நீ என் முதல் காதல்-9

அத்தியாயம்-9

ஷண்மதி ஸ்ரீநிதியை அடிக்கவும், "என் பொண்ணை ஏன்டி அடிக்கிற? ம்ருத்யுவுக்கு என்னாச்சுனு தெரியாம அவளும் தானே அட்மிட் பண்ணிருக்கா" என்று யுகேந்திரன் தன் மனைவி ஷண்மதியை கடிந்தான். 

"அவனுக்கு சின்னதுலயே ஹார்ட் பிராப்ளம் இருந்தது இவளுக்கு தெரியும் தானே. உங்க மக என்ன பண்ணி தொலைச்சா?" என்று ஸ்ரீநிதியை பஸ்பமாக முறைத்தாள் அன்னை.

"அவனுக்கு என்னாச்சுனு தெரியாம என்னை ஹார்ட் பண்ணாதிங்க. 

நீங்க எப்பவும் இப்படி தான் செய்யறிங்க" என்று ஸ்ரீநிதி அன்னையிடம் கத்திவிட்டு தந்தை பக்கம் சென்று அமர்ந்தாள். 

தாரிகாவோ ஸ்ரீநிதி அருகே அமர்ந்து "என்னடா ஆச்சு?" என்று சாந்தமாய் கேட்டார். 

"தாரிகா பையன் கண் முழிச்சா தெரியும். ஸ்ரீநிதியை தொல்லைப் பண்ணாத" என்று பைரவ் கூறவும் தாரிகா தலையாட்டி மகன் இருக்கும் அறையை நோக்கினாள். 

"இது இது தான் தாய்மை. தன் பையன் ஹாஸ்பிடல்ல இருந்தும் என்னை குற்றம் சாட்டாம பொறுமையா வந்து பேசறாங்க பாருங்க. 

பைரவ் மாமா பேசவும் அத்தை எதிர்த்து பேசாம அமைதியா மாறறாங்க பாருங்க. 
இது இது தான் உங்களிடம் சுத்தமா இல்லை." என்றவள் மருத்துவமனை என்றும் பாராமல் கத்தி கோபத்தின் மொத்த உருவமாய் வீற்றிருந்தாள். 

ஷண்மதியோ எங்கோ குட்டிநாய் குரைப்பது போல தோளைக்குலுக்கி, ம்ருத்யு இருந்த பக்கம் கண்களை செலுத்தினாள். 

கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்து, "ஒன்னுமில்லை அதிகபட்ச ஆனந்தம் இல்லை, அதிகபட்ச சோகம் இரண்டுல ஒன்னால பாதிக்கப்பட்டிருக்கார். 
பேஷண்ட் ஹிஸ்ட்ரி இப்ப தான் தெரியும். அவரோட பிறந்த கொஞ்ச நாள்ல இதயத்துல ஆப்ரேஷன் பண்ணியதா சொன்னார். 

இப்ப ரெக்கவர் ஆகிட்டார். பட் இதயம் சம்மந்தப்பட்டது இல்லையா அதனால மத்த டெஸ்ட் எடுத்து புல் டீடெயில் தேவைப்படுது. பேமிலி டாக்டர் இருந்தா கன்சல் பண்ணுங்க.

இப்ப அவர் ஓகே பாருங்க" என்று கூறி அகன்றார் அம்மருத்துவர். 

"அவனுக்கு எங்க சோகம் இருக்கப்போகுது. அளவுக்கு அதிகமா கல்யாண சந்தோஷமா இருக்கும். டேப்ளட் எடுத்துக்கிட்ட சரியாகிடும்." என்று பைரவ் முடிவுக்கட்ட, "ஆமாங்க.. கரெக்ட்." என்று தாரிகாவும் ஒத்து ஊதினார். 

ஷண்மதி அதன் பின் யுகி அருகே அமர, ஸ்ரீநிதியோ "டேடி வாங்க" என்று கைப்பிடித்து ம்ருத்யுவை பார்க்க அழைத்து சென்றாள். 

குடும்பமாய் சென்று ம்ருத்யுவை பார்த்து பேசிடவும், ம்ருத்யுவோ அச்சோ என்னால எல்லாரும் பயந்துட்டாங்க.' என்று வருந்தினான். 

"ம்ருத்யு இப்ப எப்படியிருக்கு?" என்று தாய் தந்தை கேட்க, "சாப்பிடாம வந்துட்டேன் அதனால மயங்கியிருப்பேன் அம்மா. மத்தபடி சேட் ஹாப்பி என்று எதுவும் இல்லை." என்று நிலைமையை சமாளித்தான். 

"எதையும் ரொம்ப மனசுல போட்டு உழப்பாத ம்ருத்யு. இன்பம் துன்பம் இரண்டையும் சரிசமமா பாரு. அதான் உனக்கு நல்லது. அப்பறம் பேசியபடி நிச்சயதார்த்தம் நடக்கட்டும். ஆகவேண்டியதை பாருங்க" என்று உரைத்தாள். 

ஸ்ரீவினிதாவோ ஷண்மதி கூறியதை போல ஆமோதித்தார். 

ஸ்ரீநிதியோ 'நிச்சயதார்த்தத்தை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டா. இனி இவ மாத்த மாட்டா. இந்த ஜீவி வேற ஏன் சட்டுனு கிளம்பிட்டானோ. முதல்ல அவனை உதைக்கணும். 

ஹாஸ்பிடல்ல அம்போனு விட்டுட்டு போயிட்டான். அம்மா வர்றப்ப இருந்தா இப்பவே பாதி பிரச்சனை தீர்வாகியிருக்கும். 

ஏன் சட்டுனு எஸ்ஸாகி ஓடினான்.' என்ற ஜீவியை தான் மனதில் கழுவி ஊற்றினாள். அந்த நேரம் அவன் ஓடவும் நிறுத்தி கேட்க தோன்றவில்லை. ம்ருத்யுவுக்கு என்னாகின்றதோ ஏதாகின்றதோ என்ற பயம் மட்டும் அவளை சூழ்ந்திருந்தது.

மற்றவர்கள் இந்த இரண்டு மணி நேரத்திற்கு மருத்துவமனையில் தங்கி சென்றிட பணத்தை கட்ட என்று பிஸியாக மாறினார்கள். 

ஸ்ரீநிதி ம்ருத்யு சேர்ந்து பேசட்டுமென்று தாரிகா இருவரையும் தனித்து விட்டு முன்னே சென்றார்கள்.

"சாரி ஸ்ரீ. நீ கூப்பிடவும் சட்டுனு சாப்பிடாம வந்துட்டேன். மயங்கிட்டேன். சின்னதுல செய்த ஆப்ரேஷன் வரை பேஷண்ட் ஹிஸ்ட்ரி வந்துடுச்சு." என்று அவளுக்காக பேசினான். 

"இட்ஸ் ஓகே ம்ருத்யு. நீ சாப்பிட்டியா இல்லையானு கூட நான் யோசிக்கலை. எழுந்தும் வரச்சொல்லிட்டேன். இந்த ஜீவி வேற ஓடிட்டான்." என்று முகம் வருத்தத்தை பிரதிபலித்தது. 

'என்னை விட அவன் ஓடியது வருத்தமா ஸ்ரீ' என்ற ம்ருத்யு மனம் வாடியது. 

"ம்ருத்யு நாம எங்கேஜ்மெண்ட் பண்ணிப்போம்" என்று கூறவும் ம்ருத்யு சட்டென்று பெண்ணவளை ஏறிட்டான். 

"யா எங்கேஜ்மெண்ட் பண்ணிப்போம். மேரேஜிக்கு டைம் இருக்கும் இல்லையா? அதுக்குள்ள வேற ஐடியா யோசிப்போம். யார்கண்டா ஜீவி அதுக்குள்ள ப்ரேவா முடிவெடுக்கலாம்" என்று கூறவும் ம்ருத்யுவுக்கோ "உனக்கு எப்படி தோணுதோ அப்படி முடிவெடு. நீ என்ன சொன்னாலும் நான் கண்ணை மூடி ஓகே சொல்லறேன்." என்று தன் வாழ்க்கையையே தாரைவார்த்தான்.

"ம்ருத்யு என் சுயநலத்துக்கு உன்னை யூஸ் பண்ணறதா நினைக்காத. நிஜமாவே எனக்கு என்ன செய்யறதுனு தெரியலைடா. என் டியரெஸ்ட் பிரெண்ட் என்ற உரிமையில தான் உன்னிடம் இத்தனை சுயநலமா பேசறது. நிஜமாவே காயப்படுத்தினா என்னை மன்னிச்சிடு." என்றுரைத்தவளை கண்டு அணைத்து அப்படியெல்லாம் இல்லைடி என்று கூற உள்ளம் துடித்தது. 

"அத்தை அடிச்சாங்களா? நீ ஏன் அத்தையை எதிர்த்து எதிர்த்து பேசற? முன்னல்லாம் நீ இப்படியில்லை. 
என்ன காரணம்?" என்று லிப்டில் இறங்கி வரும்போது கேட்டான்.

மருத்துவ வளாகத்தில் தாய் தந்தையரோ, அத்தை மாமா பாட்டி வந்ததோ சுத்தமாய் மறந்துப்போனான். 

பெண்ணவள் அருகாமையில் அவளை மட்டும் எண்ணியது அவன் மனம். 

"அம்மா தான் உலகம் என்று வாழ்ந்தேன். அவ சொல்லறது தான் வேதம்னு கண்ணை மூடிட்டு நம்பினேன். 
ஆனா எப்ப நான் அப்பாவோட கேரக்டரை நேர்ல பார்த்து வளரவும் மொத்தமா என் எண்ணம் மாறிடுச்சு. 

எப்ப பாரு அப்பாவை டவுன் பண்ணறாங்க. அவங்க மேஜர் ரோல் செய்யணும்னு வீட்ல மனைவியா மருமகளா அம்மாவா எந்தவிதத்திலும் நடக்கலை. 

அதோட முக்கியமா அவங்களுக்கு என்னைவிட உன்னை பிடிக்கும், ரிதன்யாவை பிடிக்கும். 

ரிதன்யா பிறந்ததிலருந்து என் லைப்பை நானே பார்த்துக்கறேன். இதெல்லாம் அவங்க மேல வெறுப்பை உண்டாக்குது." என்றப்போது கீழே தரைத்தளத்தில் வந்து சேர்ந்தாள். மேலும் பேசுவது தடைப்பட்டது.

ஷண்மதியோ "எதுல வந்த?" என்று கேட்டார். அப்பொழுது தான் வரும் பொழுது ஜீவி காரில் வந்ததே நினைவு வர, "அது ஒருத்தர் கொண்டு வந்து உதவினார்." என்று கூறினாள். 

"ஓகே. ம்ருத்யு மாமா அத்தை கூட போகட்டும். நீ என்னோட வர்றியா உங்கப்பாவோட வர்றியா?" என்று கராராக கேட்டாள். 

"ஆல்வேஸ் டேடி" என்று ஸ்ரீநிதி கூற, ஷண்மதியோ தோளைக்குலுக்கி கண்ணாடி அணிந்து ஸ்ரீவினிதாவை லலிதாவை அழைத்து திரும்பினாள்.

காரில் வரும் போது "எதுக்கு ஷணு ஸ்ரீ குட்டியை அடிச்ச? ஏதாவது செய்து கல்யாணத்துக்கு நோ சொல்லிடப்போறா?" என்று லலிதா பயந்தார்.

"அவளை எல்லாம் எப்பவோ அடிச்சு வளர்த்திருக்க வேண்டும் அத்த. இப்பவும் கண்டிக்கலை அதோட வீரியம் ம்ருத்யு தான் சமாளிக்கணும்." என்று புகைந்தாள். 

"ம்ருத்யுவுக்கு உடல்நிலை சரியில்லாம மயங்கிட்டான் என்றதும் உடம்பு பதறிடுச்சு." என்று ஸ்ரீவினிதா தன் மனதில் பட்டதை கூறவும் ஷண்மதியோ "எமனிடம் போராடி உயிர் மீண்டு வந்தவன் அத்தை. அவ்ளோ குயிக்கா அவனை தளர விடமாட்டேன். அது என் மகளாவே இருந்தாலும் புத்திபுகட்டி முடிப்பேன்" என்றவள் முகம் கடினமாய் மாறியது. 

ஸ்ரீநிதியோ தந்தை காரில் "ஏன் டேடி இப்படியிருக்க? அவ வந்து அறைந்தா, ஏன்டி என் பொண்ணை அடிச்சேன்னு நீ ஒரு அறை அவளை அறைஞ்சிருக்க வேண்டாமா? கைகட்டி வேடிக்கை பார்க்கறிங்க. என்னை விட அவளை தான் உங்களுக்கு பிடிக்குமா? ஹாஸ்பிடல்ல அழுகையா வந்துச்சு. அவயெதிர்ல அழறது எனக்கு பிடிக்காம இருந்தேன்." என்று மனைவியை பற்றி ஸ்ரீநிதி பேச பேச யுகேந்திரன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். 

"எனக்கு நீயும் முக்கியம் என் மனைவியும் முக்கியம் ஸ்ரீநிதி. ம்ருத்யு உயிருக்கு ஏதாவது என்றால் உங்கம்மா சும்மாயிருக்க மாட்டா. அவனுக்கு என்ன ஏதோனு பதட்டம். ஏன் இப்ப உனக்கு ஏதாவது என்றாலும் உங்கம்மா துடிப்பா இல்லையா? அம்மாவை மரியாதையில்லாம பேசாத. அவளை தப்பா நினைக்காத." என்று யுகேந்திரன் தன்மையாக விளக்கினார். 

"எனக்குன்னா பிசினஸ் முடிஞ்சு ஆடி அசைந்து வருவா டேடி. ஐ நோ." என்று என்றோ நடந்த ஒரு நாள் கூத்தை மனதில் வைத்து பேசவும் யுகேந்திரன் வாதிடவில்லை. 

ஸ்ரீநிதியிடம் ஷண்மதிக்கான கோபங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்த நாட்கள் அது. அதனால் மனைவியிடமே பேசி ஸ்ரீநிதியிடம் கலந்து பேச சொல்வோமென விட்டுவிட்டார். 

வீட்டுக்கு சென்றதும் அவரவர் கூட்டில் தஞ்சமாக, ஜீவிக்கு போன் மூலமாக அழைத்தாள் ஸ்ரீநிதி. 

"இப்ப உன் அத்தை பையன் பெட்டரா ஸ்ரீநிதி" என்று ஜீவி கேட்டதும், ஸ்ரீநிதியோ "அவன் ஃபைன். அவனுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடக்கபோகுது. அதுக்கு பிறகு மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணுவாங்க. அதுவரை உனக்கு டைம் இருக்கு. நீ யோசித்து முடிவெடு ஜீவி உனக்கு நான் வேண்டுமா வேண்டாமா என்று." என மடை திறந்தவளாக பேசினாள். 

"தேங்க்யூ தேங்க்யூ ஸ்ரீநிதி. இன்பிட்வின்ல கம்பெனி வந்துடும். நாமளா ரிஜிஸ்டர் மேரேஜ் கூட பண்ணிக்கலாம்." என்று ஆசையாக பதிலுரைத்து நிம்மதியடைந்தான்.

"எங்கம்மா வர்றாங்க என்றதும் ஏன் விட்டுட்டு ஓடின? எனக்கு முதல்ல அதுக்கு காரணம் சொல்லு ஜீவி. எனக்கு நீ அப்படி ஓடவும் எனக்குள்ள முதல் முறை ஏன் உன்னை காதலிச்சோம்னு பீல் பண்ண வைக்கிற மாதிரி பண்ணிட்ட" என்று குரலே நெருப்பை விழுங்கியவளாக பேச வைத்தது. 

"சாரி ஸ்ரீநிதி. அதுக்கொரு காரணம் இருக்கும்மா." என்று ஜீவி மனதார தவிக்க, "என்ன காரணம் என்று கேட்டேன்." என கடினமாய் கேட்டாள். 

ஜீவிக்கு அதை கூற தயக்கம் வந்தது. "நாளைக்கு எப்பவும் மீட் பண்ணற பப்ல சொல்லறேன். என்னை தப்பா எடுத்துக்காத" என்று தயங்கி கூறினான். 

"நாளைக்கு பப்ல சந்திக்கலாம் ஜீவி" என்று சட்டென துண்டித்து கொண்டாள். 

ஜீவி போனை வெறித்து எப்படியும் சொல்லாமல் இருக்கவே முடியாதே என்று இப்பொழுதே துவண்டான். 

ஸ்ரீநிதியோ நிச்சயத்தை தவிர்க்க முடியாததால் திருமணத்தை தள்ளி போடும் சிந்தனையை அகற்றி ஷண்மதி அடித்தால் அதற்கான கோபத்தோடு ஆங்காரமாக நடையிட்டாள். 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1