நீ என் முதல் காதல் -23

 அத்தியாயம்-23


ம்ருத்யு அவனுக்குண்டான பிசினஸ் என்று எதுவும் ஆரம்பிக்கவில்லை. அதனால் முழு நேரம் ஸ்ரீநிதி பின்னால் தான் சுற்றினான். 


"ஹனிமூன் போகலாமா ஸ்ரீ" என்று ஆசையாக கேட்டவனிடம் பதிலேதும் கொடுக்காமல் "நான் அப்பாவோட பிசினஸை கையிலெடுக்கலாம்னு இருக்கேன். உன்னை மாதிரி வெட்டியா இருக்க முடியாது இல்லையா? நான் ஷண்மதி பொண்ணாக்கும்" என்று திமிராக மொழிந்தாள். 

உண்மையில் ஸ்ரீநிதி பேசும் போது அவனது தன்மானம் உடைந்துக் கொண்டிருந்தது. ஆனால் தொழில் முக்கியமா? தன் வாழ்வு முக்கியமா என்று சிந்திக்கும் போது தன் வாழ்வை முதலில் சீர்படுத்தவே முடிவெடுத்தான். 


"ஹனிமூனாவது மண்ணாங்கட்டியாவதுனு பேசாம, எனக்கு அப்பா பிசினஸ் பார்க்கணும்னு பொறுப்பா பேசறியே ஸ்ரீகுட்டி. இது போதும்" என்று அதற்கும் தனக்கு ஏற்றது போல பேசினான். 


ஜீவியை புறம் தள்ளி திருமணத்தை நடத்தியாயிற்று. இனி கணவனாய் தக்க வைக்க வேண்டுமே. தாலி ஏறினால் கணவனே கண்கண்ட தெய்வமாக ஸ்ரீநிதி நிச்சயம் புராணம் பேச மாட்டாள். 


ஏமாற்றி என் மனதை வதைத்தாய் என்று கணவன் எதிரே காதலனுக்கு முத்தமிட்ட பிசாசு. 


ஏடாக்கூடமாக எதையாவது செய்தால்? 


ஏனோ ரிதன்யாவோடு நெருக்கமாய் நின்றது ஸ்ரீநிதிக்கு டாப் டூ பாட்டம் பற்றியதை இப்பொழுது எண்ணினாலும் அவளது முகப்பாவணைகளை கண்மூடி ரசித்தான்.


ரிதன்யாவுக்காக ஸ்ரீநிதி பதறியது அவனுக்கு நகைப்பாக இருந்தது. அடிக்கடி ஸ்ரீநிதியை பதற வைக்க ஆசைக்கொண்டான். 


அதற்கு வசதியாக ரிதன்யாவே அடிக்கடி இவர்கள் வீட்டை தேடி வந்தாள். முதல் காரணம் ரிதன்யா பள்ளி பக்கத்தில் தான். இரண்டாவது காரணம் அக்கா அத்தான் திருமணம் எப்படி போகின்றதோ? ஏதேனும் கோளாறாக இருந்தால் தந்தை தாயிடம் கூற வேண்டுமென்ற எண்ணம். 

என்ன தான் ம்ருத்யு அத்தான் 'நான் உங்க அக்காவை பார்த்துக்கறேன். யாரிடமும் சொல்லி பிரச்சனையை பெரிசாக்காதே' என்று கோரிக்கை வைத்தாலும் ரிதன்யாவுக்குள் அக்கா அத்தான் வாழ்வு சிறக்க நித்தமும் வேண்டுகின்றாள்.


மூன்றாவது ம்ருத்யு அத்தானை ரிதன்யாவுக்கும் பிடிக்கும். அவன் கணிவும், அக்கா மீது கொண்ட காதலும், ஜீவி மீது கொண்ட வெறுப்பும் ம்ருத்யுவை தேடி வந்து நலம் விசாரிக்க வைத்தது. இதை ம்ருத்யு தனக்கான ஆட்டத்தில் சாதகமாய் காய் நகர்த்தினான். 


ஸ்ரீநிதி தான் ஜீவியிடமும் பேசுவது குறைந்து போனது. அதோடு ரிதன்யா அடிக்கடி தன் வீட்டிற்கு வருவதும் பிடிக்கவில்லை. ம்ருத்யு எப்படி அவளை பயன்படுத்துகின்றானென்ற பயம். 


தன் வாழ்வு எப்படியோ? தங்கை வாழ்வும் கெடுக்க அவளுக்கு விருப்பமில்லை. என்னதான் ஷண்மதி போல திமிராக யோசித்தாலும் உடலில் ஓடுவது தந்தை யுகேந்திரன் ரத்தம். தன் உடன்பிறப்பிற்காக யோசிப்பதில் மூளை மழுங்கியது. 


அப்படி தான் ஸ்ரீநிதி வரும் நேரம் ம்ருத்யு ரிதன்யா இழைவதை கண்டாள். 


ஸ்ரீநிதிக்கு ஏற்கனவே ம்ருத்யு மீது கோபமிருக்க, தன் தங்கையை வேறு அவனை வட்டமிட செய்வேனென்று எகத்தாளமிட்டவனிடம் வழிகின்றாளே என்று கோபம் வந்து ரிதன்யாவை கண்டிக்கும் வழியும் தெரியாமல் அறைந்தாள். 


"ஏய் ஸ்ரீ ரிதுவை ஏன் அறைந்த?" என்று ம்ருத்யு கேட்டதும், "என் தங்கையை நான் அடிப்பேன். நீ போடா" என்று தள்ளிவிட்டாள்


"இங்க எதுக்கு வந்த?" என்று ஆவேசமாய் கேட்க, "நீ என் அக்கா. அக்கா வீட்டுக்கு தங்கை வரக்கூடாதா? நீ தான் வீட்லயேயில்லை. அதோட அம்மா அப்பா தான் ஸ்கூல் பக்கம் உன் வீடுனு அடிக்கடி எட்டிப்பார்க்க சொன்னாங்க. 

ஏன் பயமா? நீ ஒருத்தனை கிஸ் பண்ணியதை அம்மா அப்பாவிடம் சொல்லிடுவேன்னு? கவலைப்படாத அத்தான் சொல்ல வேண்டாம்னு கேட்டுட்டார். அதனால தப்பிச்சிட்ட. என்னவோ அத்தான் கூட சிரிச்சி பேசவே அடிக்கிற? உன்னை யார் அடிப்பதாம்?" என்று பேசவும் ஸ்ரீநிதிக்கு தங்கையை பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றானே எமபாதகன் என்று உள்ளுக்குள் திட்டினாள்.


ம்ருத்யு அதன் பின் "நீ வீட்டுக்கு போ ரிது" என்று அனுப்பி வைத்தான். 


ரிது அத்தான் சொல்வதை கேட்டு சென்றதும் "இன்னொரு முறை ரிதுவை அடிக்கிற வேலை வச்ச கையை உடைச்சிடுவேன். எனக்கு நீ எப்படியோ, அதே அளவு ரிதுவையும் பிடிக்கும். அவ என் மாமா பொண்ணு. என்னால அவ அடிவாங்கறதை பார்க்க முடியாது. அதை மீறி ஏதாவது செய்த" என்று ஆள்காட்டி விரலால் மிரட்டினான். 


ஸ்ரீநிதிக்கு ஒவ்வொரு முறையும் ம்ருத்யு மீது பழைய நட்பு துளிர்க்கவில்லை, மாறாக அவன் மீது விரிசல் விட்ட உறவாக நீண்டது. 


இதில் ம்ருத்யு ஒரே அறையில் தான் இருப்பேனென்று ஸ்ரீநிதி உறங்கியதும் பூனை போல வந்து அவளோடு ஒட்டி உரசி படுத்துக்கொண்டான். அதை போட்டோ வேறு எடுத்து ஸ்ரீநிதியின் போனிலிருந்து ஜீவிக்கு அனுப்பியிருந்தான். 


ஸ்ரீநிதி அடுத்த நாள் ஜீவியிடம் வெவ்வேறு வழியில் விளக்கமளிக்க, கேலாக்ஸை பால் தேனில் கலந்து சிரித்தபடி வேடிக்கை பார்ப்பான். 


ஒவ்வொரு நாளும் ஒரு குடைச்சல் தந்தான். 


இதில் தாரிகா பைரவ் வந்ததும் ஸ்ரீநிதி முகம் காட்டினாள். 


நீ என் தங்கையை வைத்து என்னை கிடுக்குபிடி செய்தால் உன் தாய் தந்தையை நான் அவமதிப்பேன் என்பது போல நடந்தாள். 


தன் தந்தையிடம் 'ஹனிமூன் போக வற்புறுத்தினா நான் இப்ப தானே லண்டன்லயிருந்து வந்தது. எனக்கு நம்ம வீட்ல தான் சொர்க்கம் என்று கூறவும் அந்த கோபத்தை உங்களிடம் காட்டறா' என்று சமாளித்தான். 


பைரவிற்கும் தாரிகாவிற்கும் "உங்க மாமா யுகி அத்தை ஷண்மதி ஸ்ரீநிதியை தங்க தட்டுல தாங்கினவன் டா. பில்லியன் மில்லியன் என்று மாப்பிள்ளையை தேடி கட்டி வைக்காம, சொந்தம் வேண்டும்னு அவளை உனக்கு கட்டிக் கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்டவளை முகம் வாடவிடாதடா. அவளுக்கு எந்த நாடு பிடிக்குதோ அங்க கூட்டிட்டு போடா" என்று தான் அறிவுரை கூறினார்கள். 


ம்ருத்யுவிற்கு தான் தன் தாய் தந்தை இந்தளவு தன்னவளை தாங்குகின்றார்கள். இவள் இப்படி என் மீது கொண்ட கோபத்தில் உதாசினம் செய்கின்றாளே என்று பெற்றோர் சென்றதும் அதை கூறி ஸ்ரீநிதியிடம் பேசினான். 


"உன் டேடி எப்பவுமே எங்க மம்மியோட வளர்ச்சியை வச்சி தான் மதிப்பார். அன்பு பாசம் காட்டலைனா ஒன்னும் பீல் பண்ண மாட்டார்." என்று அதற்கும் கத்தியால் குத்தும் விதமாக பேசினாள். 


"ஓ எங்கப்பா அன்பு பாசம் காட்டலை. உன்னை பணத்தை வச்சி தான் எடைப்போடறார்? நீ வர்றப்ப உனக்காக உனக்கு பிடிச்சதா வாங்கி தந்தது உன்னை எனக்கு கட்டிவைக்கிற சகுனி தனம்?" என்று நக்கலாய் கேட்டான். 


"உண்மையில சொத்து பத்து என்று எதுவுமில்லாதவளா இருந்தா உங்கப்பாவே தேடி வருவாரா?" என்று ஸ்ரீநிதி அப்பொழுதும் இகழ்ந்தாள். 


அவள் கூறுவதில் நியாயம் தெரிய, "எங்கப்பாவை விடு. நான் உன்னிடம் அன்பா தானே இருக்கேன். என்னை பிடிக்கலையா? 


கம்பெனிக்காக உன்னை இரண்டாம்பட்சமா யோசித்து காத்திருந்தவன் நல்லவன். 

அத்தையை சைட் அடிச்சான் ஓகே. அதுக்கு பிறகு உன்னை விரும்பறதை சொல்லறதுக்கு என்னவாம்.


சரி அதுவாது பரவாயில்லை. நிச்சயதார்த்தம் அப்ப எப்படி என் பக்கத்துல நிற்க வச்சான். நானா இருந்தா நான் விரும்பற பொண்ணை எவன் கூடவோ நிற்க வைக்க மாட்டேன். 

நிச்சயம் அப்ப சும்மா இருந்துட்டு கடைசி நேரம் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன வந்து உன்னை கட்டிக்க யோசிச்சா எனக்கு எப்படி இருக்கும். ஒன்னு அவன் என்னோட உன்னை ஜோடியா நிற்க வச்சிருக்க கூடாது. என் மனசுல ஆசையை பேராசையா மாத்திட்டான். 


இப்ப வந்து டிவோர்ஸ் கொடுக்க சொல்லற, அதுவும் மியூட்சுவலா? மியூட்சுவலா உன்னோட பெட்டை வேண்டும்னா ஷேர் பண்ணிக்கறேன். விவாகரத்து எல்லாம் கனவுலயும் தரமாட்டேன். 

அதைமீறி என்னையும் என் பேரண்ட்ஸையும் இரிட்டேட் பண்ணின? உன் தங்கை மேல கை வைக்க வேண்டியதாயிடும்." என்று தன் வலியை கூறிவிட்டான். 


ஸ்ரீநிதிக்கு அவன் பேச பேச பற்கடித்தாள்.


இவனை வேற விதத்துல ஹர்ட் பண்ணினா தான் வேலைக்கு ஆகும். முதல்ல ரிதன்யாவை இவனிடம் இருந்து விலக வைக்கணும். அடுத்து அப்பா அம்மாவிடம் இவனை நெகட்டிவா காட்டணும். அதுக்கு பிறகு இவனை வச்சி செய்யணும் என்று கருவியவளுக்கு சட்டென மின்னலாய் அப்பாவை விட அம்மா ஏன் ம்ருத்யு மீது அன்பாயிருக்காங்க? 


எனக்கு ஸ்கூல்ல பிராக்டில் லாஸ்ட் பீரியட் அப்போ நெருப்பு புகை பரவி இருந்தப்ப ம்ருத்யுவை தானே நலம் விசாரிச்சாங்க? அப்பா ம்ருத்யுவை பத்தி விசாரிச்சா ஒரு நியாயம் இருக்கு. தன் சொந்த அக்கா பையன் நலனும் முக்கியம். இந்த அம்மாவுக்கு நான் பிறந்து ஐந்து வருஷம் கழித்து தானே ம்ருத்யும் அப்பாவும் ஸ்கூல்ல சந்திச்சாங்க. அதுக்கு பிறகு தான் அப்ப விவாகரத்து பத்திரத்தை தூர போட்டுட்டு எனக்கு ஒரு பொண்ணு இருக்காளானு என்னை தேடி வந்தார். 

அம்மா ம்ருத்யு மேல அப்பயிருந்தே அன்பு செலுத்தியது எதுக்கு? நாத்தனார் பையன் என்று பாசமா? அப்படி தெரியலையே. பெரும்பாலும் அம்மா அத்தை வந்தாலும், நின்று நிதானமா கூட பேசமாட்டாங்க. ம்ருத்யு மேல பாசம் வைக்க வேறென்ன காரணம்? 


முதல்ல இதுக்கு அர்த்தம் தெரிந்துக்கணும், முன்ன அலட்சியமா விட்டிருக்கலாம். இந்தமுறை ம்ருத்யுவோட ஜாதகத்தையே புரட்டி போட்டு நோண்டி நொங்கெடுக்கணும். அதுக்கு பிறகு ஏன் எதுக்குனு காரணம் தெரிந்தப்பிறகு இந்த அரக்கி பொண்ணு யாருனு காட்டணும். என்னையே தங்கையை வச்சி மிரட்டறான். யார் மிரட்டறது யார் பயப்படறதுனு அப்ப தெரியும். என்னை காயப்படுத்தின அதோட பேலன்ஸ் மிச்சம் வைக்காம ரிவேன்ஜ் தர்றதை அவன் பார்த்து கதறணும். என் ஜீவியோட வாழ விடாம சதி செய்தவனுக்கு அதான் பனிஷ்மெண்ட். உன் மேல ஷணு அம்மாவுக்கு ஏன் ஸ்பெஷல் நேசம்னு கண்டுபிடிக்கிறேன்' என்று திட்டங்களை தீட்டியவளாய் யாரிடம் ம்ருத்யு ஜாதகத்தை அலசினால் சரிவருமென்று பார்த்தாள். முதலில் கண்முன் தோன்றிய ஆடு ஸ்ரீவினிதாவே. அதனால் நாளைக்கு ஸ்ரீவினிதாவிடம் சாதகமாய் காய் நகர்த்தும் முடிவோடு படுத்தாள். 


பக்கத்திலேயே தொப்பென்ற உருவம் விழுந்தது. தனியாக யார் என்ன என்று விளக்க வேண்டியதே இல்லை

. சாட்சாத் ம்ருத்யு தான் இம்சை கூட்ட வந்தான். 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 










Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1