Posts

நீயே தானா ...?!

Image
கீச் கீச் யென ஆடிடும் அவ்வூஞ்சலில் சில்லறை சிதறிவிழும் அளவிற்கு குட்டிமகள் சிரிக்க அவள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் தெரிந்தே தப்பும்தவறுமாய் நீண்ட பதில் அளித்து கோமாளியாய் நிற்பது சாட்சாத் எப்பொழுதும் என்னிடம் மிடுக்கோடு ஹைக்கூ போன்று சுருங்க பேசிடும் நீயே தானா ...?!                      -- பிரவீணா தங்கராஜ் 

கொசு

ஒரு வருடத்திற்கு இருமுறை ரத்ததானம் என்று சொல்லி வையுங்கள் தினமும் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களிடம் .😉😬              பிரவீணா தங்கராஜ் .

வாழ்க்கை யென்னும் கல்வி

Image
எட்டு மைல்கள் ஏழு மைல்கள் நடந்தே புத்தகப் பையை முதுகில் சுமந்து நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து மணி அடித்து முடித்தப் பின்னே சுவரின் மறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில் ஆசிரியர்கள் பார்க்காதப் போது சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில் பையோடுக் கலந்து விட்டு மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில் இருந்த நிறைவு இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில் ஏதோவொன்று மனதை நிறைய விடாது குறைந்தே இருக்கின்றது வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள் கற்றிடாது செல்வதால்...                    -- பிரவீணா தங்கராஜ் .

குளிர்சாதனப் பெட்டி

அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி திறக்கப்படவில்லை தொலைக்காட்சியில் இன்று சுட்டி டிவி இடம் பெறவில்லை குளியலறையில் குழாய் நீர் சொட்டியபடி மூடவில்லை வாயிலில் கழற்றிய பாதணிகள் ஜோடிகள் மாறமலும் கலைந்திடாது இருந்தன இந்நேரம் யூகித்தது சரி குட்டி மகள் அவள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .                     -- பிரவீணா தங்கராஜ் .

👴 முதுமையின் ஏக்கம் 👵

தோல் சுருக்கத்தினுள் ஆரம்பமாயின  முத்தாய் நீண்டது பிணிகளின் எழுச்சி நேரங்களை வெறுமைகள் புசித்து கொண்டிருந்தன சோதனைகளாய் மைந்தர்கள் தூரதேசம் சென்றதும் உயிர் சுவாசமான பேரன் பேத்திகளை கொஞ்சிட மாதயொரு முறை கூட கிட்டாத ஏழ்மையானேன் தனிமை சிறையில் பேச்சுக்கு ஆளின்றி முதுமையின் ஏக்கம் தொடர்கிறது மரணம்வரை                              --பிரவீணா தங்கராஜ் . 

இன்று

நேற்றைய என்னை ரசித்துப் பார்த்து நினைவுக் கூர்ந்து இனிய நேரங்களாக - அதில் தொலைந்து போகின்றனர் நாளைய என்னை யோசித்து யோசித்து தவித்துத் தவித்து அதிலும் என்னை தொலைத்தே போகின்றனர் இன்றைய என்னை மட்டும் சலித்துக் கொண்டே நகர்கின்றனர்                  -- பிரவீணா தங்கராஜ் .

வாசலிலே ஏங்கும் மங்கையிவள்

Image
நினைவுகளின் ஜாலத்தில் நேரங்களோடிட  நீங்காத நினைவுகள் முழ்குதிங்கே பனிப்பொழியும் நிலவின் சுடரொளியில்  கனியிதழில் கவிதைப் பேசிடவே  கண்களில் மையல் தேக்கி வைத்து  கைவிளக்கு ஏந்திய காரிகையிவள்  மல்லிகை மணம் வீசி உன் வரவை  வாசலிலே விழிப் பதித்து வருடிகின்றாள் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்லியது பழமை

Image
பாங்காய் கட்டுக்கட்டிய பாய்களை பதவிசனமாய் சும்மாட்டில் அமர்ந்தி கூவிக் கூவி விற்று முடித்து கூடுகள் தேடி ஓட்ட மெடுக்க பாய்கள் விற்று வந்த பணம் - பிள்ளையின் படிப்புக்கும் பழங்கஞ்சிக்கும் போதுமானதாயிருக்க வீதியென்ன வீடுயென்ன யென்பதுயெல்லாம் உழைக்கும் கரங்களுக்கும் தெரிவதில்லை பாதணியில்லை இந்த பாதங்களுக்கு பஞ்சு மெத்தையில் கிட்டிராத நித்திரை கோரைப்பாயி சுமந்தவளிடம் மண்டியிட்டே பங்கமின்றி துயில் கொள்கின்றது . கோரைப்பாயின் மேற்படுக்க நோய் நொடிகள் இங்கில்லை பந்திப்பாயில் பகிர்ந்து உண்ண பாசமாதில் நீண்டு போக பங்கமின்றி வாழ்ந்திடவே சொல்லியது பழமை               -- பிரவீணா தங்கராஜ் .

👽வேற்று கிரகத்தில் ஒரு நாள்👽

Image
அமைதி தேடி அழ மூச்செடுத்து அசைந்தாடும் ஊஞ்சலிலே வேம்பு மரத்தடியில் ஆடுகையிலே ஆகாய மேலிருந்து வெள்ளி தட்டொன்று பறந்து வர விழியிடுக்கி கண்டு வியந்தேன் அருகே வர வர அது பெரிதானது அக்கணம் உணர்ந்தேன் அது பறக்கும் தட்டென்று வாயில் பசைப்போல பேச்சற்று நிற்கையிலே உள்ளே செல்ல உள்மனம் உந்தியது மெல்ல நடந்தே உள்ளே செல்ல மேலே எழும்பி 'ஜிவ்'வென பறந்தது யாருமில்லையாயென சுற்றி முற்றி பார்க்கையிலே புருவமில்லா ஒற்றை விழியொன்று இருபக்க பட்டாம்பூச்சி கொடுக்கு நீட்டி பாதரச நிறத்தையொத்த உருவமொன்று அருகே நின்றது குறுந்தகட்டின் கீச்சு குரலில் புரியா மொழியில் ஏதோ சொல்ல விழிபிதுங்கி நின்றேன் நானும் பதட்டம் வேண்டாம் பாதகம் செய்யும் மனித ரகமில்லை யென்றது தேன்தமிழில் தமிழ் கேட்டு முகம் மலர்ந்தேன் 'பாதகம் செய்யும் மனிதரகமில்லை' யென்ற வார்த்தையில் அகம் சுணக்கம் அடைந்தேன் உணவு உண்ணாது தலை சுற்றல் நிகழ மூன்று கையுடைய கிரகவாசி மாத்திரையும் கருப்பு நிற பானத்தையும் தயங்கிய பெற்று உண்டு முடித்தேன் அட்டைப்பெட்டியாய் தொங்க விடப்பட்ட வீடு அங்கே நீரில்லை நிலமில்லை

நல்லதே நினை

Image
முடக்கி விடவில்லை உலகம் என்னை முடங்க விடவில்லை நானும் மனதை எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம் என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .              -- பிரவீணா தங்கராஜ் .

கூண்டுக் கிளி இவள்

Image
மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க  மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?                               --  பிரவீணா தங்கராஜ் . 

🐦சிட்டுக்குருவியின் ஏக்கம்🐦

தென்றலது தாலாட்ட தேகமது சிலிர்க்க நெல்வயலின் மத்தியிலே கிணற்றுநீர் தத்தளிக்க பகலவனதில் பிம்பம் பார்க்க ஓடும் நீர் தொட்டில் மஞ்சள் உரசி கதைப்பேசி குளித்திடும் மங்கைகள் கால்வாய் வரப்பில் நீர் சலசலக்க வெள்ளி முத்துக்களாய் நீர்குமிழ்கள் வெளிப்பட ஈச்சமரத்தினிலே இசைத்தபடி நான் இருந்தேன் எந்தன் வீட்டை நானே கட்டி இயற்கையோடு வாழ்ந்திருந்தேன் உந்தன் சுயநல எண்ணத்தால் குளிர் சாதன கருவியில் இடுக்கில் குப்பையாய் கட்டியப்படி ஏதோ பெயருக்கு வீடென அமைத்து எந்தன் மிஞ்சியிருக்கும் இனத்தை கா(கை)ப்பாற்றிக் கொள்கின்றேன் உன்னை போலவே என்னையும் செயற்கையாய் வாழ வைத்தாயே...  மனிதா...!                      -- பிரவீணா தங்கராஜ் .

தனித்தீவாய் உறவுகள்

Image
பட்சணங்கள் செய்து வைத்து பண்டிகையாய் வீடு நிறைந்து கள்வனாய் பண்டம் எடுக்க கண்ணனாய் மாறினேன் உறவுகள் படைச் சூழ உணர்வுகள் களிப்பைத் தர இன்பமாய் வாழ்ந்திருந்தோம் கூட்டுக் குடும்பமென ஒன்றுப் பெற்று உறவுத் தொலைத்து பண்டிகையும் பொலிவிழந்து தனித்தீவாய் தனிக் குடும்பம் ஆனதிங்கே                               -- பிரவீணா தங்கராஜ் .

நீயின்றி இருக்கும் நான்

விழிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த வையகத்தை நெஞ்சில் ஏதுமின்றி கரம் பற்றியபடி கதைப்பேசி கதைத்திடவே காதலன் ஒருவன் வருவனென்று காத்திருந்த கண்கள் பூத்துவிட்டது இளநரை வந்து இதயம் கனத்து இளவரசன் தேடிடும் முதிர்கன்னியாய் இப்படி இப்படியாய் தினம் நடக்கும் காட்சி பொருளாய் யொரு நாடகம் கானகத்தில் இருப்பதாய் தோன்றுதடா நெஞ்சம் கானகத்து குயிலாய் நீ வர மறுப்பது ஏனோ தேனீ சுவைக்காதா பூவின் மகரந்தம் நீரில் ஒட்டாத தாமரை இலை தென்றல் தீண்டாத ஜன்னல் கதவு ஓவியம் வரையாத துரிகையாக தனிமையில் நீயின்றி இருக்கும் நான்                             -- பிரவீணா தங்கராஜ் .

👅 நாக்கு👅

Image
அரையடி யுருவம் நீ ... ஆறடியை விழுங்கும் மாயம் நீ ... அமிர்தமாய் பேசிய நொடி நஞ்சாகவும் மாறிடும் ஜாலமும் நீ ... நொடிப்பொழுது மாறிடும்  உனக்கு அறுசுவை அறியும் பிராப்தம் தான் குழந்தை மனம் கொண்டு குழைவாய் பேசிடுவாய் ... கயவர்கள் கண்டு எதிர்க்க அரணாய் காத்திடுவாய் ... எடுத்துதெறிந்து பேசிட எங்கு தான் கற்றாயோ ...? எண்ணிலடங்கா ரணங்களை சொற்களில் வைத்தாயோ ... சாட்டையாய் சுழற்றியடிக்கும் வித்தை சாகசம் தான் உன் சிறுயுருவில் அனலாய் கொட்டிய வார்த்தை அள்ளிட முடியாது சிறு இதயம் துடிக்கும் சத்தம் உன்னில் சொல்லவில்லையா ? கூர் வாள் பேச்சு வேண்டாமே கூடுதல் ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவுப் பேச்சு போதுமே .                             --பிரவீணா தங்கராஜ் .