Posts

வண்ண நிலவுகள்

வண்ண நிலவுகள் இருக்கின்றதா என்கின்றாள் குட்டி மகள் அவள் கைகளில் பத்து விரலின் நகங்களுக்கு பத்து வண்ணங்களை  பூசியதை அறியாமல்                     - பிரவீணா தங்கராஜ் .

உனக்குள் ஓராயிரம் கவிதை -காதல் பிதற்றல் 40

உன்னை பற்றி என்னும் தலைப்பில் ஒரு கவிதை தானே எழுது என்கிறாய் உனக்குள் ஓராயிரம் கவிதை தலைப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல்...              -- பிரவீணா தங்கராஜ் .

நிலவு

Image
காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே ! கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்... நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்... மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம் உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி  பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே ! பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே ! பசலை நோயில் மெலிந்து தேய்பவளே...  கற்கண்டு நட்சத்திரம் உண்ணாமல் வாடுவது ஏனோ ?! தனியே தன்னந்தனியே தாரகை திங்களே ! தலைவனை தேடியே தவிக்கின்றாயோ... களங்கமில்லா மேனிக்  கொண்ட நிறைமதியே மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு தூரமோ ?!  தங்கநிலவாய் ஜொலிக்கின்றாய் நீரில் உன்னை அள்ளி பருகும் ஆடவன் யாரோ ... கவிஞனுக்கும் காதலுக்கும் நீயொரு காட்சி நிலா எனக்கு மட்டும் தோள்கொடுக்கும் நட்பிலா .                                           -- பிரவீணா தங்கராஜ் .  

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே என்று சொல்வதும் நானே தான் உன்னில் உயிராய் கலந்து உந்தன் சுவாசத்தை சுவாசித்து உனக்காக வாழும் பேதையே தான் விழிகளில் மோதி வானத்தில் பறந்து விரக்தியில் தவிப்பதும் நானே தான் வானவில்லின் வர்ணமாய் வந்தவனே வசந்தத்தை எனக்காய் தந்தவனே வாஞ்சையோடு சொல்வதும் நானே தான் உன் அன்பை சிறுகச் சிறுக சேர்த்து நம் காதலை பருகியவளும் நானே தான் எங்கோ கேட்கும் பாடலுக்கு என் இதயத்தில் வாசம் கொள்ளும் உன்னை எண்ணி மருகுவதும் நானே தான் உப்பில்லா உணவும் ருசிக்க செய்யும் உன் நினைவு கோப்பைகளை எனக்குள்ளே தேக்கி வைப்பதும் நானே தான் நித்திரையில் கள்வனாய் நீ புகுந்திட நித்தமும் அக்கனவு வேண்டுவதும் நானே தான் என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்கின்றேன் நம் காதல் வேரூன்றி இருக்கும் ஆழம் உணர்ந்தே ஏனெனில் நம் உண்மை காதல் அழியாதே...                             -- பிரவீணா தங்கராஜ் .

காதலின் கோட்பாடுயவை

உந்தன் இதயத்தை என்னுடையது என்றும் எந்தன் இதயத்தை உன்னுடையது என்றும் மாற்றிக் கொள் நான் தொலைத்து விட்டதாக எண்ணி தேடிக் கொண்டு தவிக்கின்றேன் நீ திருடி விட்டதாய் எண்ணி பொத்தி வைத்துக் கொள் பார்க்கும் மற்றவர்களுக்கு நான் யாரோவென கடந்துவிட நீ யாரோவென காட்டிக் கொள் ஏனென்றால் காதலின் கோட்பாடுயவை. - பிரவீணா தங்கராஜ்.

கண்ணாமூச்சி ஏனடா

ஒவ்வொரு முறையும் கோகுலக் கண்ணனே உன் பாதம் பதித்து தான் வரவேற்கிறேன் நீயோ ஒவ்வொரு முறையும் மாயக் கண்ணனாய் மறைந்துக் கண்ணாமூச்சி களித்து விளையாடுகின்றாய் பேதை நெஞ்சம் உந்தன் வருகைகாக மட்டுமல்ல இராதை வந்தாலும் கொண்டாடி மகிழக் காத்திருக்கின்றேன் கண்ணனாய் கண்ணாமூச்சியாடுகிறாய் இராதையாய் வர மறுத்து ஏய்த்திட இந்த தேவகி மட்டும் அத்திரு மரத்தை சுற்றியே வலம் வருகிறேன் விழி நீர் மட்டும் துணையாக.          - பிரவீணா தங்கராஜ்.

என் உலகத்தில்...

பம்பரமாக சுற்றிக் கொண்டுயிருக்கின்றேன் அடுதல் அறையில் சாட்டையாக சொற்கள் மட்டுமே உப்பு சப்பில்லாதக் குறைபாட்டை உணர்த்தும் நீ சுவையாக செய்யும் பொழுது மட்டும் சொற்களில் சுவைக் கூட்டுவதை மறந்துவிடுகிறாய் சரி அதனால் என்ன விடு சிறிதே சிரித்துப் பேசி இளைப்பாறலாம் இளநகையாய் முத்துக்களா சிதறிவிடும் முகநூலில் திறந்து படித்து மென்நகைச் செய்கின்றாய் வியப்பைக் காட்டுகிறாய் சோகமெனில் உச்சுக் கொட்டி வருந்துகிறாய் உன் கைக்கு எட்டிய தூரத்தில் தான் கட்டியவள் இருப்பதை மறந்து அவளை கவலை கொள்ள வைத்தே காதல் கீதம் இசைக்க மறுத்து மறுக்கிறாய் அலுவலகம் எனும் தினப் போருக்கு முதுகில் சுமந்த பையோடு மடிக்கணினியை உன் காதலியாய் சுமக்கின்றாய் போதும் சற்றே என் உலகுக்கு வா கடுகு தாளித்து போடுகையில் எண்ணெய்பட்ட கைகளுக்கு உச்சு கொட்டி செல் நிற்காமல் ஓடும் கடிகாரமாக உன் செல்ல மகளின் நிகருக்கு நானும் மாறுவதை கண்டு வியப்பு காட்டு பள்ளி செல்ல தயாராகும் மற்றொரு வாலுக்கு தேவையானதை தேடி எடுத்து இயம்பும் போது ஒரு அடடா என்று மென்புன்னகை செய் கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களில் சிறு இடை பற்றி இதழ் ம

மனம்

அதிகாலை எழுந்ததும் அலைவரிசையில் மாற்றி மாற்றி இமைக்காது தன் ராசிக்கு சொல்லும் கூற்றையெல்லாம் செவி சாய்த்து ஏற்று உடுத்துமாடை கூட செவ்வனே அதன் சொல்படியே அணிந்து நாள் பார்த்து நேரம் பார்த்து வாஸ்துபடிக் கட்டிய வீட்டிலிருந்து நல்லநேரம் பார்த்தே வெளியேறும் அச்சமயம் எங்கிருந்தோ தன் துணையை தேடி ஓடிய பல்லியின் மதில் பிடி தளர்ந்து வெண் நரையில் கருமை சாயம் பூசிய தலையில் சரியாக விழ பல்லி பலன்களில் சற்று அஞ்சியே இதுவரை கட்டிக்காத்த ஜோதிடம் வாஸ்துகளெல்லாம் பொய்யாக மாற கடவதென புலம்பி ஒரே நொடியில் மாறுகின்றது மனம். - பிரவீணா தங்கராஜ்.

மணல்கள் கற்கண்டாய்

Image
கடற்கரை மணல்கள் கற்கண்டாய் மாறிட கடலலையோ தேனாய் மிதக்க இயற்கையோ குழப்பத்தில் சிந்திக்க எனக்கு ஐயமில்லை மகளே உன் கைப்பட்டு விளையாடிய தருணமது. - பிரவீணா தங்கராஜ்.

சிலந்தியே...! - காதல் பிதற்றல் 39

எல்லா மூலையிலும் தூசு தட்டி அவனை நீக்கிட தான் பார்க்கின்றேன் என்னையும் அறியாது மீண்டும் அதேயிடத்தில் எல்லா மூலையிலும் வலைப்பின்னி நடுவே மன்னனாய் அமர்ந்து கர்வத்தோடு சீண்டுகின்றாய் வலைப்பின்னும் சிலந்தியே...! - பிரவீணா தங்கராஜ்.