாங்க என்று சுபாங்கினி சொல்லவும், "அம்மா..." என்றவன் யுக்தாவை கையில் ஏந்திக்கொண்டான். 

      "மேடை வரை நான் தூக்கிட்டு வர்றேன். இப்ப கால் வலிக்காது." என்று ஆரவ் யுக்தாவை கையில் ஏந்தி நடக்க, யுக்தா வெட்கம் கொண்டாள்.

    "ஆரு... விடு நான் ஒரு ஐந்து நிமிஷம் டைம்னா நடந்திடுவேன்." என்றதற்கு மறுத்து அவன் தூக்கிக்கொண்டு நடந்தான். 

    முதலில் விளையாடுகின்றானென இருந்தவள். பின்னர் நிஜமாகவே தூக்கி கொண்டு நடந்து செல்லவும் சுற்றிமுற்றி பார்த்தாள். 

     "ஆரவ் நம்ம ரிசப்ஷனுக்கு வந்த கூட்டத்தை விட அதிகமாக இருக்கு டா. அதனால் இறக்கிவிடு ஷையா இருக்கு." என்றாள். 

      "நான் தான் அன்னிக்கு மாதிரியே எல்லோருக்கும் இன்வெயிட் பண்ணியிருக்கேன். எனக்கு ஷையா இல்லை.?" என்றான். 

      "டேய் நிறைய பேர் போன்ல வீடியோ எடுக்கறாங்க ஆரவ். அப்பறம் யுடியூப்-ல அப்லோட் பண்ணுவாங்க." என்றாள் 

    "பண்ணட்டும்... ட்ரெண்டிங் ஆனா கூட பரவாயில்லை. என் காதலியை கீழே இறக்க விடறதா இல்லை." என்றான் ஆரவ் திடமாக. 

    "ஆரவ் அப்பறம் எந்த பக்கம் திரும்பினாலும் காதல் மனைவியான கர்ப்பிணி பெண்ணுக்கு கால் வலிக்க, மேடை வரை தூக்கி வந்த காதல்கணவன் சினிமாடிக்கா செய்தி வெளியாகும்." என்று சிணுங்கினாள். 

     "இந்த உலகமே பார்த்து பேசினாலும் ஐ டோண்ட் கேர் கள்ளிச்செடி." என்றவன் அவளை இன்னமும் தோதாக தூக்கி கொண்டு நடையிட, பெண்ணவள் அவனின் ஷர்ட்டை இறுக பற்றி அவன் தோளிலே வெட்கப்பட்டு சாய்ந்தாள். 

    சுவாமிநாதனுக்கு இத்தகைய காதலையா வெற்று தாள் பணத்திற்காக பிரிக்க பார்த்தேனென என்று தன்னையே திட்டிக்கொண்டார்.  

  மகளின் சந்தோஷமும் வெட்கமும் அந்த மேடையே அதிர கேட்ட சிரிப்பொலியும் வரவேற்பும் கண்டு தந்தையாய் மனநிறைவை கொண்டார்.
 
    மேடை வந்து இறக்கி விட்டு முதல் வளையலை போட்டு அழகு பார்த்து ஒவ்வொரு சாத வகையையும் எடுத்து ஊட்டி முடித்தான்.(சிலர் மேடையில் ஐந்து வகை உணவை ஊட்டி விடுவாங்க அவர்கள் வழக்கம். அதை இங்க உபயோகப்படுத்திக்கிட்டேன்.)

        வைஷ்ணவி கையில் குழந்தையோடு தன் அண்ணிக்கு வளையலிட்டு மகிழ்ந்தாள். சந்துருவும் அவன் பங்கிற்கு அருகே வந்து "என் பையனுக்கு புக் பண்ணறேன் மா. பொண்ணு பிறந்தா கட்டி வைச்சிடு." என்று வாழ்த்தினான். 

       சுபாங்கினி தயங்கி ஒதுங்க, சம்யுக்தா அவர்களையும் போட வைத்து கைநிறைய வளையலோடு முகம் நிறைய சந்தனத்தோடும் ஆரவிடம் கை குலுக்கி காட்ட, அவனோ அவளருகே வந்து அவள் வயிற்றில் முத்தமிட்டான்.
    
    அதன் பிம்பங்கள் நிழற்படமாக கேமிரா பதிவு செய்ய இனிதாய் அந்த மழலையின் வரவிற்கு ஆரவ் யுக்தா காத்திருந்தனர். 

 - வரையனல் தணிந்திட தீவிகை ஒளிர மிளிர்ந்தது வாழ்க்கை. 

நன்றி 

பிரவீணா தங்கராஜ். 

சின்ன கான்சப்ட் தான். ஒரு காலேஜ் ஜோடி மோதலோடு சந்திச்சு மீண்டும் காதலை புதிப்பிக்கிறதா எழுத நினைச்சேன். கதை கருக்ஷ்வ்ளோ தான் நிறைய ஆதரவு வரும்னு எதிர்பார்க்கலை. அதனால தான் தலைப்பை வித்தியாசமா கொடுத்தேன். பட் இதுக்கும் எனக்கு நல்லா ஆதரவு தந்து தினசரி கருத்தளித்து யுடி வரலைனா இன்பாக்ஸில் கேட்டு எனக்கு எழுத ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

பிரதிலிபி நிறைய கருத்து வந்து குவிந்தது. முகநூலிலும் கருத்து வருது. ஆனா பிளாக்ல வரலை...அவ்வ்... இங்கையும் இருந்தா நல்லா இருக்கும். ஹாஹா அடுத்த கதை பிளாக்ல நியு இயர்க்கு வரும். தினசரி பதிவா. ஏற்கனவே எழுதின கதை தான். ஆனா பிளாக்ல பதிவு பண்ணப்போறேன். 



   

           

        

      



தீவிகை அவள் வரையனல் அவன்-29

தீவிகை வரையனல்-29

        ஒரு வாரம் முடிந்திருக்க அன்றிரவு உணவு முடித்து படுக்கும் பொழுது எப்பவும் போல அசைந்து கொடுக்கும் சம்யுவின் உயிர் அன்று அசைவதாக இல்லை. அவளும் இரவு குளித்து முடித்து இருக்க அதன் சுகத்திலும் அசதியிலும் விரைவில் உறங்கிட செய்தாள். 

    அடுத்த நாள் காலையில் என்றும் ஏழு மணிக்கு அசைந்து கொடுத்து தன்னிருப்பை சொல்லும் அந்த குட்டி உயிர் அசையாது இருக்க பணிக்கு செல்லும் மும்முரத்தில் இருந்தாள். 

     நூலக அலுவலகத்தில் வந்த பிறகு ஒன்பது மணி முதல் பத்து மணிவரையும் அசைந்து கொடுக்கும் தன் கரு அப்படியே இருக்க, அதன் பின்னே சம்யுக்தாவுக்கு நேற்று இரவிலிருந்து தன் சிசு அசைந்து கொடுக்காததை உணர்ந்தாள். 

       தன் வயிற்றை தொட்டுப் பார்த்தவள் அசைவு இல்லாமல் போக, பயந்து போனாள். தனக்கென இருக்கும் ஒருயிர் அதன் இருப்பும் தன்னால் அறியாது போவதால் பதினொன்று மணிக்கு வீட்டுக்கு சென்று முருகேஸ்வரி பாட்டியிடம் தெரிவித்தாள். 

    பாட்டியும் பயந்து போக அரசு மருத்துவமனைக்கு சென்று பார்க்க, அங்கே அன்று பார்த்து கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பவும் க்யூவில் நின்று பார்க்கும் சம்யுவுக்கு இன்று அந்த வரிசை மலைப்பாக தெரிந்தது. 

   தனக்கு முன்னால் சென்று பார்க்கவும் இயலாது. எல்லோருமே நிறைமாத கர்ப்பிணிகள். தன்னிலை சொல்லியும் தங்களுக்கு முன் செல்ல துடிக்கும் ஒரு காரணமாக தான் அதை எண்ணினார்கள். 

     சம்யுவோ நேரம் தவறுவதை எண்ணி பயந்து விட்டாள். 

     "பாட்டி உடனே ஒரு ஸ்கேன் எடுக்கணும் பாட்டி. என்னால என் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது. எவ்ளோ செலவு ஆனாலும் பரவாயில்லை. தனியார் ஹாஸ்பிடலில் ஒரு ஸ்கேன் பார்த்துட்டு வருவோம்" என்றதும் கையில் மாத சம்பளம் சேர்த்து வைத்து இருக்க அதனை எடுத்துக்கொண்டு அருகேயிருக்கும் அந்த பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்றாள். 

     தன்னிலை கூறி விளக்கி பயத்தில் பேச, ஒரு மணிக்கு வந்த டாக்டரோ முதலில் ஸ்கேன் எடுக்க அழைத்து வர சொன்னார். 

    ஸ்கேனில் குழந்தை கையை கன்னத்தில் வைத்து நன்றாக உறங்குவதாக சொல்லவும் அதை தனக்கு காட்டுங்கள் என்று சம்யு கண்ணீரோட கேட்க, ஸ்கேன் மிஷின் திருப்பி காட்டவும் அதனை தடவி பார்த்து மகிழ்ந்தாள். 

      அவள் காணும் நேரத்தில் சின்னதாய் கொட்டாவி விட்டு உருள தன் வயிற்றிலும் அசைவு உணர்ந்த பிறகே நிம்மதியாய் மூச்சை வெளியிட்டாள். 

     "அம்மாவை பயமுறுத்திட்டியே குட்டி..." என்று "இந்தாங்க" கையில் டிசு பேப்பரை தர அதனை வாங்கி துடைத்தாள். 

      அரசு மருத்துவமனையில் சேலை துணியில் துடித்த நினைவு வர டிசு பேப்பரை துடைத்தபடி வெளியே வந்தாள். 

    அக்கணம் பேசியபடி வைஷ்ணவி செல்வதை கண்டார். போகும் பொழுது நர்ஸ் பெண்ணிடம், ஒரு அரை மணிநேரம் பார்த்துக்கோங்க வெளியே போய் சாப்பிட்டு வந்திடுறேன். எனக்கு சுகர். சுகர் மாத்திரை போட்டுட்டேன். மருமக தூக்கத்துல இருக்கா. குழந்தையும் பக்கத்தில தூங்கிட்டு இருக்கு." என கூறவும் "தாரளமா போயிட்டு வாங்க நாங்க குழந்தை அழுதா பார்த்து கொள்கிறோம்" என்று சொல்லவும் நன்றி கூறி வைஷ்ணவி அத்தை வெளியே செல்ல அவர்கள் எட்டி பார்த்த அறையில் வைஷ்ணவி அசதியில் உறங்குவது கண்டாள் சம்யுக்தா. 

     "பாட்டி இங்க இருங்க. நான் தெரிந்தவங்க பார்த்துட்டு வர்றேன்." என்று செல்லவும் முருகேஸ்வரி வெளியே இருக்கும் வரிசையில் அமர்ந்திருந்தார். 

      வைஷ்ணவி அருகே இருக்கும் குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். 

     வைஷ்ணவி பாதி இமை திறக்க "அண்ணி... வந்துட்டீங்களா..." என்று அவள் சேலையை பிடித்து கொண்டு கேட்க, சட்டென பயந்த சம்யு, பின்னர் பயம் களைந்து, "எப்படி இருக்கு வைஷ்ணவி.... இப்ப பரவாயில்லையா... குழந்தை அழகா இருக்கு..." என்று பேசவும். 

     நார்மல் பிரசவம் என்பதால் சற்றே பேச இயன்றது. 

     "அண்ணி... கருவுற்று இருக்கீங்களா.... ஏன் அண்ணி அண்ணாவை விட்டுட்டு போனிங்க.. இதை பார்த்தா அண்ணா சந்தோஷப்படுவார் தெரியுமா." என்றதும் 

    "மாட்டார்.... இந்த குழந்தை யாரோடதுனு கேள்வி கேட்பார். டிவேர்ஸ் பேப்பரில் கையெழுத்து கேட்டு ஜீவனாம்சம் தரலாம்." என்று சொன்னாள். 

    "அண்ணி... நீங்களா இப்படி பேசறது. அண்ணா அப்படி கிடையாது. அம்மா... அண்ணி மா..." என்றதும் சுபாங்கினி வர அங்கே சம்யுவை கண்டவர் ஓங்கி அறைந்தார். 

     "அம்மா என்ன பண்ற" என்று வைஷ்ணவி பதற, சம்யுக்தாவை ஒரு பெண் அறைவதை கண்டு முருகேஸ்வரி ஓடி வந்தார்.

    "என்னமா இது பிள்ளைதாச்சி பிள்ளையை அடிக்கிற யாரு நீ..." என்றதும் சம்யு முருகேஸ்வரி பாட்டியிடம் "பாட்டி இது என் அத்தை இவங்க நாத்தனார் வைஷ்ணவி" என்றதும் முருகேஸ்வரி அமைதி அடைந்து சில நிமிடமே.

      "ஏம்மா.... வூட்டை விட்டு ஒரு பொண்ணு வந்தா காணோம்னு தேட நினைச்சியா நீ... இந்த குழந்தை சாவு வர போயிட்டு திரும்பி வந்துருக்கு." என்று ஒரு மாதமாக மருத்துவமனையில் இருப்பதை கூறி முடித்து நின்றார். 

     மயக்கம் தெளிந்து நேர உன் வூட்டுக்கு தான் வந்துச்சு.  யாரது... சனனினு பொண்ணோட உன் பையன் போனதும் அந்த சனனி அம்மா அப்பா இவளை விரட்டாத குறையா அவங்க பொண்ணுக்கு உன் பையனை கட்டிக்க போது வந்து அதை தடுக்க வந்ததா ஏசிப்புட்டாங்க." 

     "வீட்டுக்கு வந்தியா சம்யு?" என்று கன்னம் ஏந்தி கேட்க, ஆம் என்பதாய் தலையசைத்தாள். சுபாங்கினி வயிற்றை கண்டு 

    "இந்த நிலைமையில் மீண்டும் வந்து பார்க்க என்ன.?" என்று அதட்ட, 

     "வந்து பார்த்துச்சே மா. அந்த சனனி பொண்ணு கண்ணாலம் சொன்ன தேதில. அப்போ அதுக்கு கல்யாணம் நடந்தது கேட்டுச்சு. இவங்க அப்பா வூட்டுக்குபோச்சு... வூடு பூட்டியிருந்ததாம் சோகமா வந்துச்சு. நீ வேற கவுர்மெண்ட் ஹாஸ்பத்திரியில ஒருத்தங்ககிட்ட என் பையன் நல்லா இருக்கான் இப்ப தானே கல்யாணம் ஆகிருக்கு பேசியிருக்கியாமே.அப்பறம் எப்படி உன் வூட்டுக்கு வரும். யாரும் என்னை தேடலை. என் ஆரவ் சந்தோஷமா இருக்கான் எனக்கு அது போதும்னு சொல்லிட்டு தனியா கஷ்டப்படுது." என்று முருகேஸ்வரி பாட்டி கூறவும். சுபாங்கினி சம்யுவை பார்த்து, 

    "அடிப்பாவி... அந்த நர்ஸ் ஏதாவது துருவி துருவி பேசும். அதுக்கு தான் என் பையனுக்கு கல்யாணம் ஆகி நல்லா இருக்கான் சொல்லிட்டு நழுவிட்டேன். இந்த ஜனனி அம்மா அப்பா... உன் மேல கோபம். அவங்க பொண்ணுக்கு வாழ கொடுத்து வைக்காத இடம். நீ பறிச்சுக்கிட்டதா எத்தனை முறை புலம்பினாங்க தெரியுமா. அந்த கோபம்... நீ நேர என்னிடமோ ஆரவிடமோ வந்து நிற்க வேண்டியது தானே. என் மகன் முன்னவே உன்னை தான் அதிகமா விரும்பினான். இப்ப கணவன் மனைவினு பந்தமான பிறகு உன்னை விடுத்து வேற எவளையாவது கட்டிக்க சம்மதிப்பானா?" என்று தெளிவுப்படுத்தினார். 

     "அப்போ ஆரு..." என்றாள் சம்யுக்தா.

      "கூட தானே வந்துட்டு இருந்தான்" என திரும்ப அனைத்தும் கேட்டு கொண்டு இருந்தவன் பார்வை சம்யுக்தா மணிவயிற்றில் பார்த்திருந்தான்.

    அதே நேரம் "என்ன இங்க கூட்டம். ஒருத்தர் தான் இருக்கணும். மற்றவங்க பார்த்துட்டு உடனே கிளம்புங்க." என்று கூறி செல்லவும். 

    "ஆரவ்... சம்யுக்தாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போடா." என்றதும் "இல்லை...நான்.." என்று சம்யு கூற வர ஆரவ் பார்வை கண்டு அமைதியானாள். 

     "அம்மா.. இது என் அட்ரஸ்... இப்ப நான் அவளை கூட்டிட்டு போறேன். நீங்க நாளைக்கு வாங்க." என்று ஆரவ் முருகேஸ்வரியிடம் கார்டை கொடுத்து தாயிடம் சொல்லிவிட்டு, 

     "நான் போயிட்டு வர்றேன் வைஷ்ணவி... குழந்தை பார்த்துக்கோ... சந்துருவிடம் சொல்லிடு." என்று புறப்பட்டான். 

    கூடவே ஏந்திழையாக நின்றியிருந்தவளை கைப்பிடித்து அழைத்து சென்றான். 

     சம்யு அவனின் உரிமையான தீண்டலில் அவன் பின்னே சென்றாள். முருகேஸ்வரி பாட்டியிடம் மட்டும் தலையசைத்து கண்களில் செல்வதாக கூறினாள். அந்த முதியவளும் அதீத சந்தோஷத்தோடு வழியனுப்பினார். 

     காரில் ஏறியதும் அதீத அமைதி தாக்க, ஆரு பேசுவானா... புரிந்துக் கொள்வானா... தன் கருவை என்னவென்று ஏற்பான். அய்யோ... தவறாக எண்ணிவிட்டால்... என்ற மனம் குதிரைவிட வேகமாக பயணித்தது. 

     ஆனால் ஜனனியை திருமணம் செய்யவில்லை என்றதும் தனக்காக எல்லோரும் தேடிக் கொண்டியிருப்பதை ஒரளவு அவர்கள் பேச்சின் வலியில் உணர முடிந்தது. அதனால் இனி எந்த கிறுக்குத்தனமும் வேண்டாம் ஆரவ் பேசட்டும். அதுவரை எதையும் பேசி குழப்பப்படுத்த வேண்டாமென இருந்து கொண்டாள். 

    வீட்டுக்கு வந்து கார் கதவை திறந்து நின்றான். சம்யு அதன் பிறகே வீடு வந்தவுணர்வை அடைந்து இறங்கினாள். 

    வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல, சம்யுக்தா ஒவ்வொரு அடியாக எடுத்து ஹாலுக்கு வந்தாள். 

    ஆரவ் கிச்சனுக்கு சென்றான். வேகமாக மாதுளை பழச்சாறு கலந்து எடுத்து வந்து நீட்டினான். 

   பயணக்களைப்பிற்கும் இங்கு வந்த சேர்ந்த நிம்மதியும் அதை பருகியதும் இதமும் தந்தது. 

   ஆரவ் கண்கள் தன்னை தான் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவுகிறதென அறிந்து அசவுகரியம் அடைந்தாள். 

    மெல்ல அவன் பார்க்க அவனோ அவள் கையை பிடித்து எழுப்பி தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான். 

    மெத்தையில் அமர வைத்து கைகட்டி நின்றான். 

     சம்யுக்தாவுக்கு பழச்சாறு அருந்தியும் நாவறண்டது போன்ற உணர்வு. கண்கள் அவனை காணவும் அஞ்சியது. 

    எல்லாம் அவள் தங்கள் மெத்தையில் அமரும் வரை தான், முட்டியிட்டு அவள் மடியில் தலைவைத்தவன் கைகள் அவள் இடையில் கோர்த்து இருந்தன. 

     அவன் வலிய தோள்கள் மெல்ல குலுங்க அதன் பிறகே அவன் அழுவதை கண்டாள். 

     "ஆரு... அழுவறியா... ஆரு...." என்றவள் மனமும் உடைந்து விட்டது. 

    அவன் சிகையினை கோதி கொண்டு, "ஐ அம் சாரி டா... நான் உன்னை நேர்ல பார்த்துட்டு முடிவு பண்ணியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்." என்று கதறி அழவும், அவள் வயிற்றில் முத்தமிட்டு, "ஐ அம் சாரி டி... உன்னை என்ன என்ன பேசிட்டேன். தப்பு என் பேர்லயும் தான். இப்பவாது வந்தியே..." என்று அவள் வயிற்றில் முத்தமிட்டு அணைத்தான். 

      "ஆறு மாதம்..." என்று கேட்டு முடிக்க, 

      "ம்ம்ம்... ஆறு மாதம்" என்று சம்யுவும் கூறி ஆரவ் நெற்றியில் முத்தமிட்டு கண்களை கண்டாள். 

   அதில் இந்நாள் வரை தான் இல்லாத காரணத்தால் அவன் அடைந்த சோர்வு, வலியை கண்டாள். 

      தான் இங்கிருந்து சென்ற நாள் முதல் இன்றைய நாட்கள் வரை கூறி முடிக்க, ஆரவிற்கு சில பேர் மீது நல்ல எண்ணமும். சிலரை பழி வாங்கும் வெறியும் சேர்ந்தது. 

  அனைத்தையும் எண்ணி கொண்டு கோபமாக மாறியவனை அவன் சிசு ஒர் உதை கொடுத்து அதன் அசைவை அவனுக்கு உணர்த்தியது. 

    மற்றவை மறந்து அதன் அசைவை தொட்டு உணர்ந்து ஆனந்த பரவசம் கொண்டவன். தன் யுக்தாவை அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். 

    யுக்தா இத்தனை நாளின் வலியை ஒரே மருந்து கொடுத்து சரிபடுத்திய மருத்துவனாக ஆரவ் கண்டாள். 

  தன் வாழ்வின் முழுமை எல்லாம் ஆரவ் என்று யுக்தா எண்ண, அதையே வாய் வார்த்தையாக ஆரவ் கூறியிருந்தான். 
    
     "என்னோட வாழ்வோட முழுமை நீ தான் யுக்தா. என்னை விட்டு எங்கேயும் போகாதே." என்று அவள் தாமரை முகத்தை தன் நெஞ்சில் சாய்த்து கூறினான். 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

  - பிரவீணா தங்கராஜ்.

     
     

   

தீவிகை அவள் வரையனல் அவன் -28

🪔🔥-28

    அந்த குடிசை வீட்டில் சம்யு இருப்பதே குமட்டலை கொடுக்கலாம். அவள் வாழ்ந்த இடத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்... ஆனால் இன்று மசக்கை வாந்தியோடு சேர்ந்து போராடினாள். 

       "ஏன் தாயி இப்படி கஷ்டப்படணும். நீ உன்னோட வூட்டுக்காரரிடம் ஜீவனம்சமோ, இல்லை பணமோ கூட வாங்கி நல்லா இருக்கலாமே மா." என்று முருகேஸ்வரி தண்ணீரை நீட்டியபடி கொடுத்தாள். 

    கார்ப்ரேஷன் தண்ணீர் மேலும் குமட்ட தான் செய்தது. பில்டரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்திய சம்யுக்தாவுக்கு கஷ்டமாக இருந்தது. 

       எதையும் பழக வேண்டுமென்ற திடம் வந்துவிட, குமட்டினாலும் பருக துவங்கினாள். 

     அடுத்த நாள் முருகேஸ்வரி தன் கை காசு போட்டு இரண்டு நாள் கேன் தண்ணீர் வாங்கி போட்டாள். அது அவர்கள் கைக்கு மீறிய செலவு என்றாலும் அந்த பாட்டி செய்து விட்டாள். அடுத்த நாள் சமைக்க எதுவும் இல்லாமல் தவிக்க இரசமும் வேர்க்கடலை துவையலும் வைத்து கொடுக்க, இரசித்து உண்டாள். 

    முருகேஸ்வரி தட்டு கழுவ வெளியே சென்ற நேரம் பக்கத்து வீட்டில் இருந்த பழனிம்மாவும் வந்து நிற்க அந்தம்மாவிடம் பணம் கடனாக கேட்க அது உள்ளிருந்த சம்யுக்தா காதிலும் அப்பட்டமாக கேட்டது. 

   தன்னால் பாவம் பாட்டி கடனாளியாக ஆக வேண்டுமா? என்று இதயத்தில் கைவைத்து நிற்க, தாலி தட்டுப்பட்டது. 

   முகத்தை அழுத்த துடைத்து முடித்து, அந்த தெருவில் இருந்த கடையில் மஞ்சள் கயிறை வாங்கி தாலியோடு கோர்த்து முடித்தாள். 

     தாலி செயினை அடமானமாக வைக்க முருகேஸ்வரியிடம் நீட்டினாள். 

    "என்னம்மா நீ பொசுக்குனு தாலிசெயினை கழட்டிட்ட, போட்டுக்கோ மா." என்று பதறினார். 

   "பாட்டி... என் ஆரு கட்டின மாங்கல்யம் நெஞ்சில் சுமக்க இந்த மஞ்ச கயிறு போதும். அவரோட உயிரை சுமக்கற வயிற்றுக்கு தான் ஆரோக்யமான உணவு வேண்டும். அது அப்படியொன்னும் பழமா கொட்டி இப்ப என்னால சாப்பிட முடியாது தான். ஆனா சரியான விகிதத்ததில் உணவு எடுத்துக்கிட்டாளே போதும். இதை அடமானம் வைத்து நாளைக்கு கம்பு உளுந்து மளிகை சாமான் வாங்கிடுங்க. கொஞ்சம் சத்தா உணவை எடுத்துக்கறேன். " என்று கூறவும் முருகேஸ்வரிக்கு என்ன சொல்வதென்று புரியாவிட்டிலும் இது சரியாகப்பட்டது.

    பணத்தை வாங்கி அதை குருவி போல உபயோகப்படுத்த துவங்கினாள் சம்யுக்தா. 

     அதே நேரம் இத்தனை நாள் மயக்கத்தின் பிடியில் இருந்ததால் ஒரு ஸ்கேன் பார்க்க எண்ணினாள். உள்ளே குழந்தை நிலையென்னவோ? மயக்க மருந்தின் வீரியம் அதை பாதிப்படைய கூடாதல்லவா? அதனால் மருத்துவமனை நோக்கி சென்றாள். 

    அப்பாவுடனோ இல்லை ஆரவோடு இருந்திருந்தால் ஏசி மருத்துவமனை காத்திருக்க செய்திருப்பாள். இன்றோ அரசு மருத்துவமனையில் காத்திருந்தாள். 

     காலை எட்டிற்கு வந்தவள் மணி பதினொன்று ஆகவும் காத்திருப்பதில் நேரம் கழிந்தது. ஒரு வழியாக பார்த்து முடித்து திரும்ப ஒன்றை எட்டியது. என்ன அங்கிருந்த நர்ஸ் டாக்டர் கண்டு பயந்தாள். கெட்டவர்கள் சந்தித்து உயிர் திரும்பியதால் அந்த பயம் இருக்குமே. ஆனால் ஒரு தொழிலில் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. நல்லவர்களும் உண்டு. அந்த நர்ஸ் பேசிக்கொண்டே வலிக்காமல் ஊசி போட்டு மருந்து கொடுத்து முடிக்க, டாக்டர் குழந்தையின் வளர்ச்சியையும், மனதை அமைதிப்படுத்த நல்ல பாடலையோ,  புத்தகத்தினையோ படிக்க கூறினார்.  

   குழந்தை ஆரோக்கியமாக இருப்பதால் மனம் நிம்மதியடைந்தது. மனதை அமைதிப்படுத்த அந்த நர்ஸ் சொன்னது போல பாட்டு கேட்கணும் புத்தகம் படிக்கணும். மனசுல ஆரவ் குழந்தை சந்தோஷமா வரவேற்கணும் இதே யோசனையில் வந்தாள். 

   அந்த வழி கடக்கும் நேரம், நூலக கிளை என்று இருக்க அங்கே விசாரிக்க துவங்கினாள். ஏதேனும் அட்ரஸ் தந்துவிட்டு நூலகத்தில் மெம்பராக மாற கூறினார் அந்த கிளை நிர்வாகி. சரியென தலையசைத்து ஐடி எப்படி வாங்கயென யோசிக்க ஆரம்பித்தாள்.
   
    யோசனையின் பலனாக, தான் இருக்கும் இடத்தின் அட்ரஸ் வைத்து போஸ்ட் ஆபிஸ் ஐடி கார்டு வாங்கினாள்.

நிறைய புத்தகங்களை படிக்க துவங்கினாள். அதுவும் பெண்ணின் வீரமிக்க சுயசரிதைகள் குறிப்பிட்டு இருந்தன. 

    அன்று முருகேஸ்வரி பாட்டிக்கு உடல்சுகவீனம் அடைய இனி மனதில் தான் ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமும் தோன்றியது. அப்பொழுது தான் நுலகத்தின் நிர்வாகி இங்க காலை மூன்று மணி நேரம், மாலை  மூன்று மணி நேரம் அறையில் வருகை பதிவேடு செய்து, போவோர் வருவோர் படிக்கும் கணக்கை ஏட்டில் பதியவைத்து, புத்தகத்தினை எடுத்து தரும் பணிக்கு கூப்பிட தயங்காது சென்றாள். 

    அவளுக்கு தேவை ஒரு பணி அது குறைந்த சம்பளமென்றாலும் பரவாயில்லை. பெரிய பங்களாவில் வாழ வேண்டுமென்றால் அதிக பணம் வேண்டும். இது போல சின்ன குடிசையில் வாழ குறைந்த பணமே போதுமானதாக இருந்தது. 

       சம்யுக்தாவுக்கும் வேலை உணவு இடம் அதன் சுற்றிய ஆட்கள் கொசுக்கள் முதல் பழக்கப்படுத்தி கொண்டாள். 

    அன்று இரவு மின்சாரம் தடைப்படவும், தூக்க கலக்கத்தில் ஜென்ரேட்டர் ஆன் பண்ணலையா... பேன் போடுங்க." என்று தலையணையை அணைத்து உறங்க முருகேஸ்வரி சம்யுவை கண்டு பாவம் பெரிய வீட்டு பொண்ணு இங்க தங்கனும்னு விதி. பேசாம நாளைக்கு அவ புருஷன் வீட்டை கேட்டு நாம போய் பார்த்து பேசணும். என்று மனதில் எண்ணி உறங்கினார். 

   அடுத்த நாள் எந்த ஏரியா எந்த தெரு என்று சந்தடி சாக்கில் கேட்க, சம்யுவோ, பாட்டி உனக்கு பிடிக்கலைனா சொல்லு போறேன். ஆனா அவர் வீட்டை பற்றி அவயை பற்றி கேட்காதே. ப்ளிஸ்" என்றாள் சம்யு. 

     "அதில்லபா.... நீ அவசரப்பட்டிட்டியோனு தோன்றுது." என்று பேச, 

    "நானும் அப்படி நினைத்து தான் ஜனனியை பார்க்க போனேன். ஆமா பாட்டி போனேன். அவங்க எல்லாம் கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருந்தாங்க பாட்டி. ஜனனிக்கு அன்னிக்கு தான் கல்யாணம்.

      ஆரவ் கூட நடக்க போகுதுன்னு ஜனனி அம்மா சொன்ன அதே நாள். திரும்ப வந்துட்டேன் பாட்டி. ஆரவை வேற பெண் அருகே பார்க்க பிடிக்காம திரும்பி வந்துட்டேன். அது நடந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது பாட்டி. அப்பா வீடும் பூட்டி இருக்கு. அப்பா..." கண்கள் ஏதோ இருசொட்டினை உகுக்க, "அதனால அப்படியே திரும்பிட்டேன். " என்றதும் முருகேஸ்வரி அதற்கு பின் ஒரு வாரத்தை கூறவில்லை. 

      "இரு தாயி உனக்கு இங்கயே இருக்க தோன்றினாலும் இரு. இனி நானா போக சொல்ல மாட்டேன்" என்று உற்ற துணையாக மாறி போனார். 

     அக்கம் பக்கத்தில் சில நட்பு கிடைக்க வாழ்க்கை வட்டம் வேறு பாதையில் பயணிக்க, வயிரும் வளர ஆரம்பித்தது.

   நாட்காட்டியின் தேகமோ மெலிந்தது. ஆம் மேலும் மாதங்களை கடக்க, திகதி தாள்கள் கிழியபட்டடிருந்தது. 

    ஒவ்வொரு மாதமும் அரசு மருத்துவமனைக்கு செக்கப் சென்று தன்னலத்தையும், தன் சிசு வளர்ச்சியையும் அறிந்து கொள்வாள். 

     கிளை நூலக நிர்வாகியாக பணிப்புரிய அந்த இடத்திலும் நல்ல பெயரை பெற்று இருந்தாள். 

     அன்று ஆரவ் சாப்பிட்டு கொண்டிருக்க, சுபாங்கினி அவனுக்கு பரிமாறியபடி, "வைஷ்ணவி போன் செய்தா ஆரவ். கல்யாணம் தான் அவசரமா பண்ணிட்டிங்க. வளைகாப்பாவது விமர்சனையா பண்ணுவீங்களா மாட்டாங்களானு வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் நம்ம வைஷ்ணவி காதுப்பட பேசறாங்களாம். நம்ம சம்மந்தி மனசு நல்ல மனசுதான். ஆனா பாரு பிறந்த வீட்டு சார்பா... நாம செய்யற முறையையும் சரியா செய்யணுமே. சந்துரு மாப்பிள்ளைக்கும் ஆசையிருக்காதா... வைஷ்ணவியை விழாவில் அலங்கரிச்சு பார்க்க? நான் என்ன சொல்ல வர்றேனா..." என்று சுபாங்கினி முடிக்கும் முன், 

      "வளைக்காப்புக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க மா. பணத்தை கேசவிடம் வாங்கிக்கோங்க. திருமணத்தை நடத்திருந்தா இந்தளவு விமர்சனமா கொண்டாடியிருப்பாங்கனு பேசற அளவுக்கு செய்யுங்க. வேறயொன்னுமில்லையே மா. நான் போறேன்.." என அவனறைக்கு சென்றான். 

    சுபாங்கினி எதிர்பார்ப்பது போல முகம் மழித்து மற்றவரிடம் சோகத்தை மறைத்து பேசுகின்றான். ஆனால் வலி சோகத்தை இழையாக காணாதா தாயுள்ளம்.

    தற்போது வைஷ்ணவியையும் கவனிக்க வேண்டுமே. அதனால் அவளை பார்ப்போமென சென்றனர். 

    ஒன்பதாம் மாதம் விழாவை வந்தோர் வாயை பிளக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்திருந்தான். 

      அப்படியிருந்தும் வந்தோரின் வாயுக்கு அவலாக ஆரவின் வாழ்வு தான் பேசப்பட்டது. 

    மணமேடையிலே பெண் மாறியதும் வீம்புக்காக கட்டிய தாலியின் மதிப்பு ஒரு மாதம் கூட இல்லை என்றும் பேசிக்கடக்க, ஒவ்வோரிடமும் தன்னவளை பற்றியோ தன் காதலை பற்றியோ விளக்கவா இயலும். 
     
      ஆரவ் சற்று நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு புறப்படுவதாக எண்ணியிருக்க வைஷ்ணவியை பார்த்து அழைத்து செல்லும் பொருட்டு மனதை அடக்கி பொருத்திருந்தான். 

    சந்துரு ஆரவ் நிலை அறிந்தபின், விரைவாகவே வைஷ்ணவியை கூட்டிக்கொண்டு போக சொன்னான். 

     காரில் ஏறியதும் வைஷ்ணவி அண்ணாவிடம் தன் கணவன் உறவுக்காக மன்னிப்பை வேண்டினாள். 

   ஆரவ் கசந்தமுறுவலில் அவர்கள் சொன்னதில் தவறென்ன., என் நேரம் இப்படி தானே சென்று விட்டதென எதையும் பெரிதுப்படுத்தவில்லை. 

      சுபாங்கினி ஆரத்தி கரைத்து மகளை அழைக்க, வீட்டுக்குள் வந்ததும், "மனநிறைவா சம்யுவை அழைக்கலை... அதான் என்னவோ அவள் நம்ம வீட்ல நிலைத்து இருக்க முடியலை." என்று வருந்த, 

    "அம்மா... அவ இல்லைனாலும் அவ தான் இந்த வீட்டு மருமகளென நிலைத்து இருக்கும். அதுல மாற்றமில்லை." என அன்னை வந்தோர் பேசிய சில திருமண ஆபரை ஏதேனும் கேட்டுவிடக் கூடாதேயென்று முன்கூட்டியே திடமாக இதையும் சொல்லி கிளம்பினான்.
   
    இங்கு முருகேஸ்வரி பாட்டியின் வீட்டில் சம்யுக்தா பயபக்தியோடு சாமி படம் முன் வேண்டினாள். இத்நாள் வரை சம்யு சாமிகும்பிட்டு பார்த்திராததால் பாட்டி கேட்கவே செய்தார். 

      "என்னமா...இன்னிக்கு ஏதாவது விஷேஷமா..?" என்று கேட்கவும், தான் சாமி கும்பிடுவதால் கேட்கின்றாரென கூற ஆரம்பித்தாள். 

    "பாட்டி நான் எங்க அத்தையை பார்ததேன். இன்னிக்கு வைஷ்ணவிக்கு வளைக்காப்பு." என்று சந்தோஷப்பட்டு கூறினாள்.

    "என்னடா சொல்லற அத்தையை பார்த்தியா பேசினியா....?" என்றதும் முகம் சோர்ந்து போனாள். 

      "இல்லை பாட்டி... செக்கப் போன அன்று ஹாஸ்பிடலில் பார்த்தேன். அன்னிக்கு கொரானா என்றதால மாஸ் போட்டிருந்தேன். அத்தையும் மாஸ்க் போட்டிருந்தாங்க. என்ன முகம் அலம்ப மாஸ் கழட்டினாங்க.... பார்த்தேன். நெருங்கி போனப்ப தான், பத்திரிக்கை நீட்டி பொண்ணுக்கு வளைக்காப்பு சொன்னாங்க. 

     அவங்களிடம் பேசிட்டு இருந்தாங்க. அந்த நர்ஸ் அக்கா... பையன் எப்படி இருக்கான் பொண்ணு எப்படி இருக்கான். கேட்டாங்க. அத்தை அப்போ... நல்லா இருக்காங்க. பொண்ணு வளைகாப்பு வைத்து வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்னாங்க. பையன் இப்ப தானே கல்யாணம் செய்தான் நல்லா இருக்கான் சொன்னாங்க. ஏன் பாட்டி அத்தைக்கும் என் நினைவு வரலை போல.... நான் விலகி வந்ததில் யாரும் பீல் பண்ணலை பாட்டி." என்று அழவும் முருகேஸ்வரி சம்யுவை கண்டு, "ஏந்தாயி இங்க இருந்தாலும் உன் நாத்தனார் வளைகாப்புக்கு நல்லா இருக்கணும்னு வேண்டற பார்த்தியா... இந்த குணத்துக்கு நல்லது நடக்கும் டா. நீ வேண்டும்னா பாரு... இந்த கிழவி சொன்னது நடக்கும். உன் குழந்தை உனக்கு சந்தோஷத்தை கொடுக்க ஏதாவது மாற்றத்தை நிகழ்த்துவான்." என்றதும் கசந்த முறுவல் உதிர்த்து வயிற்றை தடவினாள். 

    அவளின் தீண்டலுக்கு அவள் குழந்தை அசைந்து கொடுத்தது. அதன் அசைவில் எல்லாம் மறந்து நிம்மதி கொண்டாள். 

     சம்யுக்தாவுக்கு ஆறாவது மாதம் இது... அதனால் நன்றாகவே அசைந்து கொடுத்து சம்யுவிற்கு அறுமருந்தாக மாறி இருந்தது அந்த சிசு.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

 - பிரவீணா தங்கராஜ். 

   
  

தீவிகை அவள் வரையனல் அவன்-27

🪔🔥-27

     தன் அத்தை சுபாங்கினி அல்லது வைஷ்ணவி இருப்பார்கள் என்று ஆவலாக வந்த சம்யுக்தாவுக்கு அங்கே கதவு பூட்டிய நிலையிலும், அங்கே இருவர் நிற்பதும் கண்டு விழித்தாள். 

      "நீ இன்னமும் சாகலையா... இங்க தான் சுத்திட்டு இருக்கியா.. ஜனனியை பேசி வளைத்து பணம் காட்டி ஆரவ் தம்பியை கட்டிக்க விடாம பண்ணி இருந்தார் உங்கப்பா. நீ என்ன பண்ண வந்திருக்க... ஆரவ் தம்பி தான் தாலியறுத்து வெளியே அனுப்பிட்டாரே... அப்படியே போய் தொலைய வேண்டியது தானே... எதுக்கு இப்படி வந்து நிற்கற... ஓ... ஜுவனம்சம் வாங்க வந்தியா... இப்ப தான் ஜனனி ஆரவ் நல்லபடியா பழக ஆரம்பித்து இருக்காங்க. 
    
    என் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. இப்ப மாறுபடியும் வந்து எந்த தகிடுத்தத்தம் பண்ணாதே..." என்று பொரிந்து தள்ளினார் ஜனனி அம்மா. 

    "ஜனனிக்கு கல்யாணமா...? யாரோட...? நீங்க யாரு....எதுக்கு என் மேல கோபப்படறீங்க" என்று வினாவை தொடுத்தாள் சம்யுக்தா. 

    "நல்லா நடிக்கிற வேற யாரேட ஆரவ் தம்பி கூட தான். போ... நிம்மதியா வாழ விடு அவரை." என்று கத்தவும் சம்யுக்தா தடுமாறி போனாள். 

     "அம்மா ஆட்டோ காசு 150 ரூபாய்... ஆட்டோவில ஹாண்ட் பேக்யை வைச்சிட்டீங்க." என்று ஆட்டோக்காரன் வந்து கொடுக்க, சம்யுக்தா இவர்கள் பேச்சையும் ஆரவ் ஜனனி ஒன்றாக சென்றதிலும் ஒப்பிட்டு பார்த்து விட்டு குரங்கு மனமானது வேறாக யோசித்தது. 

     ஆட்டோவில் ஏறி ஹாண்ட்பேகில் இருந்த பாட்டியின் அட்ரஸுக்கு போக சொன்னாள். 

    ஆட்டோவில் குலுங்கி குலுங்கி அழுதாள். 'ஆரு... நிஜமா உன் வாழ்வில் இருந்து நான் முழுசா போயிட்டேனா...' என்று அணலிலிட்ட புழுவாக துடித்தாள். 

      "என்னடி பண்ணற... திரும்ப ஏழரை இழுத்து வைக்கிற... இந்த பொண்ணை காணோம்னு அந்த தம்பி அப்படி பேயா தேடுது. நீ என்னனா நம்மை பொண்ணை கட்டிக்க போறதா புரளி அள்ளி விட்டுயிருக்க? இது மட்டும் அந்த தம்பிக்கோ இல்லை நம்ம பொண்ணுக்கோ தெரிஞ்சுது அம்புட்டு தான். எதுக்கு இப்படி பண்ண?" என்றார் ஜனனி தந்தை சீத்தாராம். 

     "பின்ன என்னங்க... நம்ம பொண்ணு ஆரவ் தம்பி கல்யாணம் பேசி திருமணம் மேடை வரை வந்து அவங்க அப்பாவால கல்யாணம் நின்னுச்சு... பணம் கிடைத்தது தான். ஆனா மானம் மரியாதை... உங்க தங்கை என்னலாம் பேசுச்சு. மறந்துப்போச்சா..." என்று எகிறினாள் அகிலாண்டம். 

    "உன் பொண்ணு தானே ப்ளாங் செக் என்றதும் அப்படி பண்ணா...? இந்த பொண்ணு மேல என்ன தப்பு." 

    "நம்ம பொண்ணை வைச்சிட்டு இவங்க காதலில் பொறாமையை உருவாக்கியது ஆரவ் தானே. அதான் அவ ஆரவ் தன்னை வைத்து விளையாடியதுக்கு தான் அப்படி செய்தா... இப்ப நல்லவனா அவனோட அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கிட்டா முடிஞ்சிதா... இப்ப பாருங்க உங்க தங்கையிடம் கெஞ்சி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கற நிலைமையா போச்சு. போக சொல்லுங்க இவளை..." என்று கிளம்பினார் 

     அகிலாண்டம் சீத்தாரம் இருவருமே சாதரணமாக பேசிவிட்டு புறப்பட்டனர். இது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகைய வலியை கொடுக்குமென அறியாது போயினர். 

    ஜனனியிடம் ஆரவ் தனக்கும் சம்யுக்தாவுக்கும் கடைசியாக நடந்த நிகழ்வை பகிர்ந்து இருந்தான். அதை தாயிடம் பகிர்ந்து இருந்தாள் ஜனனி. 

விதியானது தாலி கழட்டிய நிகழ்வு ஆரவிற்கும் தனக்கும் நடந்ததை எதற்கு  ஜனனிக்கு சொல்லி இருப்பான். அப்படியென்றால் ஆரவ் மனம் மாறி அவளிடம் சொல்லி திருமணம் வரை சென்று விட்டாரா? நான் அவரை பிரிந்தது ஒரு ஐம்பது நாள் இருக்குமா...? அதற்குள்.... எப்படி? என்று யோசித்தவளின் நினைவு முதலிரவன்று ஆரவ் 'இதே ஜனனினா இங்க இந்த அறையில் நடப்பதே வேற...' என்றும், சந்துரு அண்ணாவின் அம்மா வந்த அன்று  ஆரவ் 'இதே ஜனனியா இருந்தா நானே கைபிடிச்சு சந்துரு அப்பா அம்மாவிடம் நிற்க வைத்திருப்பேன்' என்றானே. ஜனனி இருந்தா அவ கழுத்தில தாலி கட்டியிருப்பேனு சொன்னாரே...

    ஜனனி மீது நல்லபிப்ராயம் வந்து இப்ப திருமணம் ஏற்பாடு பண்ணறாங்களா...? அப்படின்னாலும் முதல் மனைவி நான் இருக்கும் பொழுது...? என்ற எண்ணத்தில் ஜனனி தாயார் தான் அவர்கள் முன் நின்ற பொழுது நீ இன்னமும் சாகலையா? கேட்டாங்களே. அப்படின்னா நான் இறந்துட்டதா எண்ணிட்டாங்களோ...? அப்பா... அப்பா தேடியிருப்பாரே... அப்பா உடல் சுகவீனம் அடைந்ததும்... உயிரோட.. அய்யோ... அப்படி இருக்குமோ... அதனால தான் அப்பா என்னை தேடலையா...? என்று அழுதாள். 

      ஆட்டோக்காரன் "அம்மா இதுக்கு மேல போகாது. இடம் குறுக்கலா இருக்கு." என்றதும் பணத்தை கொடுத்து முடித்து இறங்கினாள். 
  
   அந்த பாட்டி மதியம் உணவை அந்த சின்ன வீட்டில் சமைத்து கொண்டிருருந்தார். 
   
   வாசலில் இருந்து எட்டி பார்த்தாலே வீட்டின் மொத்தமும் கண்டிடலாம். 

உள்ளிருந்து பாட்டி எட்டி பார்த்து ஓடி வந்தார். 

   "என்ன கண்ணு புருஷனை பார்த்தியா... என்ன சொன்னாரு. கூட்டியாந்துகிறியா...? என்று எட்டி பார்க்க, இல்லையென அசைத்தாள். 

    "வாயும் வாயிறுமா இருக்க முதல்ல உள்ள வா..." என்றழைக்க வந்தாள். வீட்டில் இருந்த எலுமிச்சையை கையில் பிழிந்து சர்க்கரை உப்பு சேர்த்து கலக்கி நீட்ட மறுப்பாக சம்யுக்தா சொல்ல, "இது உனக்கு இல்ல தாயி வயிறுல வளருற உசிருக்கு." என்றதும் மறுக்காமல் வாங்கி பருகினாள் சம்யுக்தா. 

      அதில் திடம் வந்ததா "பாட்டி அவர்ர்ர்... அவர்... வேற பெண்ணை திருமணம் செய்ய போறார்... நான் இறந்துட்டேனு நினைச்சிக்கிட்டர்" என்று மடைதிறந்து கொட்டினாள்.

    "என்னம்மா நீ... அம்புட்டு நெருக்கமா போயி ஒரு நிமிஷம் நேர்ல பேசிபுட்டு வந்திருக்க கூடாதா..." என்றார் முருகேஸ்வரி பாட்டி. 

    "பாட்டி... எனக்கு இங்க இருக்க இடம் தருவியா... நான் உன் கூட இருந்துக்கறேன். எனக்கு மனசு சரியில்லை பாட்டி." என்று பேசியதும் முருகேஸ்வரி உருகிவிட்டார். 

    "ராசாத்தி... நீ பார்க்க ராஜாவூட்டு பிள்ளை கணக்காகீற. இது சிமெண்டு தள வீடு. ஒரு ரூமில சமைச்சி ஒரு ரூமிலே சாப்பிட்டு தூங்கறவங்க. இங்க பாரு கக்கூஸை... நீ குளிச்சியே அந்த கக்கூஸை விட மோசம். நீ எப்படி தாயி தங்குவ." என்று பரிதவித்தார். 

     "பாட்டி அப்பா உயிரோட இருக்காரா இல்லையானு தெரியலை. அப்படியே இருந்தாலும் நான் வந்துட்டேனு ஆரவ் திருமணத்தை மறுபடியும் நிறுத்த முயற்சி செய்வார். என் ஆரவ் என்னோட வாழ முடியலைனா கூட அவராவது நிம்மதியா இருக்கட்டும். இது தியாக ரேஞ்சுல பேசலை. நாம விரும்பிய மனம் நல்லா இருக்கணும் என்ற நோக்கம் மட்டும் தான். நான் படிச்சிருக்கேன் பாட்டி வேலைக்கு போவேன். உனக்கு பாரமா இருக்க மாட்டேன்." என்று கெஞ்சவும் இதற்கு மேல் என்ன பேச, வயிற்று பிள்ளைக்காரியிடம். அதனால் "சரி இரு தாயி" என்று கூறி அரசாங்கம் கொடுத்த பேனை ஓடவிட்டாள். 

     அது 'கடக் கடக்' என சத்தமிட்டு ஓடியது. 

  சம்யுக்தாவுக்கு மனம் முரண்டியது. ஆரவ் திருமணம் செய்வானா..? இல்லை... தனக்காக காத்திருப்பானா? யோசனையிலும் சாப்பிட்ட காரணத்திலும் உறங்கிவிட்டாள். 

      இங்கு ஆரவ் ஜனனியோடு அந்த காபி ஷாப் வந்தான். ஜனனியின் பியான்சி சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேச ஆரம்பித்தார்கள். 

     "தியாகு ஆரவ் சார்." 

     "பார்த்து இருக்கேன் ஜனனி. உன் கல்யாணத்துக்கு வந்தப்ப மேடையில் அவர் வேற பெண்ணிற்கு தாலி கட்டியதை பார்த்தேன். ஐ அம் சாரி அப்போ உங்களை தப்பா நினைச்சேன்." கசந்த முறுவல் வந்தது ஆரவிற்கு, 

     "நானுமே ஆரவை தப்பா தான் புரிஞ்சுக்கிட்டேன்." என்றாள் ஜனனி. 

    "ஏன் ஆரவ் கேட்கறேனு தப்பா நினைக்காதீங்க. இங்க வரும் போதே உங்களிடம் நிறைய கேள்வி கேட்கணும்னு தான் வந்தேன். நீங்க தப்பா எடுத்துக்கலைனா?" 

     "தாராளமா கேளுங்க... தப்பா எடுத்துக்க மாட்டேன்." என்றான் ஆரவ். 

      "சம்யுக்தா அவர்களை இவ்ளோ நேசிக்கறவங்க. முன்னவே ஒரு நிமிஷம் மனம் திறந்து பேசி, அவர்களிடமே ஏர்போர்ட்டில் பார்க்க வந்ததையும் வாட்ஸப் டாக் சாமிநாதன் சூழ்ச்சி சொல்லியோ பிரச்சனையை பெரிசா வராம தடுத்து இருக்கலாம். 

    இல்லையா.... அவங்களை ஆபிஸ்ல பார்த்த அன்றே உரிமையா கேள்வி கேட்டுயிருந்தா கூட ஓகே... ஏன் அப்படி பண்ணலை." 

    ஆரவ் மேஜை நீரை பருகி, எங்க காதல் எல்லோரையும் போல ஐ லவ் யூ என்று ஆரம்பிக்கலை. ஒருத்தரை ஒருத்தர் என்ன நினைக்கறாங்க என்று அறிந்து வந்தது. அவ போன்ல எனக்கு மெஸேஜ் அனுப்பாமா, ரொம்ப நேரம் டைபிங் வந்து வந்து எதையும் அனுப்பலை. என் போனில் அவ நம்பரை ஸ்டோர் பண்ணியதும் என் போட்டோ பார்த்து அவளா டைபிங் பண்ணலை. அந்த நேரம் என் போட்டோ பார்க்க ஆசைப்பட்டா... அது அவ தெரிவிக்காம புரிஞ்சு நடந்தேன். அவ கண்ணு என்னை தேடுது அதுல என்னோட அன்பை காதலை எதிர்பார்க்கறா என்று நானா புரிஞ்சிக்கிட்டேன். அவ பில் பண்ணறதுக்கு முன்ன நானா பண்ணினேன். அப்போ அவ முகம் எவ்வளவு சந்தோஷப்பட்டா தெரியுமா. நாளைக்கு தர்றேன்னு அவ சொல்லியிருந்தா கூட கேன்டீன் ஆள் விட்டுட்டு இருப்பான். என்னோட காதலா கேட்டப்ப, திவேஷ் இடையில் வந்தப்ப எல்லாமே நானா புரிஞ்சி நடந்துக்கிட்டேன். 

    எங்கம்மா மோசமா திட்டினப்ப அதையும் எனக்காக புரிஞ்சி கேள்விக் கேட்காம அவ போனா, நிறைய விஷயம் அவ பேசாம நான் புரிந்து கொண்டது. நான் பேசாம அவள் புரிந்து கொண்டது. 

    அதனாலையோ என்னவோ, அவளிடம் நான் பேசாது அவளா புரிந்து வருவாயென்று எதிர்பார்த்தேன். ஆனா நான் ஜெயிலில் இருந்தது அவளுக்கு தெரியாதுனு புரிஞ்சிக்க முடியலை. திவேஷ் லவ் சொல்லி அந்த காதலை இவ தவிர்க்க பேசியதை என் காதலை சொல்லறானு புரிஞ்சிக்கிட்டேன். 

   அதுவொன்றுமில்லை... நாம இங்க எல்லாம் போவோம் அவமானப்படுவோம் என்று நினைத்து பார்க்காத போது ஜெயிலில் அடைந்தப்ப அனுபவித்த அதிர்ச்சி... அது மற்ற எதையும் தெளிவா யோசிக்க முடியாம தடுத்திடுச்சு. 

     இதுல வைஷ்ணவி மாட்டினப்ப, பேரதிர்ச்சி... வாழ்வுக்கும் சாவுக்கும் ரொம்ப போராடி தான் அந்த வருடங்களை ஓட்டினேன். 

    நாலு வருடம் நான் காத்திருந்தது எப்பவாது என் யுக்தா வருவா அவளை பற்றி சொல்வாயென்று தான். ஆனா வரலை... வர விடாம  தடுத்துட்டார். எனக்கு திருமணம் ஆனதுன்னு சந்துரு அப்பா சொன்னதை வைத்து வராம இருந்துருப்பா. 

     என்னை முதல்ல ஆபிஸ்ல பார்த்தப்ப, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைத்தா... அது எதுக்கு தெரியுமா..?" என்று ஜனனியை பார்த்து கேட்டான் ஆரவ். ஜனனி தெரியாதென்று தலையை மட்டும் அசைக்க,

    "அவள் என்னை பார்த்து அழுதுயிருப்பா. எங்க நேர்ல மீட் பண்ணி அப்போ அழுதுடுவோமோனு தான் ரொம்ப நேரம் அழுது முடிச்சி பிறகு கண்ணீர் வரலையென்றதும் என்னை கூப்பிட்டு இருப்பா. 

   வீட்டுக்கு வந்தா பொண்ணு போட்டோல நீ... நான் விரும்பியவள் என் உயிரானவளோடு உன்னை கணெக்ட் பண்ணி எப்படி பார்க்க? அம்மா தங்கை என் கல்யாணத்துக்காக எதிர்பார்ப்போட கேட்டப்ப மறுக்க முடியலை. நான்கு வருடம் பட்ட கஷ்டத்துக்கு நிவர்த்தியா கேட்டு நின்றப்ப, என் காதலி வந்துட்டா. அவளோட திருமணம் பண்ண அம்மாவிடம் பர்மிஷன் கேட்க முடியுமா? 

    சான்ஸே இல்லை தியாகு. திருமணத்தையும் தடுக்க முடியலை. சரி யுக்தாவும் என்னிடம் பேசவோ நெருங்கவோ முயற்சி பண்ணலை.

எனக்கு திருமணம் ஆனது என்று இதுவரை எண்ணியிருந்தவ, ஜனனி பியான்சி என்று அறிமுகப்படுத்தியதும் எதுக்கு ஜனனியோட என் திருமணம் நிறுத்தவும் மனசில்லை. 

     அவ அப்பவும் ஒதுங்கி போனா. நானா தான் அவளை டீஸ் பண்ண ஜனனியோட போட்டோ எடுத்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன். அதோட விளைவு தான். மனவுளைச்சலில் கார் விபத்து ஏற்பட்டு, சுவாமிநாதனுக்கு என்னோட ரீஎன்ட்ரி தெரிர்தது....  அவரால என்னை திரும்ப சந்திக்கவும், சம்யு தடுமாறுவானும் எதிர்பார்க்கலை. 

     என் காதலோட வெற்றி அது தான். சம்யு என்னை தேடி வந்தா... அப்பவும் உன்னை ஏமாற்ற நினைக்கலை. அவ மனசில் நான் இருக்கேன். திரும்ப சந்திச்சது எப்படி கடவுள் விட்ட விதியோ... அதே போல சேர்ந்தா ஓகே. நானா எதையும் எனக்கு சாதகமா பண்ணக்காடாதுனு வீம்பு. 

     நீ மண்டபத்தில் காணோமென்றதை விட அவ மண்டபத்தில் இருக்காயென்ற சந்தோஷம். வேற எதையும் யோசிக்காம தாலி கட்டினேன். 

    அம்மா அவளை பேசினப்ப எல்லாம் கல் மாதிரி இருந்தேன். அப்படியாவது அம்மா பாரம் போகட்டும்னு. ஆனா அம்மா புரிஞ்சிக்கிட்டாங்க. 

     எனக்கு தான் ஈகோ. என்னை விட அவ எங்க காதலில் அதே தீவிரத்துடன் இருக்கா. நான் தான் எங்க காதலில் தோற்றுட்டேன். அந்த கான்பிடன்ஸ் போனதிலேயே எனக்கு   மருந்தா அவளிடம் தான் என்னை தேடினேன். பழைய ஆரவ் அவளிடம் தானே தொலைத்தேன். திரும்ப அவளிடம் அன்பை, காதலை இயல்பா வெளிவர வைக்க முயன்றேன். 

     அடுத்த நாள் சுவாமிநாதன் நினைவு வருவதா போயிடும் என் மேலயே கோபம் வரும். என் பாதி யுக்தா. அவளிடம் தான் கோபத்தை காட்டினேன். அவ தாங்கிக்க முடியாத அளவுக்கு வார்த்தையை விட்டேன். 

    நாலு அறை அறைந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனா என் யுக்தா என் மனநிலையை கணித்து அமைதியா நடந்துக்கிட்டா. 

      இப்ப தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன். இப்பவும் அவ தள்ளியிருக்கானா... ஏதாவது காரணம் இருக்கும். இல்லைனா என் யுக்தா என்னை காயப்படுத்த மாட்ட." என்றவனின் முடிவில் தியாகு "சாரி ஆரவ் நான் ஜனனியை கைவிட்டதுக்கு தான் உங்களை கேள்விக்கேட்டு கஷ்டப்படுத்த நினைத்தேன். பட் பேசாமலே உணர்வினை புரிந்து அனுசரித்து வாழற வாழ்வை காதலை எங்களுக்கு புரிய வைத்திருக்கீங்க. உங்களை மீட் பண்ணியதில் சந்தோஷம்." என்று கை குலுக்க ஜனனி கண்களும் பனித்து இருந்தது. 

    "மேமுக்கு ஒன்றும் ஆகாது சார். வருவாங்க... உங்கள் காதல் திரும்ப கொண்டு வரும்." என்று ஜனனி பேச, ஆரவும் அவர்களுக்கு திருமண வாழ்த்தை பகிர்ந்து, பிறகு ஜனனி தியாகுவோடு செல்ல, ஆரவ் தன் காரில் கிளம்பினான். 

   'இந்த உடலில் தாடி மழித்து மற்றவரோடு இயல்பா பேசினா வருத்தம் இல்லைனு முடிவு கட்டிடறாங்க யுக்தா. ஆனா வலியை புதைத்துவிட்டு சிரிப்பான முகமா காட்டக் கொள்வதில் எத்தனை கஷ்டம் தெரியுமா. உனக்கு புரியாததா.... ஜனனிக்கு நகை  வாங்கி கொடுத்த அன்னிக்கு சிரிச்ச முகமா இருந்தியே அப்போ உனக்குள் இருக்கற வலி இதே போல தானே இருந்தது.' என்றவன் கண்களில் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ். 
    
hi 
blog la comments pandravankaluku spl thanksssss but 4 comments mela varalai... ots ok blog la comments post pandra 
chithra amutham sis 
zara sis
apram inum silaruku lot of thanks...🥰🥰🥰🥰
and 
முகநூலில் தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கம் தரும் அனைவருக்கும் நன்றி. 
குறிப்பா 
jeyagowri 
kalyani jeyakumar
nithya iyappan
nithya yogi
r rathika 
vinolina fernado
yagnitha shankar 
priya sankaran
rajam rajam 
rajalakshmi santhish
abirami bharanitharan 
kalai karthi 
viji kanna 
saju saju 
gajalakshmi saravanan 
kavitha saravanan
gayathri ganesan 
aparammmmmmmn niraiya per... irukenka (vitiruntha manichidunka) naan post panina udane read panni comments panni happy ya feel pana vaikirinka. thanks a lot. 😊😊😊


      

    

    

தீவிகை அவள் வரையனல் அவன்-26

🪔🔥-26

   சந்துரு ஆரவ் அலுவலகம் வந்து சேர்ந்தான். 

    "என்னடா... சாக மருந்து எல்லாம் வாங்கி ரெடி பண்ணிட்டியாமே... செத்து தொலைய வேண்டியது தானே. எங்க வாழ்க்கையும் சூனியமாகட்டும். 

    இதுக்கு மாறி மாறி லவ் பண்ணி தொலைச்சீங்களா... அவயென்னடானா எங்க இருக்காயென தெரியலை. நீ இந்த உலகத்தை விட்டே ஓட பார்க்கற... 

     காதல்னா எந்த பிரச்சைனை வந்தாலும் சேர்ந்து தானே சரிபண்ணணும். நீங்க மட்டும் ஏன்டா அதை பெரிசுப்படுத்திட்டே இருக்கீங்க." என்று வெடித்தான்.

     "இல்லைடா... நான் தப்பு செய்தா கூட என் யுக்தா என்னை விட்டு போகமாட்டா... எனக்கு அது நல்லா தெரியும்." ஆரவ் கூறினான்.

     "அப்ப மேடம் எங்க போனாங்க. சொல்ல முடியுமா....? முடியாதுல்ல.. உன் தங்கை கன்சீவா இருக்கா... ஆனா தினமும் ஆரவ் அண்ணா பாவம். பார்க்கவே கஷ்டமா இருக்கு. அண்ணி கண்டுபிடி சந்துரு சொல்லிட்டே இருக்கா. கன்சீவா இருக்கறவளை என்னால சர்தோஷமா பார்த்துக்க முடியலைடா. எப்ப பாரு உன் நினைவு, உன் தோற்றம்... அண்ணா எப்படி இருப்பார் தெரியுமானு எத்தனை முறை சொல்வா தெரியுமா. உங்க நிம்மதி போய் எங்க நிம்மதியும் கெடுக்கற டா." என்று கத்தினான். 

     "அத்தை வேலைக்கு போற நேரத்தை குறைச்சிட்டு நீ வர்றப்ப இருக்கணும் ஓடி வர்றாங்க. நீ ஏதாவது தப்பா முடிவு எடுத்திடுவியோனு பயந்து பயந்து வாழறாங்க. புரியுதா டா..." என்றதும் ஆரவிற்கு தன் நிலையால் மற்றவர்களும் பாதிப்பு அடைவது தெளிவாக புரிந்தது. 

    "சாரி டா..." என்றதும் "முதல்ல இந்த முகறகட்டையை மாற்று... எனக்கே எரிச்சலா இருக்கு." என்று கூறினான். 

     "ஆரவ் உள்ள வரலாமா?" என்றதும் சந்துரு ஜனனியை கண்டு இன்னமும் கொதிநிலைக்கு போனான். 

     "ஆரவ் நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிந்தது. அடுத்த நல்ல நாளில் கல்யாணம் வைக்க போறாங்க. போன முறை மேடை வந்து நிறுத்திட்டேன் அதனால அம்மாவோட அண்ணன் பையன் கோலில் வைக்கலாம்னு சொல்லிட்டார்" என்று வந்து சொல்பவளை கண்டப்பின் சற்று நிம்மயியடைந்தாலும் இவளின் வருகையும் சம்யுவுக்கு பிடிக்காதவொன்று தானே என எரிச்சல் உருவாக்கியது. 

     "கல்யாணத்துக்கு வந்திடுங்க. அம்மாவோட வீட்டுக்கு வந்து சொல்லறேன்." என வெளியேறினாள்.

      சந்துரு முறைக்க அதன் காரணம் அறிந்த ஆரவ், "நீ நினைக்கிற மாதிரி யுக்தா இவளோட என்னை சந்தேகிக்க மாட்டா. அவளுக்கு இவளை வேலையில் வைத்தது ஒரு பெண்ணோட வேலையை பறிக்க காரணமென புரியும்." என்று பதில் தந்தான். 

      "ஓஹோ.... அப்ப சம்யு எதுக்கு உன்னிடம் சொல்லாம மாயமாகணும். அவளோட அப்பா கிரிடிகல் சூழ்நிலையில் எங்க போனா... அதையும் சொல்லேன். நீ தான் அவள் கண்ணை பார்த்து சொல்லற ஆளாச்சே." என்று சினத்தை மொழிந்தான்.
    
     "நிறுத்து டா. என் யுக்தா தவறா புரிந்து போகலை. என் வார்த்தை வீரியம் அவளை அப்படி போக வைச்சிடுச்சு. கோபம் போனதும் என்னை தேடி வருவா. அவ என்னோட யுக்தா." என்று திடமாக கூறினான். 

    "அப்ப... வருவா..?" 

      "கண்டிப்பா... நானும் யுக்தாவும் திரும்ப காதலர்களாக வாழ்க்கையை துவங்குவோம்." என்று உரைத்தான். 

     "அப்ப எதுக்கு தேவதாஸ் தாடி. எடுத்தெறி..." என்று சந்துரு கூறி இடத்தை விட்டு வெளியேறவும். ஆரவ் தாடியை தடவி பார்த்தான். 

     ஹாஸ்பிடலில் அனுரேகா வர தாமதமானது. பஞ்சர் பஸ் கிடைக்காமல் சதி செய்ய, ஆட்டோவும் கொரானா காலம் என்பதால் அதிகமாக இல்லாமல் போக, தாமதமாக வந்து சேர்ந்தாள்.

    அதற்குள் சம்யுக்தாவுக்கை இரவு போட்ட மயக்க மருந்தின் வீரியம் அவள் உடலில் குறைய துவங்கியது. இதில் அனுரேகா வந்ததும் நர்ஸ் எல்லோரையும் ஒரே நேரத்தில் அசம்பல் ஆக சொல்லவும் அங்கே செல்ல புறப்பட்டாள். 

     பாதிக்கு மேல் சம்யுக்தா நினைவு தான். இந்நேரம் மருந்து வேலை நீங்கியிருக்குமே... என்ற பதட்டம் மேலோங்க, பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு ஓடி வந்தாள். அறைக்கு வந்து பார்க்க சம்யுக்தா இருந்த பெட் காலியாக இருந்தது. 

    அச்சோ... இந்த பெண் காணுமே... என்ன பதில் சொல்வேன். ஹாஸ்பிடலில் யாருக்காவது தெரிந்தா என்னவாகறதென பதட்டம் அடைந்து, கைப்பையை அகற்றி வைத்து, அறையை பார்வையிட பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டுது. 

     கதவின் மீது கையை வைக்க, அது திறந்தது. சமயுக்தா நீரை அள்ளி முகத்தில் அடித்தவள் அனுரேகாவை கண்டதும் வாலியால் மண்டையை அடிக்க, அனுரேகா பயந்து பின்னடைந்தாள். 

     "என்னை விட்டுடு. நான் போகணும். எதுக்கு இப்படி செய்யற... உனக்கு பணம் தானே வேணும். என் ஆரவிடம் வாங்கி தர்றேன். எனக்காக எத்தனை கோடியென்றாலும் கொட்டி தருவான்." என்று பேசவும் அனுரேகா பயந்து, 

     சத்தம் போடாதே... கீழே பெரிய டாக்டர் வந்துயிருக்காங்க. ஏதாவது என்றால் அந்த டாக்டர் தப்பிச்சிடுவார். நான் மாட்டிப்பேன். இப்ப என்ன உன்னை விடணும் அவ்ளோ தானே. போ... யாருக்கும் தெரியாம போயிடு." என்று அருகே வர முயற்சிக்க,

    "கிட்ட வராதே... வந்தா... கொலை பண்ணிடுவேன்." என்று சம்யுக்தா நகர்ந்து செல்ல, 
   
     "என்னை கொண்றுட்டு ஜெயிலில் பிள்ளையை பெற்றுப்பியா? இங்க பாரு... எனக்கு இனி பணம் வேண்டாம். நீ அடிச்சிட்டு தப்பிச்சிட்டனு நானே சொல்லிக்கறேன். ஆனா என்னை மாட்டிவிடாதே." என்று பதவிசனமாக பேசினாள். 

     "என்ன சொல்ற பிள்ளையா...?" என்று சம்யு குழம்பி தவிக்க, 

     "ஆமா... நீ கர்ப்பமா இருக்க. பிளட் டெஸ்ட் இதோ அங்க இருக்கு." தேதி கேட்டு தனக்கு திருமணமாகி நாட்களை கணக்கிட்டாள். ஆரவோடு வாழ்ந்த  நாட்கள் மிகச்சரியாக பொருந்த, தன் ஒட்டிய வயிரை தடவி பார்த்தாள். 

     இனியும் இங்கே மயங்கி உறங்க சம்யு தயாராகயில்லை. வாலியை எடுத்து "வழியை விடு... இல்லை... கத்தி கூப்பாடு செய்து உன் வாழ்க்கையை ஒன்றுமில்லாமா பண்ணிடுவேன்." என்று கத்தவும், அதற்குள் சரியாக பக்கத்தில் இருந்து பெரிய டாக்டர் எல்லாம் விரைந்து பேசியபடி வர, சம்யுக்தா அங்கிருந்த அனுரேகா கைப்பையை எடுத்து கொண்டு வெளியேறினாள். 

       ஓடிவந்தவள் நேராக சென்றது என்னவோ தன் வயிற்றில் கரு உள்ளதாயென பார்க்க தான். அங்கேயே இருக்க பயந்து உடனடியாக ஆட்டோ பிடித்து வேறு இடம் பெயர்ந்தாள். மருந்துக்கடை அருகே பிரகனசி கிட் வாங்கியதும் எங்கே சென்று கண்டறியயென்றே பார்க்க அங்கே பொது கழிப்பறை தான் தென்பட்டது. 

    கண்கள் இடத்தை அறிந்ததும் அதன் நாலாபுறம் கெட்ட வாடை வீசியதை அறியாது ஒரு கழிவறைக்குள் புகுந்து கர்ப்பம் உண்மையாயென ஊர்ஜிதம் செய்ய நிமிடங்கள் கடந்தது. அந்த சில மணித்துளிகள் தான் இடத்தை ஆராய்ந்தாள். 

     இரு கோடு அங்கே பிரகாசமாக தெரியவும் அங்கே அந்த தூசு படிந்த கதவை திறந்து வெளியே வந்தவள் இடமும் வாடையும் குமட்டியெடுக்க, வாந்தி எடுத்தாள். குடலை பிரட்டியது ஆனால் வாந்தியாக எதுவும் வரவில்லை. உணவு இல்லாத உடல். வெறும் மருந்து மாத்திரை புண்ணியத்தில் இதுநாள் வரை இருக்க, ஆரவிடம் தன்னிலை சொல்லி அவனின் குழந்தை தன் மணிவயிற்றில் உதித்தை பகிரவேண்டும் என்று எண்ணும் பொழுதே ஆரவ் நினைவு அதிகமாக வாட்டியது. அவன் தோளில் சாய்ந்து அழவேண்டுமென தோன்ற இடத்தை மறந்து அழுது கொண்டிருந்தாள். 

    அப்பொழுது அங்கே ஒரு முதிய பெண்மணி சம்யுக்தாவை கண்டு, "எதுக்கு அழுவுற தாயி.... பார்க்க நல்ல பெரியவூட்டு பொண்ணா இருக்க, காதலிச்சவன் கைவிட்டுடானா?" என்று அருகே வர, சம்யுக்தா கையில் இருந்தவையை கண்டு, 

    "அடகிரகமே புள்ளையை கொடுத்துட்டு ஆளு பறந்துட்டானா...?" என்று கேட்டதும் 

    "இல்லை பாட்டி.... அவர் என்னை கைவிடலை. கைவிடவும் மாட்டார். எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு." என்று சம்யு பயில் சொன்னாள். 

     "அப்ப... இது..? இங்க எதுக்கு அழுவுற... உன் புருஷன்காரன் இல்லாதப்ப, மாமியார்காரி துரத்திட்டாளா...?" என்று கேட்டார்.  

     "அய்யோ..  அப்படியெல்லாம் இல்லை பாட்டி..." என்று நடந்தவையை சொல்லி முடிக்க, பாட்டி வாயை பிளந்து கேட்டார். 

    "ஏம்மா... அவன் பொண்ணுக்கு இதயம் வேண்டும்னு. உன்னை மயக்கத்துல வைச்சிருந்தானா? நல்ல வேளை கொரானா வந்து உன்னை காப்பாற்றிடுச்சு. இல்லை... உன் நிலைமையை யோசி... சரி சரி உன் ஊட்டுக்காரனுக்கு விஷயம் சொல்லு... வந்து கூட்டிட்டு போகட்டும்." என்று கூறவும் தன் உடை கண்டு நாணி, பாட்டி நான் ரொம்ப நாளா பெட்டில் இருந்தேன் அதனால குளிச்சிட்டு நானா ரெடியாகறேன். உங்களிடம் போன் இருக்க? பேசிட்டு தர்றேன்" 

    "அய்யோ இல்லையே மா. குளிக்கறேன்னு சொல்லறியே உடுத்த டிரஸ் இருக்கா?" என்றதும் விழித்தாள். 

    "கைப்பையில் பணம் இருக்கா கொண்டா... ஒரு புடவை ரெடிமேட் ஜாக்கெட் வாங்கி வர்றேன். கட்டிக்கிட்டு ஆட்டோ பிடிச்சி போ" என பாட்டி பணத்தை பெற்று கிளம்பினாள். 

       பொது கழிப்பிடம் பெண்கள் தனி வழி என்றாலும் அங்கே நிற்கவும் திகிலை தந்தது. பாட்டியிடம் போன் இருந்தால் ஒரு வார்த்தை போனில் ஆரவிற்கு தன்னிலை தெரிவித்து இருக்கலாம். சரி வெளியே சென்றதும் பிசிஓ கால் செய்து பேசலாம். 

     இல்லை ஆரவ் வீட்டுக்கு போயி நேர்ல சொல்லலாம். தனக்கு நேர்ந்தவையை கூறினால் ஆரவ் ஆடிப்போவான். பதமாய் கூறி முடிக்கணும். அதுவுமில்லாம அந்த டாக்டர் யாருனு கண்டுபிடிச்சு ஆரவால் நாலு தட்டு தட்டி எடுக்கணும். 
   
    "இந்தாடி மா. குளிச்சிட்டு கட்டிட்டு வா." என்றதும் பாட்டி வாங்கிவந்தவையை எடுத்து குளித்து கட்டிக்கொண்டாள். சின்ன சோப் அங்கேயே வைத்துவிட்டு ஈரத்தலையோடு கிளம்பினாள். 

    பாட்டி வாங்கி வந்த காய்ந்த இட்லி சற்றே ஊசிப்போன சாம்பார் என்று இருந்தாலும் இந்நாள் வரை உணவு சாப்பிடாது இருந்த வயிறு தானாக விழுங்கியது. 

      சாப்பிட்டு முடித்தப்பின் ஆட்டோ பிடித்து,  பாட்டியிடம் நன்றி கூறி கிளம்பினாள். ஒருகணம் நிறுத்தி, "பாட்டி உங்க அட்ரஸ்... ஆரவோடு உங்களை பார்க்க வர்றேன்." என்று கேட்க, அவரும் விலாசம் எழுதி கொடுக்கவும், வாங்கி கொண்டு அறக்க பறக்க ஆட்டோவில் பயணித்தாள். 

     இத்தனை நாள் நான் இல்லாம ஆரவ் எப்படி துவண்டு போயிருப்பாரோ. இதில் கடைசியா சண்டை வேற... தாலியை தொட்டு பார்த்தாள். ஆரவ் அணிந்த பொன்தாலி தடவி பார்த்தாள். ஆரவ் அணிவித்த செயின் கழுத்தில் இல்லை. 

    அய்யய்யோ ஆரவ் வீட்டுக்கு வந்தப்ப எனக்கு போட்டு விட்டதே. நல்ல வேளை தங்கமென்று தாலியை கழட்டலையென்று நிம்மதி அடைந்தாள். 

     இதோ பத்து நிமிடம் அதன்பின் என் ஆரு பார்த்துவிடுவேன் மனதில் எண்ணியவள் கண்கள் கலங்கி ஆசையோடு இறங்கினாள்.

    அங்கே ஆரவ் மற்றும் ஜனனி இருவரும் காரில் ஏறி கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

    வழவழப்பான கன்னம் ஒயிட் ஷர்ட் ப்ளூ ஜீன் என்று ஆரவ் இருக்கையில் அமர்ந்து கொள்ள முன்பக்கம் ஜனனி அமர்ந்து சீட் பெல்ட் போட தெரியாமல் விழிக்க அதை ஆரவ் போட்டு விட்டு காரை எடுத்தான். 

     இதை கண்டு ஆரவை கூப்பிடும் சக்தி அற்றவளாக நின்றாள் சம்யுக்தா. 

        மனதில், கண்ணால் பார்ப்பது எல்லாம் வேறொரு பரிணாமத்தில் தோற்றுவிக்கலாம். வீட்டிற்கு சென்றால் அத்தை இருப்பார்கள் அவர்களிடம் கேட்டுப்போமென வீட்டை நோக்கி பயணித்து வாசலில் கேட்டில் கை வைத்தாள். கதவு பூட்டியிருக்க அங்கே இருவர் நின்றிருந்தனர். 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

சிரமமில்லாமல் சில கொலைகள்-9

🩸-9

    சர்வேஷ் தன் கை அடிக்கடி சில்லிட்டு இருப்பதை உணர்ந்தான். 

   என்னவோ தனக்கு இது புதுவுணர்வாக இருக்க, நிம்மதியும் கொண்டது மனம். 

    சாந்தனு ஓரபார்வையோடு அவனருகே வந்தமர்ந்தான். 

      "என்னடா... ஒரு மார்க்கமா இருக்க? கொலை செய்ய இன்னமும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டு முடித்தான்.

     "நீ தான் பேலன்ஸ்..." என்று சர்வேஷ் கோபமாக சொல்லி முடித்தான்.

   "பின்ன என்னடா... ஒன்றா... இரண்டா... கொலைகள். லிசா அவ பேரண்ட்ஸ். அப்பறம் இரண்டு பேர் ஒன்னா போட்டு தள்ளியது. சேர்த்தா ஐந்து பேர் ஆகுது. ஆமா... லிசாவை டச் பண்ண பார்த்ததா சொன்னியே ஆடலரசன்.... அவனை கொன்றுட்டியா?" என்று கேட்கவும், 

      "பச் அவனும் என்ன ஆனானு தெரியலை பா. ஏய்.. என்ன சொன்ன.... நான் கொன்றேனா... அடப்பாவி... போற வர்ற நேரம் யார் காதிலாவது விழுந்தது சந்தேக கேஸ்னு உள்ள தள்ளிட போறாங்க டா. நான் பச்சை மண். அந்த கருப்புபுகை இளவழகன் தான் கொல்லறான். நீ என்ன என்னவோ நானா போய் கொல்லற மாதிரி பேசற. பார்த்து டா... பீச்ல எவனாவது மப்டி போலிஸ் இருக்க போறாங்க." என்று பயந்தான் சர்வேஷ். 

      "பண்ணிட்டாலும்.... டேய்...யவனரதி... அபரஞ்சி... இந்த காலத்துல என்ன பெயர் இருக்கும்? பெயர் ஏதாவது தெரியுமா?" என்று சாந்தனு கேட்க, 

      "தெரியலையே டா...  நமக்கு தேவையானதை மட்டும் இந்த இளவழகன் க்ளு கொடுக்கறானா பாரு..." என்று திட்டினான். 

      சாந்தனுவும் மனசுக்குள்ளே திட்டினான். 

     ஏதாவது முடிவெடுக்க விடுங்கடா.... என்னை சோதிக்காதீங்க என்று இருவரும் மணலை தட்டிவிட்டு புறப்பட்டனர்கள். 

      ஜாஸ்மின் மற்றும் மெர்லின் இருவரும் அவ்விடம் வந்து அமர்ந்தார்கள். 

      இளவழகன் உருவம் அந்த மாலை நேரத்தில் மெர்லினை சுற்றி வந்து இரண்டு நொடிகள் முன்பு வந்திருக்க கூடாதா? அபரஞ்சி. எப்பொழுதும் நமக்கு இந்த நேரம் தாமதம் கொண்டு நம்மை செயல்படவோ, தடுக்கவோ செய்கின்றது. நம் காதல் கைக்கூடும்... இந்த ஜென்மத்தில் யாரையும் இடைப்புகுந்திட விடமாட்டேன் கண்மணியே... 

     உன் அருகே ஆன்மாவாக அலைவது உன்னை இந்த பிறவியில் வாழ வைத்து உன்னோடு வாழத்தான். 

      மெர்லின் சுற்றி சுற்றி பார்க்கவும், "(பீனட்)வேர்கடலை வேண்டுமா...?" என்று கேட்கவும் "நோ" என்றவள் அலைப்புறம் கண்களில் நெருக்கமான உறவை தேடினாள். 

      "ஜாஸ்மின் எனக்கு யாரோ பக்கத்தில வந்து பேசற மாதிரி இருக்கு." என்று பேசவும், ஜாஸ்மின் இதுபோல பேச நேரும் என்பதை அறிந்து அவளை கடலில் விளையாட அழைத்து சென்றாள். 

      கடலில் இறங்கி முட்டி வரை சென்றவள் மனம் அதிவேகமாக துடித்தது. 

     "ஜாஸ்.. ஜாஸ்மின்... எனக்கு மூச்சு முட்டுது... ப்ளிஸ்... வீட்டுக்கு போகலாம்." என்று சொல்லவும் இளவழகனோ, 'யவனரதி....அபரஞ்சி நினைவு உன்னை தாக்குகின்றது. சற்றே பொறுத்திருந்து உன் முன் ஜென்மத்தின் நினைவை மீட்டு எடு.' என்று இளவழகன் அவளின் அருகே பழைய நினைவுகள் வருகின்றதா என்றே ஆராய்ந்தான். 

      வேகவேகமாக கடற்கரைக்கு வந்தவள் மூச்சை சீராக எடுத்து திரும்பி பார்த்தாள். 

     அங்கே கடல் சூழ்ந்த இடம் கோவிலாக மாறி தன்னருகே கையை நீட்டி அவன் வந்தான். அவனின் முகம் காண்பதற்குள், ஜாஸ்மின் முகத்தில் தட்ட இடங்கள் மாயமானது. 

    தன் கையை கடல் நோக்கி விடுவிக்கும் பொருட்டு நீட்டிய மெர்லின் அந்த கையின் இருந்த காப்பை மனக்கண்ணில் கொண்டு வந்தது. 

     இதற்கு மேல் மூளை அதன் போக்கில் விட மெர்லினால் இயலாது   தங்கியிருக்கும் அறைக்கு செல்ல முடிவெடுத்தனர்.

     மருத்துவர் கொடுத்த மாத்திரையை விழுங்கி படுத்துறங்கினாள். சாப்பாட்டை தவிர்த்து விட்டாள். 

    அதிகாலை வெளியே போக வேண்டுமா என்ற எண்ணத்தை கலைத்தது ஈஸ்வரின் டூரிஸ் அண்ட் கையிடு போன் அழைப்பு.

    "மேம்... இன்னிக்கு கோவில் போகற டீம் அப்பறம் முட்டுக்காடு டீம் ரெண்டு இருக்கு... உங்களுக்கு எந்த டைப் வேண்டும். சொன்னிங்கனா... அவங்களோட வண்டி நம்பர் போன் நம்பர் டிரைவர் டிடைய்ல் அனுப்பி விடறேன்." என்றதும் 

     கோவிலா.... என்ற மனமோ அதில் ஆர்வமின்றி, "சார் நான் வரலை சாரி." என்று வைக்க போக... 

    "மேம்... ஒன் செகண்ட். நீங்க நேற்று நடந்து இன்சிடெண்ட் வைத்து தவறா புரிஞ்சிக்கிட்டீங்க. இனி மிஸ் பிகேவ் பண்ணாம மரியாதையை நடத்தற மாதிரி ஆட்களை தான் அனுப்புவேன். வார்ன் பண்ணியிருக்கேன்." என்றான் சர்வேஷ்.

    "சார் அதனால எல்லாம் இல்லை... கொஞ்சம் மைண்ட் டிஸ்டர்ப். அதனால தான்... அதுவும் இல்லாம நான் கிறிஸ்டியன்." 

     "மேம்... கலையை ரசிக்க தானே போறோம். மதம் பிரச்சனையில்லை. உங்களுங்கு மனசு சரியில்லைனா... போட்டிங் போகலாமே... முட்டுக்காடு? உங்களுக்கு எங்க டிராவல் ஆளாள... பிடிக்கலைனா." 

     "சார் சார்.. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு அந்த சங்கடம் இருக்கா... விடுங்க நான் முட்டுக்காடு வர்றேன்." என்றதும் 

      "தேங்க்ஸ்... தேங்க்ஸ் மேம். ஹோட்டலில் பிளேஸ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க. நாங்க வந்திடறோம்." என்று பேசி வைத்தான். 

       மெர்லின் கண்ணாடியில் தன்னை பார்த்தாள் தான் சோர்வாக காட்சியளிப்பதை கண்டு தன்னை சுறுசுறுப்பாக மாற்றிட அலங்கரிக்க ஆரம்பித்தாள். 

      ப்ளூஜீன், ஒயிட் டாப் என்று சன் கிளாஸ் எடுத்து கொண்டு தனது ஹாண்ட் பேக்கை எடுத்து மாடலிங் போன்று வைத்து பார்த்தாள். 

     கண்ணாடியில் கைவைத்து 'உனக்கு பிடிச்சிருக்கு தானே...' என்று கேட்க இளவழகனோ 'இல்லை யவனரதி அணிகலன்கள் அற்ற நீ... தவழ தவழ பட்டுடையுடுத்தாத நீ எம் கண்மணிக்குள் அழகாக தென்படவில்லை' என்று எண்ண அவனின் எண்ணவலைகள் அவள் பொருட்படுத்தாது கடந்தது. கண்ணாடி தான் இக்கால யுவதி நீ என்று அழகாக உள்ளாய் என்று பிரதிபலித்ததே. 

      இளவழகன் ஒரு புன்னகை வெளிப்படுத்தி அவளோடு நிழலாக புறப்பட்டான். 

      மினி வேன் ஏற்பாடு செய்து அதில் இரு குடும்பம் சகிதம் இருக்க, வெளியே மெர்லினுக்காக காத்திருந்தான் சர்வேஷ்வரன். 

      மெர்லினுக்கு போனில் அழைப்பை தொடுத்து அவள் எடுத்து பேச காத்திருக்க அவளோ ஒயிலாக நடந்து வந்தாள். 

    "உங்களுக்கு தான் மேம் வெயிட்டிங்." என்று கதவை திறக்க, 

      "நீங்க.....?" என்று கேட்டதும் 

      "எஸ் மேம். நானே வந்துட்டேன்." என்றவன் "ரபிக்.. வண்டியை எடுங்க" என்று அமரவும் மெர்லினுக்கு இடது பக்கம் பின்னிருக்கையில் அமர்ந்தான். 

      வண்டிப் புறப்படவும் கருப்புருவம் அகமேந்தி அருகே பாதுகாவலனாய் நின்றது. 

      சர்வேஷ்வரன் பயணத்தின் போக்கில் மெர்லினை காண யாரோ காணவிடாது தடுப்பதாய் தோன்ற தலையை அங்கும் இங்கும் அசைத்து எட்டி பார்க்க மெர்லின் அதே நேரம் திரும்பிடவும் சர்வேஷ் திடுக்கிட்டு திரும்பி கொண்டான். 

      'ஒஎம்ஜி... இந்த பொண்ணு ஏற்கனவே நம்ம கையிடை உண்டுயில்லைனு ஆக்கிட்டா. அவன் தப்பு பண்ணினான்  ஓகே. நான் சாதாரணமா பார்க்க, என்னவோ நானும் அதே மாதிரி ட்ரீட் பண்ணறேனு ஏதாவது அசம்பாவிதமாகி டிராவல்ஸ் நேம் பாதிக்க கூடாது. பொறுப்பாயிரு சர்வேஷ். 

    'சைட் அடிக்க அபரஞ்சி வருவா.... இந்த கர்லி ஹேர் வைத்த மெர்லின் எல்லாம் வேண்டாம் டா...' என்று தனக்குள்ளே சொல்லி ஜன்னலை கவனித்தான். 

       கண்ணாடி ஜன்னலில் மெர்லின் அருகே கருவுருவம் இருக்க கண்டவன் திரும்பவும் அதுயில்லாமல் போக தனது பிரம்மையென்றே முடிவு கொண்டான். 

    இருந்தும் தற்சமயம் எல்லாம் இளவழகன் அபரஞ்சி பற்றி எதுவும் தெரியாததால் மனதுக்குள் 'மிஸ்டர் இளவழகன் அமைதியா இருப்பது எதுக்கோ...." என்றவாறு கண் மூட ஜன்னல் காற்றில் உறக்கம் தழுவியது. 

    உறக்கத்தில் கருப்புருவம் வாளினை ஏந்தி, சர்வேஷ் முன் நின்றது. 

     "வந்துட்டியா... என்னடா  ஆளை காணோமேனு தவித்து போயிட்டேன்." 

     "என்னை காண அத்தனை ஆவலா சர்வேஷ்" என்றது இளவழகன் உருவம். 

     "சே சே... இப்படி முகம் தனியா உடல் தனியா வந்து அடிக்கடி மிரட்டுற உன்னை பார்க்க விருப்பம் இருக்குமா... அபரஞ்சி அபரஞ்சி எப்ப என்னைத் தேடி வருவா...? அவளை காட்டேன். எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு." என்றதும் இளவழகன் சிரித்து கொண்டு, 

    "நங்கையவள் நேரில் வந்தும் இம்மியளவு நினைவில்லை. 
    இது என்ன வகை காதல். அவளுக்கும் உன்னை அடையாளம் தெரியாது. நீயும் அவளை காணாது. இந்த ஜென்ம ஆசை மட்டும் உங்களை சுற்றி வந்து அலைகிறதே... ஆசை பேராசை வைத்தாலே இப்படி தானோ... என்று தன் நிலையை கண்டு இளவழகன் அழ முற்பட்டான். ஆனால் இயலவில்லை. ஆன்மாவுக்கு அழகை வருமா...? கசந்த முறுவல் கடத்தினான். 

     "அபரஞ்சி அப்போ நேரில் வந்துட்டாளா..." என்று கேட்க பிரேக் கீரிச்சிட்டு நின்றது. 
     இளவழகன் கருப்புபுகை வலது புறம் சுருள் சுருளாக சென்று மறைந்தது. 

       இடத்தை பார்த்த பிறகே தங்கள் முட்டுக்காடு வந்து விட்டோம் என்பதை அறிந்தான்.

      மற்ற சுற்றுலா பயணிகள் தங்கள் நேரம் சொல்லிவிட்டு வண்டியில் வந்துவிடுவதாக சொல்லி புறப்பட்டனர். 

     காதலர்கள், இளம் தம்பதிகள், மற்றும் இரு குடும்ப உறவுகள் எல்லாம் சென்றதும் தனித்து மெர்லின் மட்டுமே இருந்தாள். 

     தான் கூட வரலாமா என்று கேட்க தான் சர்வேஷ் எண்ணியிருந்தான். ஆனால் மெர்லின் எப்படி எடுத்துக் கொள்வாளென அறிய முடியாதல்லவா. அதனால் தயங்க அவளோ, எக்ஸ்கியூஸ் மீ... சார்... நீங்க சோலோவா இருந்தா என்னோட ஜாயின் பண்ணிக்கறீங்களா...? தப்பா நினைக்காதீங்க. இங்க எனக்கு யாரையும் தெரியாது." என்றதும் சர்வேஷ் புன்னகையில் வர சம்மதமாக ஆமோதித்தான். 

     சர்வேஷ் மறுக்க மெர்லினே டிக்கெட் எடுக்க செய்திருந்தாள். 

     படகு குழாம் ஏறியமர்ந்து பாதி தூரம் படகு பயணித்தது. 

      "ரொம்ப டென்ஷனா... நேற்று மாதிரி பிளாக் மார்க் விழுந்துடுமோனு பயந்து நடக்கறீங்க" என்றாள் மெர்லின். 

     "கண்டுபிடிச்சிட்டீங்களா... இல்லையா பின்ன.... கெட்ட பெயர் எளியில் கிடைக்கும். ஆனா நல்ல பெயர் வாங்கிட்டோம். அதை மெயின்டெண்ட் பண்ண எத்தனை ரிஸ்க்குங்க..." 

      "சாரி... அந்த நபர் தான் அப்படி. நான் அதை வைத்து மற்றவரை முடிவு செய்ய மாட்டேன்" என்றதும் மெர்லின் அந்த உணவை கண்டு வாயை திறக்க, 

    "ஐஸ்கிரிம் சாப்பிடறீங்களா..." என்று கேட்டு வைத்தான். ஆம் என்பதாய் கூறியதும் வாங்க சென்றிருந்தான். 

    மெர்லின் அவன் செல்லும் திசையில்  பார்வையை பதித்தவள். இந்நேரம் வரை அவன் பெயரை அறியவில்லையே என்ற எண்ணங்கள் தாக்க?

      அவன் வந்ததும் "உங்க பெயர் என்ன?  வந்ததில இருந்து சார்னு கூப்பிட்டு இருக்கேன். நீங்களும் மேம் மேம்... என்று கூப்பிடறீங்க." என்று மெர்லின் கேட்டு ஒரு வாயை எடுத்து சுவைத்தாள். 

     "மெர்லின்... உங்க பெயர் எனக்கு நல்லாவே தெரியும். என்னோட அலுவலகத்துல டூரிஸ்ட் நேம்மை புக் பண்ணறச்ச அதில் கவனித்தேன். " என்று இவன் அறிவை வெளிப்படுத்த, அவளும் "சோ... நீங்க ஈஸ்வரன் சரியா....? என்றாள் அவளும். 

     "ஆமா...." என்றவன் சில நொடி பனிக்கூழை இரசித்து ஒரு வாய் சுவைத்து, "சர்வேஷ்வரன்.... அதான் என் பெயர். அதை... " என்று கூறிக்கொண்டிருக்க மெர்லின் அப்பெயரை கேட்டு ஐஸ்கப்பை தவற விட்டிருந்தாள். 

    "என்னாச்சு... மெர்லின்?" என்று சர்வேஷ் முன் வர, மெர்லின் அப்பெயரை "சர்...வேஷ்...வரன்..." என்று கூறியபடி தள்ளாடி சரிய துவங்கினாள். அவளின் ஹீல்ஸ் பாதுகை அவளை நீரில் மத்தியில் இருக்க தள்ளாட வைத்தது. 

    அப்பொழுது தான் படகு நடு பகுதிக்கு வந்து இருக்க, நின்றபடி பேசிய மெர்லின் தண்ணீரில் 'தொப்'பென விழுந்தாள்.

     பேசிக்கொண்டிருந்தவள் திடீரென தண்ணீரில் விழவும் சர்வேஷ்  சட்டென பயந்து போனான். 

     "மெர்லின்... மெர்லின்... ஹெல்ப்... அய்யோ... அபரஞ்சி விழுந்துட்டா... இளவழகா... என்ன பண்ற யவனரதி காப்பாற்றலையா" என்று கத்தி அவனுமே நீரில் குதித்தான்.

       நீரில் நீச்சல் தெரிந்த மெர்லின் இந்த அபரஞ்சி என்ற பெயரையும் இளவழகன்-யவனரதி என்ற பெயரையும் கேட்டு மேலும் அதிர்ந்தாள். 

     சந்வேஷ்வரன்.... என்னை அபரஞ்சினு சொல்லறார்... என்றவள் நீரில் தனது அபரஞ்சி என்ற பெயரை எண்ணியும் சர்வேஷ்வரன் என்ற அவனின் பெயரையும் எண்ணி  நீரோடு அவளது முன் ஜென்மத்தோடும் முழ்கினாள். 

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ். 

hi next flashback....
    

     

      

     
  

     
      
       

    
      

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...