சிரமமில்லாமல் சில கொலைகள்-10

 
 🩸-10

அபரஞ்சி-சர்வேஷ்வரன் காலம்.
    
        "ரஞ்சி... ஏய் ரஞ்சி...  இந்தா... நீ கேட்ட செம்பருத்தி பூ" என்று ஆடலரசன் அபரஞ்சியிடம் நீட்டினான்.

    "அச்சோ... இப்ப தான் (சர்வேஷ்வரன்)பெரியத்தான் கொடுத்துட்டுப் போனார். நீங்க இதை மல்லிகாவிடம் கொடுக்கறிங்களா...? அவளும் கேட்டுட்டு இருந்தா..." என்று பதில் தர ஆடலரசனுக்குக் கவலையாய்ப் போனது.

     "அப்படியா.... சரி நீயே கொடுத்துடு." என்று அவளிடமே நீட்ட, எதிர் வீட்டு மல்லிகா ஒடி வந்தாள்.

"செம்பருத்தி எனக்கா... தேங்க்ஸ் டி ரஞ்சி." என்று பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தை வரவேற்ற வண்ண கோலங்களை மேலும் அழகுப்படுத்த சாணத்தை உருட்டி நடுநயமாக வைத்து அதில் பூசணிப்பூவை வைத்துவிட்டு மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதன் மேலே செம்பருத்தி சொருகி முடித்தாள்.

     எல்லாம் முடித்து எட்டி நின்று அழகு பார்த்தாள் அபரஞ்சி. அவளின் மஞ்சள் முகமும், ஜிமிக்கி கம்பலும், சின்னதாய் கீறிட்டு வைத்த விபூதியும் அவளை மார்கழி மாதத்தில் ஆண்டாளாகவே தோற்றுவித்தது  சர்வேஷ்வரனுக்கு.

   பக்கத்து வீட்டு மாடியில் சூரியனை வணங்கியவன் தன் பெரிய மாமாவின் மகளை விழியகலாமல் கண்டு கொண்டிருந்தான்.

      "அபரஞ்சி.... அங்க என்ன பண்ற... கோவிலுக்கு நேரமாகுதோனோ." என்று (தபித்தாள்)அம்புஜம் குரல் கேட்க தேனீ போல ஓடினாள்.

      தளர பிண்ணி இடையில் சொருகிய தாவனியை சரிப்படுத்தி அபிராமி முன் வந்து பூக்கூடையோடு வந்தவளை அபிராமி மகளை எண்ணி பூரித்துப் போனார்.

     "என்னடி இது கோவிலுக்குப் போறோம்னு நேற்றே சொல்லிருந்தேன். தாமரை டிசைன் சங்கிலி கழுத்துல போட சொன்னேனா இல்லையா... வெறும் கழுத்தோட இருக்க?" என்று தன் கழுத்தில் இருந்த கோதுமை மாடல் செயினை மகளுக்கு அணிவித்து முடித்தாள் அம்புஜம்.

      பூக்கூடையை அபரஞ்சி எடுத்துக் கொண்டு அம்புஜத்துடன் முன்னே செல்ல, கிருஷ்ணன்(கிறிஸ்டோபர்) தன் இருசக்கர வாகனத்தில் புளியோதரை தூக்கோடு புறப்பட்டார்.

     இன்று தான் அபரஞ்சி கல்லூரிக்கு செல்ல போகின்றாள். முதல் நாள் என்று எதிர்பார்பபோடு கிளம்பினாள். அதிகாலை கோவிலுக்கு வந்து அர்ச்சனை முடித்துப் போக வேண்டும் எனத் தந்தை  கிருஷ்ணன் கூறவும் இங்கே நேரமானாலும் பரவாயில்லையென வந்திருக்கின்றாள்.

         தீபாராதனை காட்டி முடித்து விளக்கொளி பிரகாசத்தில் விபூதி பூசும் கணம் எதிரில் சர்வேஷ்வரன் நின்றிருந்தான்.

    "பெரியத்தான்.... நான் காலேஜ் சேர்ந்துட்டேன். இன்னிக்கு முதல் நாள் போயிட்டு வர்றேன்." என்றாள்.

     இதுவரை இமை மூடி இறைவனை நேசித்துக் கொண்டியிருந்தவளை கண் அகற்றாமல் பார்த்தவன் அவள் இவனைப் பார்த்ததும் இறைவனைப் பக்தியோடு வேண்டுவதாக நின்றான்.

     அபரஞ்சி குரல் கேட்டுத் திரும்புவதாகப் பார்த்து வைக்க, "ஆல் தி பெஸ்ட் மா." என்றவன் நேரத்தை பார்த்து "சீக்கிரம் போ... முதல் நாள் லேட்டா போகக்கூடாது" என்று கூறவும் தலையைத் தலையை அசைத்து கிளம்பினாள்.

      அவள் படிக்கட்டில் தாவி தாவி செல்ல அவளின் பாவாடை இளவரசியின் உடை போலத் தவழ்ந்து  சென்று கொண்டிருந்தது.

     சர்வேஷ்வரனுக்கு மணக்கண்ணில இளவரசியாகத் தோற்றுவித்து மறையவும், இப்படிக் காலேஜிக்கு தாவானியா... அத்தையிடம் சொல்லி சுடிதாரா மாற்றணும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

    தந்தையின் வண்டியில் ஏறியமர்ந்தவள், சர்வேஷ்வரனை கண்டு கையசைக்க, திகைத்து விழித்தவன் பக்கவாட்டில் அம்புஜம் "எனக்குக் காட்டறா சர்வேஷ்." என்றதும் இந்தக் கையசைப்பு தனக்கு இல்லையென அறிந்து அசடு வழிந்தான்.

     "என்ன சர்வேஷ... அவளுக்குக் காலேஜிக்குச் சீட் வாங்கிக் கொடுத்தது நீ தான். படிக்க வேண்டாம்னு நாங்க முடிவு பண்ணியிருக்க, அவளைப் படிக்க வைக்க ஆசைப்பட்டுக் காலேஜ் தேடி இங்க சேருங்கோனு சொன்னதும் நீ தான். இங்க அர்ச்சனை பண்ண வந்தா, அப்படியே ஒரு பிரசாதம் வழங்கிடுங்கோனு சொன்னதும் நீ தான்.

     இந்தக் காலேஜ் படிப்பு தேவையா ஈஸ்வரா..? மாமாவுக்கும் எனக்கும் உன் மனசுல அபரஞ்சி இருக்காயென்று நல்லவே தெரியும். பேசாம கல்யாணம் செய்துக்கிட்டு அவளை இதே மாதிரி உன் கண்ணக்குள்ள வைத்து பார்த்துக்க வேண்டியது தானே" என்று அம்புஜம் கூறவும் வெட்கம் கொண்டவன்,

    "அபரஞ்சியைப் பிடிக்கும் அத்தை. கல்யாணம்.... ம்ம்ம்... நேரம் வரும் அப்போ மாமாவிடம், அப்பா அம்மாவை கூட்டிட்டு வந்து கேட்பேன் அத்தை. அத்தை அவள் பாவாடை தாவனி தான் போடணுமா... இப்ப தான் சுடிதார் வந்துருக்கே." என்றான்.
 
    "வாங்கியிருக்கா... இன்னிக்கு முதல் நாள்னு அவங்க அப்பாவுக்காகப் போட்டுயிருக்கா." என்று அம்புஜம் மலர்ந்த முகமாக விளக்கவும்,

     "சரி அத்தை நான் கிளம்பறேன்" என வணக்கம் வைத்துக் கிளம்பினான்.

     மனதினுள் ' அந்தக் காலம் இல்லையே... அப்படியிருந்தா இப்பவே கல்யாணம் பண்ண, தட்டை தூக்கிட்டு வந்துயிருப்பேன் அத்தை. ஆனா அவளுக்குப் பதினெட்டு வயதே ஆரம்பிக்கலை. அதனால காலம் கனியணும்.'தன் வண்டியில் ஏறியவன் எண்ணம் இப்படித் தான் இருந்தது.

     அவனுக்குள் அபரஞ்சியை இன்னமும் அதிகமாகக் கவனித்துக் கொள். ஆபத்து நெருங்கும் காலமிது என்ற குரல் மட்டுமே கனவில் தோன்றும்.

      அதனால் சர்வஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள முயன்றான்.

        மாலை கல்லூரி முடித்து வந்த அபரஞ்சியைக் காண, ஆடலரசன் முன்டியடித்து வந்து நின்றான்.

      முகம் அலம்பி வந்து தாயிடம் மாலை சிற்றுண்டி கேட்டு நின்றாள்.
    அம்புஜமும் அதிரசமும் முறுக்கையும் தட்டில் வைத்து மகளுக்கும் ஆடலரசனுக்கும் நீட்டினார்.

    ஆடலரசன் சர்வேஷ்வரனின் தம்பி என்ற காரணத்தில் என்றுமே பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் ஆடலரசனுக்கு என்னவோ தன்னைத் தான் கவனிப்பதாக எண்ணிக்கொள்வான்.

     ஈரத்தோடு அதிரசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அபரஞ்சி, டிவி பெட்டியை திருகி கொண்டிருந்தாள். அந்தப் பட்டனில் திருக, பாடல் இசைந்து கொண்டிருந்தது. சரியாக வராத காரணத்தால் கேபிளை சரிசெய்து கொண்டு இருந்தாள்.

      ஆடலரசனோ டிவியில் ஓசையெழுப்பிய பாடலுக்கு ஏற்றவாறு  அவன் கண்கள் அபரஞ்சியின் தேகத்தை மொய்த்திருந்தது.

     அபரஞ்சி டிவி வராததைக் கண்டு, "சின்னத்தான் கொஞ்சம் ஆன்டனாவை திருப்பி விடேன்." என்று கேட்டதும்தன் பராக்கரத்தை காட்ட முறுக்கு ஒன்றை எடுத்து மாடிக்கு விரைந்தான்.

    அங்கிருந்து "ரஞ்சி டிவி தெரியுதா... இப்ப ரஞ்சி... க்ளியரா தெரியுதா ரஞ்சி." என்று ஏலமிட்டு கத்தவும் சர்வேஷ்வரன் பக்கத்து வீட்டில் அபரஞ்சி பெயர் என்றதும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான்.

   தன் தம்பி அபரஞ்சியை அழைப்பதை அறிந்து தன் வேஷ்டியை மடித்துக் கட்டி ஹாலுக்கு வர, "இவன் எதுக்கு அங்க போனான். அவளுக்கு டிவி தெரியலைனா என் பையன் வேலைக்காரனா... பாருங்க உங்க பெரிய தங்கை பண்ற வேலையை..." என்று பொரிந்தார் நிர்மலா. ஆடலரசன், சர்வேல்வரனின் தாய்.

    ஏற்கனவே தன்னை விடத் தன் தங்கை கணவனுக்கு அதிக நற்பெயரும் மரியாதையும் ஊரில் இருக்க, இதில் தன் மனையாளும் எப்பொழுதும் தந்தையான தன்னிடத்தை விடப் பிள்ளைகள் மாமன் மீது பற்று இருப்பதை அறிந்து கோபப்பட்டார்.

   "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவங்க ஒன்றும் இங்க வந்து அரசனை கூட்டிட்டு போய் வேலை வாங்கலை. இவன் தான் அங்க போய் இருக்கான்" என்று அதட்டலிட்டு அபரஞ்சி வீட்டுக்கு அடியெடுத்து வைத்தான்.

     டிவியை ஆப் செய்து முடிக்க, அதனை  திருகிக்கொண்டிருந்த அபரஞ்சியோ யார் அணைத்ததெனத் திரும்பி பார்க்க சர்வேஷ்வரன் என்றதும் சத்தமின்றி "டிவி... பார்க்கணும்." என்று சத்தமின்றி மிதமான குரலில் சொன்னாள்.

    அரசன் கீழே வர்றியா..." என்று அதட்டிவிட்டு, முதல் நாள் காலேஜ் எப்படி இருக்கு. பாடம் நடத்தினாங்களா..." என்று கேட்க அதற்குள் ஆடலரசன் வீட்டுக்கு வந்து ஏன் டிவி ஆப் பண்ணிட்ட அண்ணா." என்று கேட்கவும்

     "அம்மா கூப்பிட்டா... போய் இடியாப்பம் செய்ய மாவு அரைக்கக் கொடுத்தியே வாங்கிட்டு வா." என்று கட்டளையிட ஆடலரசன் அவ்விடம் விட்டு அகன்றான்.
 
     "வந்ததும் டிவியா அபரஞ்சி..." என்று மீண்டும் கேட்டான். 

      "பாட்டு கேட்க தான் ஆன் செய்தேன்." என்றவள் பார்வை நிமிர தயங்கியது.

     "இந்தா..." என்று நீட்ட நிமிர்ந்து பார்த்தவள். சர்வேஷ்வரன் எதையோ நீட்ட, "என்ன அது...?" என்றாள் அபரஞ்சி.

     "வாங்கிதான் பார்றேன்." என்றதும் அதை வாங்க முயன்றவள் அதிரசத்தை எங்கே வைக்க என்று இடத்தைத் தேட, அதை இங்க கொடு என்று வாங்கியவன் மற்றொரு கையில் அதனை நீட்டினான்.

     வாங்கிப் பிரித்துப் பார்க்க அதில் சின்னதாகக் கைக்கு அடக்கமாய் ரேடியோ இருக்க விழிவிரித்துக் கண்டாள்.

    "எனக்கா?" என்று கேட்க ஆம் என்பதாய் தலையசைத்து அதிரசத்தை உண்டான். ஏற்கனவே அபரஞ்சி பாதிக் கடித்த ரிலையில் இருந்தவை.

    "தேங்க்ஸ் பெரியத்தான்." என்றவள் அவள் கடித்த இனிப்பை இவன் விழுங்க கண்டு அதனை அவனுக்குச் சொல்லவும் முடியாது தடுமாறினாள்.

      அவள் அறிந்து விட்டதை எண்ணி முழுதாய் அதனை வாயில் போட்டு விட்டு, இனி ரேடியோ கேளு. டிவி வேண்டாம்." என்று புறப்பட ஆரம்பிக்கத் தேனீரை நீட்டினாள் அம்புஜம்.

      முறுக்கை வாயில் போட்டு இனிப்பு சுவையை மாற்றிக் கொண்டு தேனீர் அருந்த துவங்க, அம்புஜம் மகளின் புதிய பரிசை பார்த்து, சர்வேஷிடம் "இப்ப  அவசியமா சர்வேஷ். அண்ணி பார்த்தா இவளுக்கு எதுக்குப் பரிசுனு கத்துவாங்க." என்றதும் "அம்மாவுக்கு மெதுவா சொல்லிக்கலாம் அத்தை. நான் வர்றேன்" என்று புறப்பட்டான்.

     "அம்மா... நான் அப்பாவிடம் கேக்கறது எல்லாம் பெரியத்தானுக்கு எப்படித் தான் தெரியுமோ எனக்கு  பரிசா தருது." என்று கூறவும் அம்புஜம் சிரித்துக் கொண்டே, "நீ கத்தறது தான் ஊருக்கே கேட்குமே, பக்கத்துல இருக்கற உங்க மாமா வீட்டுக்கு கேட்காது." என்றார் அம்புஜம்.

    "நான் ஒன்றும் கத்தலை. எப்பவும் இந்தச் சர்வேஷ் தான் காதை கூர்த்தீட்டி என்னை நோட் பண்ணுது." என்று சத்தமே இல்லாமல் முனுமுனுக்க, அங்கே அம்புஜம் சமையல் அறைக்குச் சென்றிருக்க, சர்வேஷ் கதவின் மேல் பகுதியை இடித்திடுபவன் போல வந்து நின்றான்.

     அவனைச் சர்வேஷ் என்றழைத்து பேசியது செவியில் எட்டியிருக்குமோ என்னவோ குறும்பு பார்வை பார்த்தான்.

      "அபரஞ்சி.... இது பாடல் கேசட். கேட்டு பாரு..." கொடுத்துவிட்டு முறுவலித்துச் சென்றான்.

     அச்சோ பெயரை சொன்னதைக் கேட்டுட்டாங்க... என்று திருதிருவென விழித்தவள் அவனின் பார்வையில் சினம் காணாதது உணர்ந்து மகிழ்ந்தாள்.

     இரவு தந்தை கிருஷ்ணன் வந்து நிற்கவும் அபரஞ்சி அவளறையில், பாடலில் முழ்கி இருக்க, "யாரு சர்வேஷ் கொடுத்த பரிசா..." என்று அம்புஜத்திடம் கேட்டார்.

     "ஆமாங்க..." என்றவர் அபரஞ்சி காதில் பாடாது "சர்வேஷ் அபரஞ்சி மேல ப்ரியப்படறான். இரண்டு மாதத்ததில அபரஞ்சிக்கு பதினெட்டு ஆரம்பம் ஆகுதோனோ... அதுக்குப் பிறகு அண்ணாவிடம் பேசி நல்ல நாள், நேரம் பார்த்து அவனுக்கே கட்டிக் கொடுத்தா என்ன?" என்று கேட்டு வைத்தாள்.

     "விளையாடறியா... அம்புஜம். நாமளா கேட்டா அது நல்லதுக்கு இல்லை. சர்வேஷ் உங்கண்ணாவிடம் சம்மதம் வாங்கட்டும். பிறகு இதைப் பற்றிப் பேசலாம். அதுவரை அவன் விருப்பம் எல்லாம் அபரஞ்சிக்கு தெரியாமலே இருக்கட்டும். உங்கண்ணாவுக்கு அபரஞ்சியை விட உன் தங்கை கௌசல்யா மகள் மனிஷா தான் பிடிக்கும்.

காரணம் உனக்கே தெரியும். நான் அசல்ல வந்த மாப்பிள்ளை. ஆனா உன் தங்கை கொனௌசல்யாவுக்கு உங்க அண்ணி நிர்மலா வழியில் சித்தப்பா பையனை முடித்து இருக்காங்க.
 
    மனிஷானா இரண்டு பக்கமும் உறவுமுறை. அதனால சர்வேஷ் கட்டிக்கொடுக்க வாய்ப்பு அதிகம். அதனால அபரஞ்சியிடம் எதையும் பேசி குழப்பி விடாதே. அவள் எப்பவும் போல முயல் மாதிரி துள்ளிக்கிட்டு சந்தோஷமா இருந்தா போதும்." என்றார் கிருஷ்ணர்.

      "ஏங்க... சர்வேஷ் அபரஞ்சி ஜோடி, ஆடலரசன் வனிஷா ஜோடி என்று சரியா இருக்குமே. நாம ஏன் இப்படி யோசிக்கக் கூடாது." என்று கேட்டார்.

    "புரியாம பேசாதே அம்புஜம். உங்கண்ணாவுக்கு என்னைப் பிடிக்கலை. அது லேசா நல்லாவே தெரியுது. அதுவும் இல்லாம ஆடலரசன் வயசு என்ன அபரஞ்சி விட இரண்டு வயசு பெரியவன். சர்வேஷ் அப்படியில்லை. இருபத்திநாலு வயசு. கல்யாணம் கட்டிக்கிற வயசு. ஒருவேளை சர்வேஷ் வேற மணப்பெண்ணோ இல்லை வனிஷாவோ கட்டிக்கிட்டா கூட ஆடலரசனுக்கு நாம கட்டிக் கொடுக்க மாட்டோம். பெரியவன் விரும்பினான் தெரிஞ்சே கொடுக்க முடியாது. 

   நான் அபரஞ்சி கல்லூரி பக்கமா வீடு பார்த்துட்டு இருக்கேன். அங்க கிடைச்சா வீடு மாறிடலாம். எனக்குச் சர்வேஷை பிடிக்கும் ஆனா உங்கண்ணா அண்ணியை...? நாம ஒதுங்கி நிற்போம். நமக்கு நம்ம பொண்ணு முக்கியம்." என்று கிருஷ்ணன் சாப்பிட்டு உறங்க சென்றார்.

     அம்புஜத்திற்கும் கணவன் கூற்றில் மறுக்க முடியாது அமைதிக்காத்தாள்.
  
    நீர் அருந்தவந்த அபரஞ்சிக்கு தந்தை பேச்சு வைத்துச் சர்வேஷ் செயல்கள் புரிந்து இருந்தது.

-🩸🩸🩸🩸🩸

-பிரவீணா தங்கராஜ்.

    

   
     

   

   
   


   


      

    

    
    



    

     
  
    

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு