நீ என் முதல் காதல் -30

 அத்தியாயம்-30

   தங்கள் மகனும் மகளும் கூடவேயிருக்க ஆசைக்கொண்ட தாரிகாவிற்கு கரும்பு திண்ண கூலியா வாடி ராசாத்தி என்று கூப்பிட, பைரவும் மகன் வந்ததும் திருமணம் முடித்து இங்கே வந்ததால் கூடவே இருந்து திருமண ஜோடியை கண்குளிர பார்க்க ஆசைக் கொண்டார்கள்.

  அதன் காரணமாக மதிய விருந்து முடித்து ஸ்ரீநிதி ம்ருத்யுவை கையோடு அழைத்து சென்றனர். ரிதன்யா காலையில் அப்படியே பள்ளிக்கூடம் சென்றதால் ஸ்ரீவினிதா லலிதாவும் பேரன் பேத்தியோடு சென்றனர்.

      ஸ்ரீநிதியை தனியாக அறையில் நிற்க வைத்து, "இங்க பாரு நான் யாருனு எங்கப்பா அம்மாவிடம் சொல்லணும்னு தானே ஊருக்கு முன்ன கிளம்பற. ப்ளீஸ் அதுமாதிரி எதுவும் பண்ணிடாத. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். தயவு செய்து விவாகரத்து தந்துடறேன். நீ ஜீவி கூட வாழ்ந்துக்கோ" என்று ம்ருத்யுஜெயன் கூறவும் ஸ்ரீநிதியோ "கையை விடுடா" என்று கோபமாக மொழிந்துவிட்டு கடந்தாள்.
  
   ம்ருத்யுவிற்கு ஸ்ரீநிதி தன் பெற்றோரிடம் உரைத்திடுவாளென பயம் வந்தது சில நொடியே. அதன் பின் "எப்படியும் நீ உண்மையை சொன்னா ஷண்மதி அத்தை உன்னை உண்டில்லைனு ஆக்கிடுவாங்க. அதை மீறி சொன்னா யுகி மாமாவோட பாசத்தை இழந்துடுவ அது உனக்கே தெரியும். வீணா பிரச்சனையை பெரிசாக்காத ஸ்ரீ. அப்பறம் அத்தை உன் கண் எதிர்ல ரிதன்யாவை எனக்கு மேரேஜ் பண்ணிவைப்பாங்க." என்று பின் தொடர்ந்து கூற, நிதானமாய் நின்றாள்.

   "பார்டா மிரட்டறியா? என்னை மிரட்டறியா? ஷண்மதி பொண்ணுடா நான். எங்க எப்படி நடந்து, எதுக்கு எப்படி பழிவாங்கணும்னு எனக்கு தெரியும். என் காதலையா அழிச்ச." என்று இடையில் கைவைத்து பேசிவிட்டு ஆவேசமாய் தள்ளிவிட்டு வெளியேறியவள், தாரிகாவை கண்டு புன்னகை முகமாய் மாறினாள்.

    ம்ருத்யுவோ 'நீ மட்டும் என் அம்மா அப்பாவிடம் உண்மையை உளறிப்பாரு ஸ்ரீ. இந்த ம்ருத்யு யாருனு அப்ப தெரியும்' என்று எதுவந்தாலும் தானாக ஒரு கை பார்க்கும் எண்ணத்தில் மிதப்புடன் வந்தான்.

    என்ன தான் ஷண்மதி ரிதன்யாவை வைத்து பகடை ஆடாதே என்று உரைத்தாலும், ஸ்ரீநிதியை மிரட்ட ரிதன்யாவை தான் முன்னிருத்தும் நோக்கத்தில் இருந்தான்.

       ம்ருத்யு அவன் பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் தனது அறைக்கு ஓடினான்.

    ஷண்மதி அத்தையிடம் போட்டு கொடுக்க போனில் கைபரபரத்தது. ஆனால் ஒரு மனமோ 'வாழ்க்கையில இதுவரை பார்ன் வித் சில்வர் ஸ்பூனா இருந்து வளர்ந்துட்ட. இனி கஷ்டம் என்று வந்தா ஸ்ரீநிதியால தான். முன்ன ரொம்ப காதலிச்சிட்டேன். இனி காதலிக்கறேனோ இல்லையோ உன்னோட ஆட்டத்துக்கு நான் பதில் காய் நகர்த்தாம விடமாட்டேன் என்று மனதில் கருவினான். 

    ஸ்ரீநிதி மாமியார் வீட்டில் ராஜ போகத்தில், சிறிய கை கட்டால் தாளமிட்டபடி வீற்றியிருந்தாள்.

   ம்ருத்யுஜெயன் ஸ்ரீநிதியை கண்டால் மட்டும் பதிலுக்கு பதில் என்ற கோட்பாட்டில் வலம் வந்தான். மற்றபடி பைரவ் தாரிகாவோடு மிக நெருக்கமான அன்பை பகிர்ந்தான்.

   ம்ருத்யு தானாக நீங்க ஊட்டிவிடுங்கம்மா. நான் உங்க மடில படுத்துக்கறேன்மா. நான் உங்க பக்கத்துல உட்காரணும் அப்பா' என்று பள்ளி குழந்தையாக மாறினான்.

  உண்மையில் வலிக்கொண்ட மனதிற்கு 'எங்கே தான் இந்த வீட்டு பையன் இல்லையென்றால் அன்பு எட்டிக்காயாக மாறிடுமோயென பயந்து, உண்மை தெரியாத வரையில் பாசத்தை பெறமுற்பட்டான்.

    ம்ருத்யுவை பொறுத்தவரை எப்பொழுது வேண்டுமென்றாலும் லாவா உடையும். நெருப்பாறாய் பிரச்சனைகள் மனதை நிறைத்திடும். அதுவரை இதயத்தில் 'அன்பை யாசி' என்று சொல்லிக்கொண்டான். மதியம் முதல் இரவு வரை இந்த அலைப்பறை தொடர்ந்தான்.

   ஸ்ரீநிதி ஜுஸ் பருகி ஹாயாக இருந்தாள். நடுவில் மாத்திரை விழுங்கி கொண்டாள்.

    இரவு வந்ததும் தான் ஒரேயறையா என்று ம்ருத்யு சலித்தான்.
 
    அவனுக்கு ஸ்ரீநிதி ஏதேனும் பேசி தானும் வார்த்தை விட்டு அதனால் தன் பிறப்பு ரகசியம் பெற்றோர் அறிந்திடுவாரென அச்சம்.

   ஆனால் வேறு வழியில்லை. அவளோடு தான் தன் அறையை பகிர வேண்டும். திருமணமான தம்பதியை தாய் தந்தையரும் அருகே வைத்து அழகு பார்க்க மாட்டாரே.
  
    ஸ்ரீநிதி மேலே வந்தப்பின் தாரிகா தான் "நீ தூங்குடா கண்ணா ரூமுக்கு போ" என்று அனுப்பினார்கள்.

   ம்ருத்யுவிற்கு தன் நிலையை எண்ணி சிரிப்பு வந்தது. இதே முன்பானால் பாய்ந்து சென்று ஸ்ரீநிதியை வம்பிழுத்திருப்பான். அவள் மட்டும் ஜீவியை காதலிக்காமல் இருந்தால் மெத்தையில் கலவி பாடம் நடத்திருப்பான். தற்போது எதிலும் முன்னேற தடையிருந்தது.

   அனாதை என்ற பட்டம் சுமந்து நிற்க, ஸ்ரீநிதி ஏதேனும் கூறிடுவாளோயென்ற பயமே உயிரை இம்சித்தது.

     ஸ்ரீநிதி அழகால் இம்சித்திருக்கின்றாள். அறிவால் சின்ன சின்ன செய்கையால் பேச்சால். இன்று அதே ஸ்ரீநிதியை கண்டு தான் விலகும் அவலமா? என்று நொந்தான்.

    மெதுவாக படியில் ஏறி வந்தவனுக்கு 'நான் குப்பைத்தொட்டில கிடைச்சிருப்பேனோ? அப்பா அம்மா யாருனே தெரியாதோ? பச் என்று சோர்ந்து வந்து மெத்தையில் படுக்க, கீழேயிருந்தவரை முகம் சற்று பொலிவாக கவலை மறந்திருந்தான். இங்கு தன்னருகே வந்ததும் முகம் மாறுகிறதே என்று ஸ்ரீநிதியும் வருந்தினாள். என்னயிருந்தாலும் அவளின் தோழன் ம்ருத்யு வாடலாமா?

     "ம்ருத்யு பயப்படாத. நான் எதுவும் சொல்லமாட்டேன். நீ ரிலாக்ஸா இருடா" என்று தோளில் கைவைத்தாள்.

   அவள் கையை தட்டிவிட்டு, ''என்ன? நக்கல் பண்ணறியா? என் பிறப்பை அவமானப்படுத்தறியா? நீ அம்மா அப்பாவிடம் ஏதாவது சொன்ன நான் ரிதன்யாவை என்ன வேண்டுமென்றாலும் பண்ணுவேன். அப்பறம் ரிது நிலை சொல்லிக்கற மாதிரி இருக்காது. ஞாபகம் வச்சிக்கோ" என்று அனலாய் பேசினான்.

    ஸ்ரீநிதிக்கு வயிறு பற்றியது. ஆறுதலாக தான் அவள் பேசி தோளில் கையை வைத்தது. இவன் கிண்டலாகவே எடுத்து இப்படி தங்கையை வைத்து தன்னை கோபப்படுத்த, ஸ்ரீநிதிக்கு ரௌவுத்திரம் பொங்கியது.

   "சீ... ஆறுதலா பேசினா உன் புத்தி எப்படி ம்ருத்யு இப்படி போகுது. என் தங்கை என்ன உனக்கு வெல்லக்கட்டியா? பாவம் பார்த்தது என் தப்பு டா. உன்னையெல்லாம்" என்று தலையணையை தூரபோட்டு காலால் மிதித்து படுத்து கொண்டாள்.

     ம்ருத்யுவும் அவன் பக்கமிருந்த தலையணையை தூரவீசி மெத்தையில் படுத்தான். 

   இருவரில் ஒருவர் சாந்தக் குணமென்றாலும் பரவாயில்லை. இவன் வில்லனாக அவள் பிசாசாக கத்த எஞ்சியது உறக்கநிலை தான்.
  
   நள்ளிரவு தாண்டி தலையணை இல்லாத காரணத்தில் பார்டர் தாண்டியவர்களா, உறக்கத்தில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர்.

    ஸ்ரீநிதி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ம்ருத்யு தான் மூன்று மணி அளவில் விழித்தான்.

   ஸ்ரீநிதியை தழுவிய கையை எடுக்கவும் மனமின்றி அவளை வாகாக அணைத்து நெஞ்சோடு தைத்தான். உறக்கத்தில் அவளது இடையில் கைகளை கொண்டு சென்றவன் உடலை ஆரதழுவினான். ஸ்ரீநிதியை தனக்குள் பொத்தி வைக்க அவனுக்குள் மனம் சண்டிதனம் செய்தது.

என்ன நினைத்தானோ விடியும் வேளையில் கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

   ஸ்ரீநிதி எழுந்தப்பொழுது மணி ஆறரை இருக்கும். ம்ருத்யு அவ்விடத்தில் இல்லை.

   ஸ்ரீநிதியாக குளித்து முடித்து கீழே வர, ம்ருத்யு பைரவோட ஜாகிங் முடித்து வந்தான்.

    பைரவாக "என்ன ஸ்ரீ ஜாகிங் வர்றியா. உங்கத்தை எல்லாம் வரமாட்டா. நீ ம்ருத்யு என்றால் தினமும் போங்கம்மா. உடலுக்கு நல்லது. எனக்கு சுகர் வந்ததும் தான் நான் வாக்கிங் போறேன்." என்று பேசினார்.

   ஸ்ரீநிதி யார் பேசினா எனக்கு என்ன? நான் ஜாலியா இருக்கேன் என்று சிரித்தாள்.   

   ம்ருத்யு ஸ்ரீநிதியை கண்டு சத்தமில்லாமல் மாடிக்கு சென்றான்.

    நடைப்பயிற்சி செய்ததால் உடலில் நெற்றியில் ஆங்காங்கே வேர்வைத்துளிகள் மொட்டுவிட்டிருந்தது.

   குளிக்க சென்றவன் பாத்டப்பில் மூழ்கினான். அவனுக்குள் ஸ்ரீநிதி என்ன நினைக்கின்றாளென்ற ஒரு வெளிச்சமும் இல்லாமல் இருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

   "எவ்ளோ நேரம்டா. ம்ருத்யு வெளியே வா எனக்கு பசிக்குது கீழே போனா உன்னை தான் உங்கம்மா கேட்பாங்க. டேய் தூங்கிட்டியா" என்று தட்டினாள்.

   "இம்சை பிடிச்ச பிசாசு. நிம்மதியா குளிக்க விடறாளா. எப்படிதான் லவ் பண்ணினேனோ." என்று திட்டியபடி கதவை திறக்க, "ம்ருத்யு" என்று கதவை தட்ட கையால் ஓங்கி அவன் நெஞ்சில் அடித்தாள்.

  வெற்று மார்பில் ஈரத்தை கண்டவள், அவன் நின்ற கோலத்தில் திகைத்திட, "என்னடி வேண்டும்" என்று கடுகடுப்பாய் ஆரம்பிக்க நினைத்து ஸ்ரீநிதி முகம் கண்டதும் சாந்தமாய் மாறி கேட்டான்.

   அவனின் இந்த முகம் அவளை ஈர்க்க, அவன் வெற்றி மார்பும் டவலணிந்த நிலையும் கண்டு "ரெடியாகிட்டு வா பசிக்குது." என்று சென்றவள், மெத்தையில் அமர்ந்தாள்.

    ஆடை மாற்ற வேறிடம் செல்வானென்று அவள் எண்ணியிருக்க, இவள் எதிரே தான் மாற்றினான்.
   தலைகவிழுந்த நிலையில் மெத்தையில் இருந்த விரிப்பில் பூக்களின் அழகையும், அதன் மீதே கையால் தூரிகையின்றி கையால் வரைந்தாள்.

   ஹேர் டிரையர் சத்தம் கேட்டதும், சூடான காற்று அவள் பக்கம் வீச, அவன் புறம் திரும்பினாள்.

   அப்பொழுதும் சட்டை அணியாமல் கால்சட்டை அணிந்து நின்றவனின் கோலம் மனதை சஞ்சலம் செய்திட, "ஷர்ட் போடேன்." என்றாள்.

   "பொறுமையா போட்டுப்பேன்." என்றுரைத்தான்.

   "எனக்கு ஒரு மாதிரி இருக்குனு யோசிக்க மாட்டியா?" என்று பெண்ணவள் அரக்கி மகளாக கேட்டுவிட்டாள்.

  ம்ருத்யுவும், "ஓ... ஒரு மாதிரியிருக்கா? எனக்கும் நான் லண்டன்லயிருந்தப்ப நீ மணிக்கணக்கா போன்ல பேசறப்ப ஒரு மாதிரியா தான் இருக்கும்.
   அதுவும் வீடியோ கால்ல நெற்றி முடியை சுருட்டிட்டு, முகம் சுருங்கி பல்லால் உதட்டை கடிச்சி, ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்னு நேரம் காலம் பார்க்காம மிட்நைட் இயர்லி மார்னிங்னு பேசினியே அப்பவும் மார்க்கமா இருக்கும்.

   முக்கியமா வீடியோ கால் பேசிட்டு இருக்கறப்ப என் முன்னாடியே டிரஸ் கழட்டறவரை போனதும் என் மனசு எப்படி அலைபாய்ந்ததுனு எனக்கு தான் தெரியும்.

   ஏர்ப்போர்ட்ல எவன் பார்த்தா எனக்கென்னனு ஓடிவந்து ஹக் பண்ணினியே அப்ப என் ரத்தமெல்லாம் தாருமாறா ஓடுச்சு.
  அப்ப ஒரு மாதிரி இல்லை.

  நீ நெருங்கி வர்றப்ப எல்லாம் எனக்குள்ள ஒரு மாதிரி தான் இருக்கு.

   அப்ப எல்லாம் மொத்தமா பிரெண்ட் கஸின்னு சொல்லி என் மனசை துண்டு துண்டா நறுக்கிட்ட. இப்ப வந்து என்னடி பேசற" என்று தன் காதல் வலியை கொட்டித்தீர்த்தான்.

   அவன் அருகாமை பேச்சு இரண்டும் தன்னை வெகுவாய் பாதிக்க, அவனை தள்ளிவிட்டவள் "இப்படி செய்த நான் அத்தை மாமாவிடம் சொல்வேன்" என்று தன் இடையை பிடித்து பேசியவனிடமிருந்து வெளிறிவிட்டாள்.

   ம்ருத்யுவோ மூச்சுவாங்க சென்றவளிடம் "சொல்லு டி போ. என்னவேன்னா சொல்லு. எதையும் பேஸ் பண்ணற முடிவில தான் நானும் இருக்கேன்" என்ற கத்தினான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்







Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நீ என் முதல் காதல் (On Going)

பஞ்ச தந்திரம்-1